By Village Missionary Movement
Wednesday, 04-May-2022இன்றைய தியானம்(Tamil) 05-05-2022
தேவையானது ஒன்றே
“தன்னைத்தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.” - லூக்கா 14:11
இந்தியாவுக்கு மிஷனெரியாக வந்து வேதாகமத்தைப் பல இந்திய மொழிகளில் மொழிபெயர்த்த வில்லியம் கேரி கல்கத்தாவில் வாழ்ந்தார். அங்கு நன்கு கற்றவர்கள், உயர் பதவியில் இருப்போர் நடுவில் மிகுந்த செல்வாக்கு அவருக்கு இருந்தது. ஒருமுறை இந்தியாவின் கவர்னர் ஜெனரல் அளித்த விருந்துக்கு அவரும் அழைக்கப்பட்டிருந்தார். விருந்தினரில் ஒருவர் இன்னொருவரிடம் கேரியைக் காட்டி, “இவர் செருப்பு செய்பவராக இருந்த கேரி தானே? “ என்று வினவினாராம். கேரியின் காதுகளில் இவ்வார்த்தைகள் விழுந்தன. வில்லியம் கேரி அவரைத் திரும்பிப் பார்த்து, “இல்லை ஐயா நான் செருப்பு செய்பவன் அல்ல; செருப்பு தைப்பவன்” என்றாராம். என்னே அவரது தாழ்மை! “குறை குடம் ததும்பும், நிறை குடம் ததும்பாது” என்பது இதுதானோ. எல்லாவற்றையும் கர்த்தரிடமிருந்து தானே நாம் பெற்றுக் கொள்கிறோம். அதை அறிந்தவர் நிச்சயம் தாழ்மையை அறிந்தவர்தான்.
தாழ்மைக்கு முன்னோடி உண்டென்றால் அது இயேசு கிறிஸ்துதான். தாழ்மையை கற்றுக்கொடுக்க, வாழ்ந்து காண்பித்தவர். அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும் தேவனுக்கு சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய் காணப்பட்டு, மரணபரியந்தம் அதாவது சிலுவையின்மரணபரியந்தமும் கீழ்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார் (பிலிப்பியர் 2:6-8) வேதம் சொல்கிறது,
நீதி.15:33 ல் “மேன்மைக்கு முன்னானது தாழ்மை” என்று. கர்த்தர் தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார். மேலும் “தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கு கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது” (யாக்கோபு 4:6 ). நமக்கு நன்றாக தெரிந்த பரிசேயன், ஆயக்காரன் சம்பவத்தில் தாழ்மையாய் ஜெபித்த ஆயக்காரனே நீதிமானாக்கப்பட்டான் (லூக்கா 18:10-14).
பிரியமானவர்களே! நாம் பாவி என்று ஒத்துக்கொள்ளவும், கிருபைக்காக கெஞ்சவும் தாழ்மை அவசியப்படுகிறது. நம்முடைய நற்கிரியைகள், எதையும் குறித்து தேவனிடம் பெருமைப்படுவதற்கு அவைகள் ஒன்றுமில்லை. நம்முடைய நீதிகள் அழுக்கான கந்தை போல் இருக்கிறது. பெருமை பாராட்டுவதற்கும் மேன்மை பாராட்டுவதற்கும் நாம் யார்? அநேக நேரங்களில் நாம் தாழ்மைப்படாதிருக்க நம்முடைய ஆவிக்குரிய சில நல்ல பழக்கவழக்கங்கள், படிப்பு, பணம், அறிவு, பட்டங்கள், பொருள், பதவி. அழகு போன்றவைகள் காரணமாக அமைகிறது. ஆவிக்குரிய நற்குணங்கள் நல்லது தான். ஜெபிப்பது, ஆலயம் செல்வது, காணிக்கை கொடுப்பது, ஆவிக்குரிய தாலந்துகள் கொண்டிருப்பது மிகவும் நல்லதுதான். ஆனால் அவற்றை பிற விசுவாசிகள், நண்பர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து ஆவிக்குரிய பெருமையடைவது ஆபத்தானது. எனவே நாம் எவ்வளவு தாலந்து பெற்றிருந்தாலும் வில்லியம் கேரியைப் போல தாழ்மையை அணிந்து கொள்வோம். மரணபரியந்தம் தம்மைத் தாழ்த்தின இயேசு கிறிஸ்துவிடம் நம்மை அர்ப்பணிப்போம். அவரே நம்மை தாழ்மைக்கு நேராய் வழிநடத்துவார்.
- P. சிவா
ஜெபக்குறிப்பு:
இம்மாதம் முழுவதும் நடைபெறவுள்ள VBS ஊழியங்களில் திட்டமிட்டபடி 3000 கிராமங்களில் நடத்தி முடிக்க தேவன் கிருபை பாராட்டி, கிராமங்களில் திறந்த வாசலைக் கட்டளையிட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250