By Village Missionary Movement
Tuesday, 19-Apr-2022இன்றைய தியானம்(Tamil) 20-04-2022
இருக்கிறது போதுமே!
“போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்” – 1 தீமோ. 6:6
ஒரு சிற்பி ஒரு பெரிய கல்லை எடுத்து, அதில் உருவத்தை செதுக்க ஆரம்பித்தார். தலைக்கு மேலே சூரிய வெப்பம் அவரைத் தாக்கவே, “சே, இது என்ன வாழ்க்கை எப்போது பார்த்தாலும் இந்த வெயிலில் நின்று இந்த உளியை கையில் வைத்து செதுக்கிக் கொண்டே இருக்கிறேனே! எனக்கு வேறு நல்ல வேலையும் எளிதாக அதிகமாக சம்பளமும் கிடைத்தால் நன்றாக இருக்குமே” என்று நினைத்தார். அப்போது அந்த வழியாக அந்த நாட்டு ராஜா குதிரையில் வருவதைக் கண்டார்.
ஆ, இந்த ராஜாவைப் போல் நான் இருந்தால் எத்தனை நலமாய் இருக்கும் என்று எண்ணினார். என்ன ஆச்சரியம்! உடனே அவர் ராஜாவாக மாறினார். அவர் குதிரையில் பயணித்துக் கொண்டிருந்த போது சூரிய வெப்பம் அவர் மேல் அதிகமாகப் பாய்ந்தபோது இந்த சூரியன் தான் ராஜாவை விட பெரியது என்று நினைத்த மாத்திரத்தில் உடனே சூரியனாக மாறினார்.
அப்படி சூரியனாக பிரகாசித்துக் கொண்டிருந்த போது, ஒரு மேகம் தோன்றி பூமியின் மேல் மழையைப் பொழிந்தது. தண்ணீரை அடித்துக் கொண்டு போகிற போது ஒரு பெரிய கல்லை தவிர வேறு எல்லாவற்றையும் அது போகிற வழியில் அடித்துக் கொண்டு சென்றது. உடனே அந்த சிற்பி ஆ, அந்தக் கல் தான் மிகவும் உறுதியானது, என்ன வந்தாலும் அசையவில்லையே என்று நினைத்த மாத்திரத்தில் உடனே ஒரு பெரிய கல்லாக மாறினார். அப்போது இன்னொரு சிற்பி வந்து ஒரு உளியையும் சுத்தியலையும் கொண்டு வந்து அந்த கல்லை செதுக்க ஆரம்பித்த போது அந்த சிற்பி வேலை எவ்வளவு சிறந்தது என்று எண்ணினார். தான் செய்யும் வேலை, கடவுள் தனக்கு கொடுத்த நிலையை திருப்தியோடு ஏற்றுக்கொண்டார்.
பரிசுத்த வேதாகமத்தில் அப்.பவுல் தன்னுடைய நிருபத்தில் போதும் என்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம் என எழுதுகிறார். அதாவது உங்களிடத்தில் இருக்கிறதை போதும் என்று எண்ணுங்கள் என்று குறிப்பிடுகிறார்.
இதை வாசிக்கின்றதான பிரியமானவர்களே! உங்களிடத்தில் இருக்கிறதை போதும் என்று எண்ணுங்கள். இயேசுவானவர் உங்களுடைய கரங்களில் கொடுத்திருக்கிற ஆசீர்வாதங்களாக இருக்கலாம், வேலை வாய்ப்பாக இருக்கலாம், திறமைகளாக இருக்கலாம், குடும்பமாகவும், உறவுகளாகவும் இருக்கலாம். உங்களுக்கு என்று அவரால் அளந்து கொடுக்கப்பட்டதில் போதும் என்று இருங்கள். உங்களிடம் இல்லாத ஒன்றைக் குறித்துக் கவலையோ ஏக்கமோ வேண்டாம். இருக்கிறதில் போதும் என்று நினைத்து நன்றி செலுத்துங்கள். நீங்கள் எதிர்பாராத ஆசீர்வாதங்களால் கர்த்தர் உங்களை நிரப்பிடுவார். ஆமென்!
- Mrs.சக்தி சங்கர்ராஜ்
ஜெபக்குறிப்பு :
அலுவலகப் பணியாளர்கள் ஒவ்வொருவரையும் தேவன் விசேஷித்த ஞானத்தினால் நிரப்பி பயன்படுத்த ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250