By Village Missionary Movement
Sunday, 15-May-2022இன்றைய தியானம்(Tamil) 15-05-2022 (Kids Special)
நல்லதை விதை அதையே அறுப்பாய்
“…மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.” - கலாத்தியர் 6:7
ஒரு ஊரில் ஒரு மர வியாபாரி பெரிய மரக்கடை வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்தான். அக்கடையருகில் மற்றொரு இரும்பு வியாபாரி இரும்புக் கடை வைத்திருந்தார். இந்த இரண்டு கடைக்காரர்களும் நண்பர்களாக பழகி வியாபாரம் நடத்தி வந்தனர். மர வியாபாரிக்கு வியாபாரம் பெருகப் பெருக இரும்புக் கடையையும் அபகரித்துக்கொள்ள வேண்டுமென்று ஆசை வந்தது.
ஒருநாள் இரும்பு வியாபாரி குடும்பத்தோடு சுற்றுலா செல்ல தீர்மானித்தார். கடையை தனது நண்பனான அந்த மரவியாபாரியிடம் பத்திரமாக பார்த்துகொள்ளும்படி கூறிச் சென்று விட்டார். இந்த மரவியாபாரியோ அவர் வருவதற்குள் இரும்பு சாமான்கள் எல்லாவற்றையும் விற்றுவிட்டு ஒன்றுமறியாததுபோல் இருந்து விட்டார். சுற்றுலா சென்ற இரும்பு வியாபாரி சந்தோஷத்துடன் விட்டிற்கு வந்து கடையைப் பார்த்தார். அங்கு ஒரு இரும்பையும் காணாமல் வேதனைப்பட்டார். வேதனையோடு மர வியாபாரியிடம் போய் கேட்டார். எலி தின்றுவிட்டது என்று அசால்ட்டாக பதில் கூறினார். இருவருக்கும் வழக்கு வந்தது. இந்த வழக்கை அரசரிடம் கொண்டு சென்றனர். அரசரும் மரவியாபாரி சொன்னதை நம்புவது போல் நடித்தார்.
நாட்கள் உருண்டோடின, சில மாதங்கள் கழித்து மறுபடியும் இரும்பு வியாபாரி பண்டிகைக்காக தனது சொந்த ஊருக்குப் போக மரவியாபாரியை அழைத்தார். அவரோ வர மறுத்தார். உன் மகனையாவது அனுப்பிவை என்றார். அதற்கு மரவியாபாரியும் சம்மதித்து தனது ஒரே மகனை அந்த இரும்பு வியாபாரியுடன் அனுப்பி வைத்தார். எல்லாரும் சென்று சந்தோஷமாய் பண்டிகையைக் கொண்டாடினார்கள்.
பண்டிகை முடிந்து திரும்பி வந்தபோது, மரவியாபாரியின் மகன் வரவில்லை! மகனை காணாமல் மரவியாபாரி துடித்தார். எங்கே என் மகன் என்று இரும்பு வியாபாரியிடம் கேட்க, அவரோ உன் மகனை கழுகு தூக்கிச் சென்றுவிட்டது என்றார். உடனே மரவியாபாரி 10 வயது பையனை எப்படி கழுகு தூக்கிச்செல்லும் என்று அழுதார். வழக்கு அதே அரசரிடம் சென்றது. அரசர், “இரும்பை எலி தின்றுவிடும் என்றால் பையனையும் கழுகு தூக்கிச் செல்ல முடியும்” என்று தீர்ப்பு கூறினார். மரவியாபாரி அழுதுகொண்டே தனது தவறை உணர்ந்து அரசனின் காலில் விழுந்து நான் தப்பு செய்து விட்டேன் தயவுசெய்து என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறி தான் இரும்பு விற்ற பணத்தை அரசரிடம் வந்து கொடுத்தார். இரும்பு வியாபாரியும் அவரது பையனை அரசரிடம் கொண்டுவந்து விட்டார். மரவியாபாரி சந்தோஷமாய் தனது மகனை அழைத்துக் கொண்டு, இரும்பு வியாபாரியிடம் மன்னிப்புக் கேட்டு விட்டு தனது வீட்டிற்கு சென்றார்.
தம்பி தங்கச்சி நீ மற்றவர்களுக்கு எதைச் செய்கிறாயோ அதுதான் உனக்குத் திரும்ப வரும் என்பதை மறந்து விடாதே. எப்போதும் மற்றவர்களுக்கு நல்லதையே செய்யப் பழகு.
- Mrs.அனிதா அழகர்சாமி
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250