By Village Missionary Movement
Saturday, 28-May-2022இன்றைய தியானம்(Tamil) 28-05-2022
தூசி படிந்த வீடு
“…நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததைத் தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனை... ஆக்கினைக்குள்ளாகத்தீர்த்தார்.” – ரோமர் 8:3
நியாயப்பிரமாணம் (சட்டங்கள்) செய்தது என்ன? நியாயப்பிரமாணத்தினால் செய்யமுடியாமல் போனது என்ன? என்று இன்று சிந்திப்போமா? நியாயப்பிரமாணத்தினால் பாவம் இன்னதென்று அறிந்து கொள்ள முடிந்தது. நியாயப்பிரமாணம் மோசேயிடம் கொடுக்கப்படுவதற்கு முன்பே பாவம் உலகத்திலிருந்தது. இருப்பினும் நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்ட பின்பே பாவமானது பாவம் என உணரப்பட்டது. நியாயப்பிரமாணம் பரிசுத்தமுள்ளது. நியாயப்பிரமாணம் மரணத்தைக் கொண்டு வரவில்லை, பாவமே மரணத்தைக் கொண்டு வந்தது. இதை விளக்கும் ஒரு காட்சியை ‘’மோட்சப் பிரயாணம்” புத்தக ஆசிரியர் சித்தரிப்பதைப் பார்ப்போமா?
ஜான் பனியனின் ‘’மோட்சப் பிரயாணம்’’ புஸ்தகத்தின் கதாநாயகனாகிய கிறிஸ்தியான் ஒருநாள் ஒரு நற்செய்தியாளரைச் சந்தித்து வருங்கோபத்துக்கு தப்பித்துக் கொள்ளும்படிக்கு வெகுதூரத்திலுள்ள ஒரு இடுக்கமான வாசலை சுட்டிக் காட்டி அவனை அன்போடு வழியனுப்பி வைத்தார். அவன் அந்த இடுக்கமான வழியாய் சென்று பொருள்கூறுபவரின் வீட்டை அடைந்தான்.
இதுவரை சுத்தம் செய்யப்படாத பெரிய அறை ஒன்றினுள் கிறிஸ்தியானை அழைத்துச் சென்றார் பொருள்கூறுபவர். அறையெங்கும் தூசு நிறைந்திருந்தது. பொருள்கூறுபவர் சுத்தம் செய்பவனைக் கூப்பிட்டு அறையை பெருக்கும்படி கட்டளையிட்டார். அவன் துடைப்பம் கொண்டு அறையைக் கூட்ட, தூசு புகைமண்டலம் போலப் புறப்பட்டது. மூச்சுவிட திணறினான் கிறிஸ்தியான்! பொருள் கூறுபவர் அருகில் இருந்த பெண்மணியிடம் ‘’கொஞ்சம் தண்ணீர் கொண்டு வந்து அறையெங்கும் தெளி’’ என்றார். தண்ணீர் தெளித்த பின்பு அறையை சுத்தம் பண்ணுவது எளிதாக இருந்தது. ‘’ஐயா இதன் பொருள் என்ன?’’ என்று கேட்டான் கிறிஸ்தியான்.
‘’இந்த அறைதான் மனிதனின் இருதயம். தூசுதான் அவனை அசுத்தபடுத்தியிருந்த பாவங்கள், முதலில் அப்படியே அறையை பெருக்கியவன்தான் நியாயப்பிரமாணம், தண்ணீர் கொண்டு தெளித்த பெண்மணிதான் இயேசுவை பற்றிய சுவிசேஷம். நியாயப்பிரமாணம் என்ற சட்டங்கள் நமது பாவங்களை சுட்டிக்காட்டுவதால் அவைகள் அதிகரிக்கின்றன. இயேசுவைப் பற்றிய நற்செய்தியை நாம் ஏற்றுக்கொள்ளும்போதோ, நமது பாவங்கள் நீங்கி, இருதயம் சுத்தமாகிறது. அப்போதுதான் மகிமையின் ராஜா அதில் தங்க முடியும்.’’ என்று கிறிஸ்தியானுக்கு புரியும்படி விளக்கினார். ஆம், எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினால் நீதிமானாக்கப்படுவதில்லை. இயேசு கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினாலேயே நீதிமானாக்கப்படுகிறான். ஆம், நம்முடைய பாவங்கள் நியாயப்பிரமாணத்தால் அல்ல, இயேசுவின் இரத்தத்தாலே கழுவப்பட முடியும். இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் மேன்மையை உணருவோம். வெற்றியோடு, விடுதலையோடு வாழ்வோம்.
- Mrs. பியூலா செல்வராஜ்
ஜெபக்குறிப்பு:
7000 ஊழியர்களைக் கொண்டு ஒரு இலட்சம் கிராமங்களை சந்திக்க எடுக்கும் பிரயாசங்களில் தேவகரம் உடனிருக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250