By Village Missionary Movement
Friday, 20-May-2022இன்றைய தியானம்(Tamil) 20-05-2022
மனதுருக்கத்தின் துளி
“இயேசு திரளான ஜனங்களை கண்டு, அவர்கள்மேல் மனதுருகி ... சொஸ்தமாக்கினார்” - மத்தேயு 14:14
தேவ அன்பினால் தொடப்பட்ட சகோதரி ஒருவர், தன்னைத் தொட்ட அந்த தேவ அன்பை தானும் பிறருக்குக் காட்ட வேண்டுமென்று வாஞ்சித்து ஜெபித்துக் கொண்டிருந்தாள். அவள் இருந்த ஊரில் தீராத வியாதியால் பாதிக்கப்பட்டு தன் குடும்பத்தினராலும், அயலகத்தாராலும் புறக்கணிக்கப்பட்டு, ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறமான ஒரு சிறு வீட்டில் சொந்தங்களால் தள்ளப்பட்ட நிலைமையில் தனித்து தன் நாட்களை எண்ணிக் கொண்டு இருந்தாள் வயதான பெண் ஒருவர். இதனைக் கேள்விப்பட்ட அந்த சகோதரி எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல், சுகவீனமான அந்த பெண்ணுக்கு உதவி செய்யச் சென்றாள். ஒவ்வொரு நாளும் காலமே எழுந்து தன் குடும்பத்தினருக்கு செய்ய வேண்டிய கடமைகளை முடித்து விட்டு விரைவாக அங்கு சென்று அவருக்குப் பணிவிடை செய்தாள். அழுகிப்போன அவரின் சரீரத்தில் நாற்றத்தையும் பொருட்படுத்தாமல் புண்களைச் சுத்தம் செய்து, காயமும் கட்டி, வேண்டிய ஆகாரத்தைக் கொடுத்து, கவனித்த போதிலும் இவருக்குக் கிடைத்தது பாராட்டல்ல. வலி வேதனையின் உச்சத்தில் அடிக்கடி சுய நினைவையும் இழக்கும் அப்பெண்ணின் முறுமுறுப்பும், ஏச்சுமே கிடைத்தது. ஆனாலும் மனதுருக்கத்தினால் தொடர்ந்து சேவை செய்தாள்.
“இயேசு திரளான ஜனங்களைக் கண்டபொழுது, அவர்கள்மேல் மனதுருகி, சகல வியாதிகளையும் நீக்கி, அவர்களைச் சொஸ்தமாக்கினார்” நாயீனூர் விதவையின் ஒரே மகன் மரித்துப் போன வேளையில், அவள் வாழ்வின் நம்பிக்கையே அற்றுப்போன நிலைமையில், இயேசு அவள் மேல் மனதுருகி அழாதே என்று சொல்லி பாடையைத் தொட்டு மரித்தவனை உயிரோடு எழுப்பினர். ஹென்றி நியூமென் என்ற இறையியல் அறிஞர் “மனதுருக்கமாய் இருப்பது மிகக் கடினம். ஏனெனில் அது மற்றவர்களின் உணர்வுகளின் ஊடாகச் செல்வதாகும். அவர்கள் பலவீனமாயிருக்கும் வேளைகளில், தனிமையை உணரும் சமயங்களில் மனமுடைந்திருக்கும் காலங்களில் நாம் அவர்களுடைய நிலையை உணர்ந்துகொண்டு செயல்பட வேண்டும்“ என்று கூறுகிறார்.
காயப்பட்ட ஒரு பறவையையோ, கீழே விழுந்து காயமடைந்த ஒரு சிறுவனையோ பார்ப்பது மனதுருக்கம் அல்ல; அது பரிதாப உணர்வேயாகும். மனதுருக்கம் செயலில் வெளிப்பட வேண்டும். எனவே தான் இயேசு திரளான ஜனங்களைக் கண்டபொழுது அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போல இருக்கிறார்கள் என்று மனதுருகினார். இரட்சகர் இல்லாத மக்களைக் காணும்பொழுது நம் இருதயம் உடைகிறதா? புகழ் பெற்ற கவிஞரான பைரன் பிரபு என்பவர், “மனதுருக்கத்தின் துளி கண்ணீரில் வெளிப்படும்“ என்று கூறியுள்ளார். காயப்பட்டு, குற்றுயிராய் இருக்கும் மக்களைக் கண்டு நாம் எதை வெளிப்படுத்துகிறோம்? தேவனுடைய மனதுருக்கத்தை அனுபவித்த நாம் மற்றவர்களுக்கும் அதை வெளிபடுத்துகிறவர்களாக இருக்க வேண்டும்.
- Mrs.வசந்தி ராஜமோகன்
ஜெபக்குறிப்பு:
வாரந்தோறும் ஞாயிறு மாலை 6 மணி முதல் 6:30 மணி வரை நம்பிக்கை டிவியில் ஒளிபரப்பப்படும் “கண்மணியே கேள்” என்ற நிகழ்ச்சியின் மூலம் அநேக வாலிபப் பிள்ளைகள் தொடப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250