By Village Missionary Movement
Monday, 02-May-2022இன்றைய தியானம்(Tamil) 03-05-2022
எலும்புருக்கி
“…பொறாமையோ எலும்புருக்கி.’’ - நீதிமொழிகள் 14:30
90-களில் இருந்த கல்வி முறை இப்போது ஞாபகம் வருகிறது. வகுப்பறையில் ஆசிரியர் மஞ்சள் நிறத்திலான ரேங்க் கார்டு கொடுப்பார்கள். அப்போது யாருடைய கண்களும் அவரவர் ரேங்க் கார்டின் மீது இருக்காது. பக்கத்தில் உள்ளவன், பின்னே உள்ளவன், பக்கத்து வரிசை, முன்வரிசை என எல்லா கார்டின் மேலேயே கண்கள் போகும். முதல் ரேங்க் வாங்கிய மாணவனைக் கண்டதும் ஒரு பொறாமை வரும் பாருங்கள். அதிலும் ஆசிரியர் அவனை பாராட்டிப் பேசும் போது எல்லாரையும் கைதட்ட சொல்லும் போது, அவனை கிளாஸ் லீடராக மாற்றும் போது, ஆசிரியர் இல்லாத நேரம் அவன் ஒட்டுமொத்த கிளாசை கவனிக்கும் போது, பேசியவர்களின் பட்டியலில் நமது பெயரை எழுதும் போது என நீண்டு கொண்டே செல்கிறது இந்தப் பட்டியல். ஒரு கட்டத்தில் அந்த நன்றாக படிக்கும் மாணவன் எதைச் செய்தாலும் நமக்கு பொறாமையாகவே மாறி விடுகிறது. ஆனால் இப்போது நினைத்தால் கொஞ்சம் சிரிப்பும் வருத்தமும் ஏற்படுகிறது.
பரிசுத்த வேதாகமத்தில் சங்கீதம்106:16ல், ‘’அவர்கள் (இஸ்ரவேல் ஜனங்கள்) மோசேயின் மேலும், ஆரோனின் மேலும் பொறாமை கொண்டார்கள்’’ என வாசிக்கிறோம். மோசேயும் ஆரோனும் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டு ஏற்படுத்தப்பட்டவர்கள். ஒட்டு மொத்த இஸ்ரவேல் ஜனங்களையும் வழிநடத்தி செல்லக்கூடிய பொறுப்பு அவர்களிடத்தில் இருந்தது. இப்படிப்பட்ட பொறுப்பில் உள்ள இவர்களின் மேல் பொறாமை கொண்டதினால் தாத்தன் மற்றும் அபிராமுக்கு ஏற்பட்ட அழிவைக் குறித்து சங்106:17ல் பார்க்கிறோம். இந்த இரண்டு வசனங்களும் நமக்கு எச்சரிக்கைப் பாடத்தை கற்றுக் கொடுக்கிறது.
அன்பானவர்களே! இன்று நமது மனநிலை எப்படி இருக்கிறது? நமக்கு அருகிலிருக்கும் நபருக்கோ அல்லது குடும்பத்திற்கோ ஏதாவது ஒரு நன்மை ஏற்பட்டுவிட்டால் நாம் பொறாமைப்படுகிறோமா? யோசிப்போம். வேத வசனம் பொறாமையை ஒரு நோயாக (எலும்புருக்கி -TB) காட்டுகிறது. நாம் தான் ஜாக்கிரதையாக இருந்து மனதில் பொறாமையை வைத்துக் கொள்ளாமல் பிறரை பாராட்டவும் உற்சாகப்படுத்தவும் வேண்டும். அப்போது நமக்கு மேன்மை உண்டாகும். நமது உறவினர்கள், நமக்குத் தெரிந்தவர்கள், உடன் வேலை செய்பவர்கள், ஊழியம் செய்பவர்கள் என எல்லாரிடமும் உள்ள பொறாமையை இன்றே தூக்கி எறிவோம். பிறர் மீது நாம் பொறாமைப்பட்டால் அது நம்மையே உருக்கி அழித்து விடும்! “போட்டி இருக்கலாம், பொறாமை இருக்கக் கூடாது” என்பார்கள். ஆகவே பொறாமை என்கிற கெட்ட குணத்தை விட்டு விட்டு நலமுடன் வாழ்வோம். ஆமென்!
- T.சங்கர்ராஜ்
ஜெபக்குறிப்பு
தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் ஊழியம் செய்யும் நமது கிராம மிஷனெரிகளை தேவன் வல்லமையாய் எடுத்து பயன்படுத்த ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250