Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 30-05-2022
Share:

By Village Missionary Movement

Sunday, 29-May-2022

இன்றைய தியானம்(Tamil) 30-05-2022

 

கீழ்ப்படியாதே 

 

“தகப்பனையாவது, தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல…” – மத்தேயு 10:37 

 

“அட, என்ன தலைப்பு! கீழ்ப்படிதல்தானே கிறிஸ்துவத்தின் முதல்படி என போதிக்க கேட்டிருக்கிறோம்” என இத்தலைப்பை பார்த்தவுடன் நீங்கள் கேட்கலாம். வேதத்தை நாம் கருத்தாய் தியானித்துப் பார்த்தால் சில வேளைகளில் சில விஷயங்களில் கிறிஸ்தவன் கீழ்ப்படியக்கூடாது என்று வேதம் பட்டியலிடுகிறது, அவைகளில் சிலவற்றை இன்று சிந்திப்போம்.

 

பெற்றோருக்கு: 10 கட்டளைகளில் பிரதான கட்டளை பெற்றோரை கனப்படுத்துவதாகும். அப்படி கனம் பண்ணும் போது நாம் ஆசீர்வதிக்கப்படுவோம் என்ற வாக்குத்தத்தமும் கொடுக்கப்பட்டுள்ளது, பெற்றோரை கனப்படுத்தாமல், அற்பமாய் எண்ணுகிறவர்களுடைய கண்களை நதியின் காகங்கள் பிடுங்கும் என வேதம் எச்சரிக்கிறது.

 

அதே நேரத்தில் ஒருவன் இயேசு கிறிஸ்துவின் சீஷனாக மாற விரும்பும்போது பெற்றோர் தடை செய்தாலோ, ஆண்டவர் ஒரு விசுவாசியை ஊழியத்திற்கு அழைக்கும்போது பெற்றோர் தடுத்தாலோ அவர்களுக்கு கீழ்ப்படியக் கூடாது என்று வேதம் போதிக்கிறது ( மத்தேயு 10:37) அதே நேரத்தில் இரட்சிக்கப்பட்ட ஒரு விசுவாசிக்கு இரட்சிக்கப்படாத மற்றொரு நபருடன் திருமணம் செய்ய பெற்றோர் ஏற்பாடு செய்யும் போதும் கீழ்ப்படிய வேண்டிய அவசியமில்லை. (2கொரி.6:14) வாலிபரே, பெற்றோரை கனம்பண்ணுங்கள், சிறப்பாய் கவனியுங்கள். ஆனால் வேதத்திற்கு புறம்பான காரியங்களில், பெற்றோரை விட தேவனின் வார்த்தைக்கே முதலிடம் கொடுங்கள், அதற்காக பெற்றோரிடம் கடினமாகவோ, எரிந்து விழுந்தோ காரியத்தை சொல்லாமல் அன்பாக எடுத்துக்கூறி அவர்களுக்குரிய கனத்தைக் கொடுங்கள்.

 

அரசாங்கத்திற்கு: ரோமர்.13ல் அரசாங்கத்தின் ஒவ்வொரு சட்டதிட்டங்களுக்கும் நாம் கீழ்ப்படிய வேண்டுமென்று வேதம் போதிக்கிறது. அதேபோல் அரசாங்கம் விதிக்கும் எல்லா வரிகளையும் நாம் கட்டாயமாக செலுத்த வேண்டும், அதே நேரத்தில் உலகமெங்கும் போய் சுவிசேஷத்தை பிரசங்கியுங்கள் என்று சொன்ன நம் ஆண்டவரின் பிரதான கட்டளைக்கு இணங்கி சுவிசேஷம் அறிவிக்க அதை அரசாங்கத்தின் சட்டம் தடை செய்தால் அதற்கு நாம் கீழ்ப்படிய வேண்டியதில்லை, அப்போஸ்தலர். 5ம் அதிகாரத்தில் பேதுருவும் மற்ற அப்போஸ்தலர்களும் சுவிசேஷம் அறிவிக்கக்கூடாது என்று அதிகாரிகள் தடை செய்யும்போது மனுஷருக்குக் கீழ்ப்படிவதைக் காட்டிலும் தேவனுக்கு கீழ்ப்படிவதே அவசியமாயிருக்கிறது என்று கூறியதாக வாசிக்கிறோம் பழைய எற்பாட்டின் நட்சத்திரமாகிய தானியேலும் கூட ஜெபிக்க தடையிருந்த போதும் ஜெபித்தார்.

 

அன்பான வாலிபரே! கீழ்ப்படிய வேண்டியவைகளுக்கு கீழ்ப்படிந்து, கீழ்ப்படியக் கூடாதவைகளுக்கு கீழ்ப்படியாமல் வலது இடது புறம் சாயாமல் கிறிஸ்துவானவர் வைத்திருக்கும் பாதையில் பத்திரமாக தொடர்ந்து செல்வோம்.

- J.சந்தோஷ் 

 

ஜெபக்குறிப்பு:

ஒவ்வொரு பணித்தளத்திலும் “எழுப்புதல் விரும்புவோர் முகாம்” நடத்துவதற்கென எடுக்கப்படும் பிரயாசங்களை தேவன் வாய்க்கச் செய்ய ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al