By Village Missionary Movement
Saturday, 21-May-2022இன்றைய தியானம்(Tamil) 21-05-2022
நற்குணம்
“சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள். “ - மத்தேயு 5 :9
ஒரு கிறிஸ்தவக் குடும்பத்தில் மாமாவுக்கும் மச்சானுக்கும் வீடு கட்டும் விஷயத்தில் ஒரு சிறு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் சகஜமாக பேசுவதையும் அவர்களுடைய வீட்டிற்கு போவதையும் நிறுத்திவிட்டனர். ஆலயத்திலோ அல்லது வெளியிலோ எங்கு சந்தித்தாலும் ஒருவரை ஒருவர் கண்டுகொள்ளாதவாறு நடந்துகொண்டனர். வீட்டு வேலை நடைபெற்றுக் கொண்டே இருந்தது. இந்த சூழ்நிலையில் பிளம்பிங் வேலை தொடங்கியது. இயேசுவை அறியாத ஒரு நபர் அந்த வேலையைச் செய்ய அழைக்கப்பட்டார். இவருக்கு இருவரையும் தெரியும். அவர் இவர்கள் பிரச்சனையை அறிந்து, அதை சரி செய்ய எண்ணினார். இதற்கு அவர் செய்தது, மாமாவை சந்திக்கும் போது “தவறு மச்சான் மீது அல்ல, நீங்கள் அப்படிப் பேசாமல் இருந்திருக்கலாம்” எனவும், மச்சானை சந்திக்கும்போது “தவறு உங்கள் மாமா மீது அல்ல, நீங்கள் கோபத்தில் அப்படிசெய்யாமல் இருந்திருக்கலாம்” எனவும் கூறி வந்தார். இவ்வாறே அவர் ஒரு மாதமளவும் செய்து வந்தார். இறுதியில் இருவருக்கும் இடையே சமாதானம் உண்டானது. மீண்டும் இருவரும் ஒப்புரவாயினர். இயேசுவை அறியாத இம்மனிதரின் முயற்சியும், அவரின் நற்குணமும் நிச்சயம் வியக்கத்தக்கது.
வேதத்தில் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து இவ்வாறாகக் கூறுகிறார், “சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்.” பழைய ஏற்பாட்டில் நாம் ஏசா யாக்கோபைக் குறித்து வாசிக்கின்றோம். யாக்கோபு முதலில் எத்தனாகவும் சண்டை பண்ணுகிறவனாகவும் ஏமாற்றுகிறவனாகவும் காணப்பட்டாலும் பின் நாட்களில் அவன் சமாதானத்தை விரும்புகிறவனாகவும் தன் சகோதரனோடு ஒப்புரவாக விரும்புகிறவராகவும் காணப்படுகிறார். முதலில் அவன் ஏசாவை ஏமாற்றி ஆசீர்வாதங்களைப் பறித்துக்கொண்டாலும் தேவன் யாக்கோபை ஆசீர்வதித்தபோது, அதை ஏசாவோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறார். இதுவே தேவன் விரும்பும் சமாதானம்.
ஆம் பிரியமானவர்களே, இந்நாளில் நாம் சிந்திக்க வேண்டியது நம் நிலை என்ன? நாம் பகையோடு கூட தேவனுக்குச் செலுத்தும் காணிக்கைகள் கூட ஏற்றுக்கொள்ளப்படாது என வேதம் கூறுகிறது. எனவே சமாதானத்தை விரும்பி அதைப் பற்றிக் கொள்வோம்! மற்றவர்களையும் சமாதானத்திற்குள் வழிநடத்துவோம்! தேவ புத்திரர்களாவோம்.
- Bro. தாமஸ்
ஜெபக்குறிப்பு:
மோட்சப்பயணம் தினதியான இதழை வாசிப்போர் சத்தியத்தில் வளர்ந்து சாட்சியாய் ஜீவிக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250