By Village Missionary Movement
Monday, 25-Apr-2022இன்றைய தியானம்(Tamil) 25-04-2022
உண்மையும் உயர்வும்
“கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான்…” - லூக்கா 16:10
1862ம் ஆண்டு அமெரிக்காவில் உள்நாட்டு யுத்தம் நடந்து கொண்டிருந்தது. அவ்வேளையில், ராபர்ட் ஈலி அமெரிக்காவின் வடக்கு பகுதிகளை கைப்பற்ற யுத்தம் செய்தார். அவருக்கு எதிராகவும் தன் நாட்டைக் காப்பதற்காகவும் கர்னல் ஹேயஸ் தனது படைகளுடன் உச்சகட்ட போரில் ஈடுபட்ட போது, நேரமும் காலமும் செல்லச்செல்ல போர் வீரர்கள் பசியால் துவண்டனர். அந்நேரம் யுத்த முனையில் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் பில்லி என்ற 19 வயது வாலிபன் உண்ண உணவுகளையும், பருக பானங்களையும் சூடாக வாகனத்தில் ஏற்றி, போர் மும்முரமாக நடைபெறும் இடத்திற்கு கொண்டு சென்றான். களைத்து தொய்ந்து போயிருந்த போர் வீரர்கள் இவனது துணிச்சலைக் கண்டு ஆச்சரியப்பட்டு தங்களுக்குக் கிடைத்த உணவை வேகமாக உட்கொண்டு சூடான பானத்தை குடித்து புத்துயிர் பெற்றனர். இதைக் கேள்விப்பட்ட கர்னல் ஹேயஸ் பில்லிக்கு பதவி உயர்வு கொடுத்து கெளரவித்தார். இந்த கர்னல் ஹேயஸ் தான் பின்னர் அமெரிக்காவின் 19-வது ஜனாதிபதியான ‘’ரூதர்போர்ட் ஹேயஸ்’’ ஆவார். அவருக்குப் பின் 20-வது அதிபராக பதவி ஏற்றுக் கொண்டவர் “வில்லியம் மாக் கின்லி.”இவர் வேறு யாருமல்ல அன்று போர் வீரர்களுக்கு தகுந்த நேரத்தில் உணவு கொடுத்த பில்லி தான் அவர்.
பில்லியை குறித்து ஹேயஸ் “இளம் வயது வாலிபனாக இருந்த போதும் வேலையென்று வந்துவிட்டால், பகல் இரவென்று பார்க்காமல் வேலை செய்வார். குளிர், மழை, புயல் எதுவுமே அவர் வேலையை தடை செய்ய முடியாது. கடமை தவறாதவராகவும், குறித்த வேலையை சரியான நேரத்தில் செய்து முடிப்பவராகவும் இருப்பார்” என்று குறிப்பிட்டிருந்தார். தாவீது தன் ஆடுகளை உண்மையாய் மேய்த்து கரடி, சிங்கத்தின் வாயிலிருந்தும் தப்புவித்ததை பார்த்த கர்த்தர் தன் ஜனங்களை ஆளும்படியாக இஸ்ரவேலின் மேல் ராஜாவாக்கினார்.
இன்று நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பணிகள் மிகச் சிறியவைகளாக இருக்கலாம். சில நேரங்களில் நாம் மிகவும் கடினமாக உழைத்தும் உண்மையுடன் செய்த வேலைகளுக்கு உலகில் உரிய அங்கீகாரம் கிடைக்காமல் போய்விடலாம். உலகளவில் இந்தியர்களுக்கு “மிகவும் கடினமாக உழைப்பவர்கள்” என்ற பெயர் இருந்தாலும் வேலையிடங்களில் அதற்கேற்ற உயர்வு கிடைப்பதில்லை. இருப்பினும் அதையெல்லாம் மனதில் கொள்ளாமல் கர்த்தர் நம்மை கவனிக்கிறார் என்ற எண்ணத்தோடு தொடர்ந்து உழைப்போம். பவுல் சொல்வதைப் போல மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாக பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல் தேவனுக்குப் பயப்படுகிறவர்களாகக் கபடமில்லாத இருதயத்தோடே ஊழியஞ்செய்வோம். அப்படி செய்யும்போது நமது எஜமானர் இயேசு கிறிஸ்துவின் அங்கீகாரத்தைப் பெற முடியும்.
- Bro.ஹனீஸ் சாமுவேல்
ஜெபக்குறிப்பு:
கெத்செமனே வளாகத்தில் நடைபெறும் கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் ஒவ்வொருவரையும் தேவன் ஆசீர்வதிக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250