By Village Missionary Movement
Monday, 06-Jun-2022இன்றைய தியானம்(Tamil) 06-06-2022
நீங்கள் அபிகாயிலா?
“உன் மனதில் சீக்கிரமாய்க் கோபங்கொள்ளதே; மூடரின் நெஞ்சிலே கோபம் குடிகொள்ளும்.” – பிரசங்கி 7:9
கோழிக்கோடு பகுதியில் ஒரு கணவனும், மனைவியும் மற்றும் இரு பெண்பிள்ளைகள் வசித்து வந்தனர். கணவர் குடிகாரர் மட்டுமல்லாது, கோபக்காரரும் கூட. வீட்டில் உள்ளவர்கள் என்ன செய்தாலும் கோபித்துக் கொள்வார். ஒரு நாள் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தவர், வீட்டில் ஒலித்துக்கொண்டிருந்த ஆத்மீக யாத்திரை என்று கிறிஸ்தவ ரேடியோ நிகழ்ச்சியைக் கேட்டவுடன், அதிலும் குறிப்பாக மது அருந்துவதின் விளைவுகளைக் கேட்டவுடன், மிகுந்த கோபமடைந்தவராய் அந்த வானொலிப் பெட்டியை உடைத்து நொறுக்கினார். அவர் மனைவி, பிள்ளைகளுக்கோ உள்ளம் நொறுங்கிவிட்டது. ஆனால் மிகுந்த அமைதி காத்தனர். இவருக்கோ மனதில் கொஞ்சம் ஈரம் இருந்ததினால், அடுத்த நாளே ஒரு வானொலிப்பெட்டி வாங்கி வந்து, அவரே அனுதினமும் தேவ வசனத்தைக் கேட்க ஆரம்பித்தார். கொஞ்சம் கொஞ்சமாக அவர் இயேசுவை விசுவாசித்து, சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார். என்ன ஆச்சரியம்! இயேசு அவர் உள்ளத்தில் பெருகப் பெருக, அந்த குடிப்பழக்கம் அவரைவிட்டு முற்றிலும் நீங்கி இன்றும் அவர் தேவ பிள்ளையாக வாழ்ந்து வருகிறார்
வேதத்தில் (1சாமுவேல் 25:3-ல்) நாபாலின் மனைவி அபிகாயில் ஒரு புத்திசாலியான பெண்மணி. ஆனால் நாபாலோ ஒரு முரடன் என்று வாசிக்கிறோம். தாவீதினிடத்திலிருந்து பாதுகாப்பையும், நன்மையையும் பெற்ற நாபால், அவனுக்கு நன்மைக்குப் பதிலாக தீமை செய்தான். தாவீது என்பவன் யார்? என்று அவன் சொன்னதைக் கேட்ட தாவீதோ, நானூறு பேருடன் நாபாலை எதிர்கொள்ளப் புறப்பட்டான். இந்த செய்தியை தனது வேலைக்காரன் மூலமாக அறிந்த அபிகாயில் தீவிரமாக செயல்படுகிறாள். தனது தாழ்மையினாலும் பணிவான வார்த்தைகளினாலும், தாவீதின் கை ரத்தம் சிந்தாதபடி, அவனுடைய கோபத்தைக் கரையப் பண்ணினாள். (வச.25:33).
பிரியமான வாலிபப் பிள்ளைகளே, கோபம் எவ்வளவு மோசமானது என்பது உங்களுக்கு தெரியும். குடித்து விட்டு வந்த தனது கணவனை, அவர் மனைவி கோபத்தோடு எதிர்கொண்டிருந்தால், ஒருவேளை குடும்பம் நொறுங்கிப் போயிருக்கும்! மாறாக, அவள் பொறுமையோடு, கனிவோடு, தன் கணவர் இரட்சிக்கப்பட காரணமாயிருந்தாள்! அபிகாயிலோ தாவீதின் கோபம் நாபாலின் மேல் எழும்பக் கேட்டவுடன், “நல்லா வேணும் இந்த பேலியாளின் மகனுக்கு” என்று அமைதியாக இருந்திருந்தால், ஒருவேளை அபிகாயிலும் உயிரோடு இருப்பது கேள்விக்குறிதான். ஞானமாக யோசித்து தீவிரமாகச் செயல்பட்ட அபிகாயில் தாவீதின் கோபத்தைக் கரையப்பண்ணினது மட்டுமல்லாமல், அவனால் ஆசீர்வதிக்கப்படுகிறாள். கோபத்தைக் கரையப் பண்ணுகிற, அந்தப் புத்தியுள்ள அபிகாயிலைப் போல இருக்க பிரயாசப்படுங்களேன்!
- Mrs.ஹெப்சி மனுவேல் ஜெயராஜ்
ஜெபக்குறிப்பு:
கிராமிய விடுமுறை வேதாகமப் பள்ளியின் மூலம், கிராமங்களில் சந்திக்கப்பட்ட சிறுபிள்ளைகள் கர்த்தருக்குள் முடிவுபரியந்தம் நிலைத்திருக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250