By Village Missionary Movement
Friday, 17-Jun-2022இன்றைய தியானம்(Tamil) 18-06-2022
நோக்கிப்பார்த்து அமைதலாயிரு
“...எனக்கு உண்டான என் துக்கத்துக்குச் சரியான துக்கம் உண்டோ என்று என்னை நோக்கிப் பாருங்கள்.” - புலம்பல் 1:12
இயேசு கிறிஸ்து சிலுவையில் செயல்படுத்திக் காட்டிய அன்பிற்கு ஈடாக வேறு அன்பு ஏதும் உண்டோ? பாரச்சிலுவையையும், அவருடைய இரத்தத்தையும், ஆணிகள் கடாவப்பட்ட கை – கால்களையும், சிரசின் முள் முடியையும், அவரின் வேதனைகளையும் பார்க்கும்போது, நம் வாழ்வில் வரும் எந்த ஒரு கஷ்டமும், துன்பமும், அதற்கு ஈடாக நிற்க முடியாது! ரூபன் என்ற பாடலாசிரியர் எழுதிய “அவரை நோக்கிப்பார்” என்ற பாடல் சிலுவையில் இயேசு அனுபவித்த பாடுகளை சித்தரித்து நம்முடைய பாடுகளில் அவரையே நோக்கிப் பார்த்து, அமர்ந்திருக்க வேண்டும் என்பதாக
முடிகின்றது.
மேலை நாடுகளில் பிறந்து வசதியான வாழ்க்கை வாழ்ந்து, கல்வி கற்றுச் சிறந்த ரிச்சர்ட் வில்லியம், டேவிட் லிவிங்ஸ்டன், கிரகாம் ஸ்டெயின்ஸ், ஹட்சன் டெய்லர், ராக்லேண்ட், வில்லியம் கேரி... என இன்னும் பல மிஷனெரிகள் தங்கள் சொந்த நாட்டையும் வசதியான வாழ்க்கை முறையையும் விட்டு வந்தனர். அது மட்டுமல்லாது கடும் உஷ்ண கால நிலையை அனுபவித்து, மனைவி – பிள்ளைகளை சாகக் கொடுத்து, இல்லற வாழ்க்கையையும் துறந்து, ஒரு நாளில் 4 மணி நேரம் கூட சரியான தூக்கமின்றி, சரியான உணவு கிடைக்காமல், தங்களின் கடைசி மூச்சுவரை சுவிசேஷத்துக்காகவே தங்கள் உயிரை ஈந்தனர்.
வேதத்தில் யோசேப்பைக் குறித்து நாம் பார்க்கும்போது, அவர் கடந்து வந்த பாதையில் எவ்வளவு அமைதியாயிருந்தார் என்பதை அறிவோம். சொந்த சகோதரர்களால் பகைக்கப்பட்டு, குழியில் தூக்கிப் போடப்பட்டு, விற்கப்பட்டு, அநியாயமாய் குற்றம் சாட்டப்பட்டு எல்லா நிலையிலும், அவர் மனரம்மியமாய் இருந்தார். பவுலும், “எல்லா நிலையிலும் மனரம்மியமாய் இருக்கக் கற்றுக் கொண்டேன்.” எனக் கூறுகிறார்.
ஆனால் நாம் பல நேரங்களில், நமக்கு வரும் துன்பங்களில் துவண்டு, “எனக்கு மட்டும் ஏன்” என்று முறுமுறுக்கின்றோம். நம் வாழ்வில் நடக்கும் அனைத்து காரியங்களையும் தேவன் அறிவார். அவர் அனுமதியில்லாமல் ஒன்றும் நம்மை நெருங்க முடியாது. இதை உணர்ந்து, துன்பத்தின் மத்தியில் நாம் அமைதியாயிருந்து, அவரையே நோக்கிப் பார்க்கும்போது, அவர் நிச்சயம் அற்புதங்களை செய்வார். அவருடைய பாடுகளோடு நமது காரியங்களை ஒப்பிடும்போது இது ஒன்றுமில்லை என உணர்வோம். இவற்றை தாங்கவும், தப்பிச்செல்லவும் வழியுண்டு என்பதை அறிந்து தேவனை துதிக்க முடியும். அது மட்டுமல்லாது, வாடாத நித்திய ஜீவகிரீடத்தையும் பெற்றுக்கொள்வோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
- Mrs.ஜாஸ்மின் பால்
ஜெபக்குறிப்பு:
மிஷனெரிகளை தாங்கும் பாங்காளார்களை புதியதாக தேவன் எழுப்பித் தர ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250