By Village Missionary Movement
Saturday, 04-Jun-2022இன்றைய தியானம்(Tamil) 04-06-2022
மறுபடியும் வருவேன்
“....நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.” – யோவான் 14:3
கோடைக் காலத்தில் ஒரு தகப்பனும், அவரது ஒன்பது வயது மகளும் உற்சாகமாக கடலில் நீந்திக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று பெரிய அலைகள் வந்து அவர்களை தாக்கி, சிறு பெண்ணை அவரை விட்டுச் சிறிது தூரம் அடித்துச் சென்றன. எவ்வளவோ முயற்சி செய்தும் தகப்பனால் அவளை நெருங்க முடியவில்லை, பிறரின் உதவியே தேவைப்பட்டது. உடனே, “மகளே பயப்படாமல் கட்டையை மட்டும் இறுகப் பிடித்துக் கொண்டு நீந்து, நான் உன்னைக் காப்பாற்ற சீக்கிரம் வருவேன்” என்று சத்தமிட்டு சொன்னார். சிறிது நேரத்தில் படகோடும், மீட்புக் குழுவினரோடும் திரும்பி வந்து பார்த்த போது மகளை காணாமல் அதிர்ச்சியடைந்தார். சிறு பெண்ணோ கடலிலே தொலை தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டிருந்தாள். நீண்ட நேரம் தேடுதலுக்குப் பிறகு அவளை கண்டுபிடித்தனர். அவள் தன் தகப்பன் சொன்னது போலவே கட்டையை பிடித்துக் கொண்டு அமைதியாக மிதந்து கொண்டிருந்தாள். அவளை படகில் ஏற்றி, “எப்படி உன்னால் தனியாக கடலில் நீந்த முடிந்தது? நம்பிக்கையை இழந்தாயா?” என்று கேட்டார்கள் அதற்கு அவள் “என் தகப்பன் என்ன செய்ய சொன்னாரோ அதையே செய்தேன். உன்னை காப்பாற்ற சீக்கிரம் வருவேன்” என்று அவர் சொன்ன வார்த்தைகளே என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தன. அவர் வார்த்தைகளே நான் நம்பிக்கையோடு இருக்க உதவி செய்தது” என்றாள்
இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறித்து தீர்க்கதரிசனங்கள் பல சொல்லப் பட்டிருந்தாலும், அதை அறிந்த யூத ஜனங்களே, மேசியாவாக அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. அதுபோல இயேசு கிறிஸ்துவே தம் உயிர்த்தெழுதலைக் குறித்து, பல முறை சொல்லி இருந்தாலும் அவருடைய சீடர்களே, அதை அறிந்து கொள்ளாமல் இருந்தனர். நாம் இவர்களைப் போல இருந்து விடக்கூடாது. நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் “நான் மறுபடியும் வந்து உங்களை என்னோடு சேர்த்துக் கொள்ளுவேன்” என்று சொல்லிச் சென்றிருக்கிறார். பஞ்சமும் கொள்ளை நோய்களும் யுத்தங்களும் அழிவுகளும் உலகையே கலக்கிக் கொண்டிருக்கின்றன. இவைகளுக்கு நடுவில் இயேசுவை நம்பி, இரட்சிப்பு என்னும் கட்டையைப் பிடித்து, மிதந்து கொண்டிருக்கும் ஒவ்வாருவரையும் அவர் அழைத்துச்செல்ல, நடுவானில் வருவார் நிச்சயமாக வந்து நம்மை அழைத்துச் செல்வார்.
மன பாரங்களினாலும், பிரச்சனைகளினாலும், போராட்டங்களினாலும், நாம் சோர்ந்து போகிற போது, “நான் மறுபடியும் வருவேன்” என்ற நேசரின் சத்தம் நம்மை ஆற்றட்டும். அந்த சிறுபெண் அந்த கட்டையைப் பிடித்துக் கொண்டு, எப்படி தன் தகப்பனுக்காக காத்திருந்தாளோ, அப்படியே நாமும் தேவனுக்காக காத்திருப்போம். வருவேன் என்று சொன்னவர் நிச்சயம் வருவார். நம் கண்ணீரெல்லாம் துடைப்பார். தம்மோடு நம்மை சேர்த்துக் கொள்வார். அவரை எதிர்கொள்ள ஆயத்தமாகுவோம்!.
- Bro.ஹனீஷ் சாமுவேல்
ஜெபக்குறிப்பு:
ஊழியத்தை ஜெபத்தாலும், தியாகமான காணிக்கையினாலும் தாங்கும் பங்காளர்களை தேவன் ஆசீர்வதிக்க, இன்னும் புதிய பங்காளர்களை தேவன் எழுப்பித்தர ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250