By Village Missionary Movement
Wednesday, 25-May-2022இன்றைய தியானம்(Tamil) 25-05-2022
பேராசை
“நாபோத் செத்துப் போனதை ஆகாப் கேட்ட போது, அவன் யெஸ்ரயேலனாகிய நாபோத்தின் திராட்சத் தோட்டத்தைச் சொந்தமாய் எடுத்துக்கொள்ளும்படி எழுந்து போனான்.” - 1இரா. 21:16
கொல்லும் கொடிய பாவங்களிலே பேராசையும் உண்டு. நமக்கு இருப்பவைகள் போதுமென்று எண்ணாமல், இன்னும் ஆஸ்தி, பொருட்கள், நிலங்கள் சேகரிக்க வேண்டும் என்று ஓடக்கூடாது. வாழ்க்கையின் ஓட்டம் தவறான பாதையில் செல்லும் போது, அழிவிலே கொண்டு போய் விட்டு விடும். அதைத்தான் ஆகாப் ராஜா-நாபோத்தின் வாழ்க்கையிலிருந்து காணலாம்.
நாபோத்தின் திராட்சத் தோட்டம் ஆகாப் ராஜாவின் அரமனை அருகே இருந்தது. அந்த தோட்டத்தைத் தனக்குச் சொந்தமாக்கி அதை கீரைக் கொல்லையாக்க நினைத்தான் ஆகாப். ஆனால் நாபோத் தன் பிதாக்களின் சுதந்திரமாகிய அந்தத் தோட்டத்தை ஆகாப் ராஜாவுக்கு கொடுக்க மறுத்துவிட்டான். இதை கேள்விப்பட்ட ஆகாபின் மனைவி யேசபேல், வஞ்சகமாக நபோத்தை கொலை செய்தாள். இவன் இறந்ததைக் கேள்விப்பட்ட ஆகாப், நாபோத்தின் திராட்சத் தோட்டத்தை தனக்காக எடுத்து கொள்ளப் போகிறான் என்று கர்த்தருடைய வார்த்தை எலியாவுக்கு உண்டாகி, “...நாய்கள் நாபோத்தின் இரத்தத்தை நக்கின ஸ்தலத்திலே, உன்னுடைய இரத்தத்தையும் நக்கும்...” என்று கூறுகிறார். ஆகாப் தனக்கு இருந்த எத்தனையோ திராட்சத் தோட்டங்களில் ஒன்றைக் கீரைக் கொல்லையாக்கி அனுபவித்திருக்கலாம். அதை விட்டு, நாபோத்திடம் இருந்த ஒரு திராட்சத் தோட்டத்தையும், அவனைக் கொன்று, அதைத் தனக்கென்று அபகரித்துக் கொண்டான். இந்த இச்சை, பேராசையில் போய் முடிந்தது. இறுதியில் ஆகாபின் குடும்பமும், சந்ததியும் முற்றிலும் அழிந்து போனது.
இதை வாசிக்கும் அன்பு சகோதர-சகோதரிகளே, உங்களிடம் அநேக பொருட்கள் இருந்தும், பிறர் பொருள் மீது ஆசைப்படுகிறீர்களா? எந்த வழியிலாவது அதைப் பெற்றுவிட வேண்டும் என்று வஞ்சகமாக திட்டங்களைத் தீட்டுகிறீர்களா? ஆகாபும், யேசபேலும், நான்தான் ராஜா-ராணி; நான் எது செய்தாலும் கேட்பாரில்லை என்று அகந்தையோடு பிறரை ஒதுக்கியதுபோல் நீங்களும் ஒதுக்குகிறீர்களா? ஜாக்கிரதையாய் இருங்கள். கர்த்தர் அவர்களுக்காக உங்களோடு வழக்காடுவார். நீங்கள் மட்டுமல்ல, உங்கள் குடும்பமும், சந்ததியும் கூட பாதிக்கப்படும். நீங்களும் நித்திய நரகத்தில் தள்ளப்படுவீர்கள். தேவன் உங்களை நியாயந்தீர்ப்பார். “பேராசை பெருநஷ்டம்” என்பது உலக மொழி. ஆனால் பேராசைக்கு கர்த்தர் கொடுக்கும் தண்டனையோ அதை விடப்பெரியது. நாம் இப்பேராசையை ஒழித்து ஆண்டவரிடம் திரும்புவோம். நாமும் நம் குடும்பத்தாரும் ஆசீர்வாதம் பெறுவோம்.
- Mrs.புவனா தனபாலன்
ஜெபக் குறிப்பு
“கண்மணியே கேள் “ என்ற மாதாந்திரப் பத்திரிக்கையை நம் ஊழியத்தின் மூலமாக வெளியிட்டு வருகிறோம். இப்பத்திரிகை மூலம் அனேக வாலிபப் பிள்ளைகள் கிறிஸ்துவின் அன்பைக் கண்டுகொள்ள ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250