By Village Missionary Movement
Saturday, 30-Apr-2022இன்றைய தியானம்(Tamil) 30-04-2022
வயது தடையே அல்ல
“இப்படிப்பட்ட ஊழியத்தை உடையவர்களாகிய நாங்கள் இரக்கம்பெற்றிருப்பதால் சோர்ந்துபோகிறதில்லை.” – 2 கொரி. 4:1
நீங்கள் உலகமெங்கும் போய் சர்வசிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள் என்பது நம் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கட்டளை. கர்த்தரின் இக்கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நற்செய்தி அறிவித்து வாழ்ந்த தேவ ஊழியர்களை நாமறிவோம். அவர்களுள் ஜார்ஜ் முல்லர் சிறப்புக்குரியவர்.
சோர்வு என்ற வார்த்தைக்கே இடம் கொடாமல் தன் 93 வயது வரை ஊழியத்தை நிறைவேற்றியவர் ஜார்ஜ் முல்லர். 90 வது வயதில் அவரை பரிசோதித்த மருத்துவர் இனிமேல் நீங்கள் வாரத்திற்கு ஒருமுறைதான் பிரசங்கிக்க வேண்டும் என்று ஆலோசனை கூறினார். ஆனால் ஜார்ஜ் முல்லர் அவர்களோ, “68 ஆண்டுகளும் 3 மாதங்களும் திருவசனமாகிய ஞானப்பாலின்மேல் அதிக தாகம் கொண்டிருக்கிறேன். சுமார் 4200 முறைக்கும் மேலாக வேதாகமத்தை படித்திருப்பேன். என் தேவனை துதிப்பதிலும், பிரசங்கிப்பதிலும் எனக்கு சோர்வு எப்படி ஏற்படும்? என் தேவனைப் பற்றி பேசாமல் எப்படி இருக்க முடியும்?” என்றார். இதையே தன் விசுவாசிகளுக்கும் கடிதமாக எழுதினார்.
ஜார்ஜ் முல்லர் அவர்கள் திருமறையை 100 முறைகள் முழங்காலில் நின்று படித்தார் என்றும் அறியப்படுகிறது. வேதத்தின்படி வாழ்ந்த அவரது ஜெபவாழ்க்கை, அயராத உழைப்பு, சோம்பலற்ற வாழ்வு, வேதவசனங்களால் நிறைந்த பிரசங்கங்கள் அநேகருடைய வாழ்க்கையில் தாக்கத்தை உண்டு பண்ணின. வேத வாக்கியங்களில் களிகூர்ந்து, நேசித்து, வாசித்து சுவாசித்து 93 வயது வரை வாழ்ந்து காட்டிய மாமனிதர் ஜார்ஜ் முல்லருக்காக நன்றி சொல்லுவோம். வேதத்திலே முதிர்வயதிலும் தேவனுக்காய் முழு மூச்சாய் வாழ்ந்த தேவ மனிதர்கள் உண்டு. ஆபிரகாம், மோசே, இயேசு கிறிஸ்துவை கையிலேந்திய சிமியோன், அன்னாள் இன்னும் அநேகர் உண்டு. இவர்கள் வயதை காரணம் காட்டி தேவனுக்காக செயல்படாமல் இல்லை.
நீங்கள் ஒருவேளை எனக்கு வயதாகி விட்டது, சோர்வாக உள்ளது . என்னால் முன்புபோல செயல்பட முடியவில்லை என அங்கலாய்க்கிறீர்களா? சோர்ந்து போகிறவனுக்கு பெலன்கொடுத்து, சத்துவமில்லாதவர்களுக்கு சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிற தேவன் உங்களோடு இருக்கிறார். ஊழியம் செய்ய, வேதபுத்தகத்தை வாசிக்க வயது ஒரு தடையே அல்ல. தேவனுக்கென்று நாமும் அயராது உழைப்போம். தேவகிருபை நம்மை தாங்குவதாக! ஆமென்.
- Mrs. சரோஜா மோகன்தாஸ்
ஜெபக்குறிப்பு:
கிராமங்களை தாங்குவோர் எழும்ப, இதன் மூலம் கிராமங்களில் எழுப்புதல் உண்டாக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250