By Village Missionary Movement
Wednesday, 27-Jan-2021இன்றைய தியானம்(Tamil) 27-01-2021
அற்பமாய் எண்ணாதீர்கள்
“உங்கள் கொம்பை உயரமாய் உயர்த்தாதிருங்கள்; இறுமாப்புள்ள கழுத்துடையவர்களாய்ப் பேசாதிருங்கள்.” – சங்கீதம் 75:5
கொத்து கொத்தாய் காய்களும், பூக்களும் நிறைந்திருந்த பப்பாளி மரம், அருகிலுள்ள ஒரு சிறு செடியைப் பார்த்து உன்னிடம் அது இல்லை, இது இல்லை என்று கூறி அற்பமாய் பேசி மனதை புண்படுத்தியது. கன மழையுடன் அடித்த காற்றில் பப்பாளி மரம் பல்டி அடித்து விழுந்து கிடந்தது. அந்த சிறு செடியோ எப்போதும் போல, தனக்கிருந்த அதே பெலத்தோடு நின்று கொண்டிருந்ததாம். நாமும் கூட பல நேரங்களில் தேவன் நமக்குக் கொடுத்த ஆசீர்வாதங்களைக் காட்டி மற்றவர்களை எளிதில் அற்பமாக நினைத்து விடுகிறோம். ஆனால் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும், “தேவன் நமக்குக் கொடுக்கும் ஆசீர்வாதங்களைக் கொண்டு அவர் நாமம் மகிமைப்படவும், பிறருக்கு பிரயோஜனமாகவுமே பயன்படுத்த வேண்டுமேயன்றி, அதை வைத்து மற்றவர்களை மனமடிவாக்கவோ, அற்பமாக எண்ணவோ கூடாது.”
வேதத்திலே, பல பிள்ளைகளை பெற்று வாழ்ந்த பெனின்னாள் பிள்ளையற்ற அன்னாளை அற்பமாக எண்ணினாள், மனமடிவுண்டாக்கினாள். அன்னாளின் கண்ணீரைக் கண்டு தேவன் அவளுக்கு ஒரு பிள்ளையைக் கொடுத்து, அந்தப் பிள்ளையை இஸ்ரவேலில் எழுப்புதலுக்கு பயன்படுத்தி, இராஜாக்களை அபிஷேகம் பண்ணும் உன்னத ஊழியத்தையும் கொடுத்தார். ஆனால் பெனின்னாளின் பிள்ளைகளின் பெயர் கூட நமக்குத் தெரியாது. பெற்றோர்களே! உங்கள் பிள்ளைகளின் முன்னேற்றத்திற்கும், ஆசீர்வாதத்திற்கும் நீங்களே தடையாக இருக்க வேண்டாம். பெனின்னாளின் மேட்டிமையான பேச்சினால் அவளுடைய பிள்ளைகள் பயன்படுத்தப்படவில்லை. ஒருவேளை நம்முடைய பிள்ளைகளின் தாலந்துகளும் திறமைகளும் தேவனுக்கும், பிறருக்கும் பயன்பட முடியாமல் இருக்கலாம். அதற்கு காரணம் தேவனோ, பிசாசாகவோ இருக்க முடியாது. நம்முடைய மேட்டிமையும் பெருமையும்தான் காரணமாக இருக்கும்.
அன்பானவர்களே! நம் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கும் தேவன். அதே வேளையில், என்னிடம் சொல்லிக் கொள்ளுமளவிற்கு எதுவுமே இல்லையே என்று ஏங்குபவர்களுக்கு தமது கிருபையை அளவில்லாமல் பொழிந்து அவர்களை பயன்படுத்தவும், ஆசீர்வதிக்கவும் அவரால் முடியும். ஆகவே நாம் நம் சந்ததிகளுக்கு ஆசீர்வாதமாக அமைய வேண்டுமானால், மேட்டிமையாக இராதிருப்போம். யாரையும் அற்பமாக எண்ணி நம் ஆசீர்வாதத்தை இழந்துவிடாதிருப்போம். அதே வேளையில் அற்பமாய் எண்ணப்பட்டவர்கள் பிறரது வார்த்தையினால் சோர்ந்து போய், ஒதுக்கி விடாதபடி தேவசமூகத்தில் நம் இருதயத்தை ஊற்றுவோம். அந்தரங்கத்தில் நாம் வடிக்கும் கண்ணீரை காணும் கர்த்தர் வெளியரங்கமாய் பலனளிப்பார்.
- S. மனோஜ்குமார்
ஜெபக்குறிப்பு:
Peace centre ஊழியங்களுக்காக அபிஷேகம் செய்யப்பட்டுள்ள ஊழியர்களை தேவன் வல்லமையாய் பயன்படுத்த ஜெபியுங்கள்.
இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app:
தமிழில் பெற - +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.vmmorg.template.msmapp
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250