By Village Missionary Movement
Wednesday, 13-Apr-2022இன்றைய தியானம்(Tamil) 13-04-2022
முடிந்தது
“இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார்.’’ - யோவான்19:30
இயேசு சிலுவையில் மொழிந்த ஆறாம் வார்த்தை:
முற்காலத்தில் தேவனோடு சஞ்சரித்துக் கொண்டிருந்த நோவாவுக்கோ கர்த்தரின் கண்களில் கிருபை கிடைத்தது. தேவன் இவ்வுலகத்தில் நோவாவைக் குறித்ததான தன் நோக்கத்தை நிறைவேற்றினார். தேவன் தனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் நோவா செய்து முடித்தார்.
நாம் அறிந்திருக்கிறபடி இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் வாழ்ந்த நாட்களில் பிதாவின் சித்தம் செய்கிறவராகவே வாழ்ந்தவர். பிதாவாகிய தேவன் தனக்கு என்ன செய்ய வேண்டும் என்று காண்பிக்கிறாரோ அதை மட்டுமே செய்து நிறைவேற்றினார். இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் வந்த நோக்கமே இந்த உலகத்தில் பிறந்த, பிறக்கப் போகிற ஒவ்வொருவருடைய பாவங்கள், சாபங்கள், வியாதிகளை நீக்கி அவர்களை மீட்கவும் அதற்காகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார். இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும் என்று 1யோவான் 1:7 ல் நாம் வாசிக்கிறோம். அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக் கொண்டு நம்முடைய துக்கங்களைச் சுமந்தார் என்று ஏசாயா 53:4ல் வாசிக்கிறோம். பிதாவின் சித்தத்தை தம்முடைய மரணபரியந்தம் நிறைவேற்றின இயேசு , தம்முடைய சரீரத்தில் மிகுந்த பாடுகள் இருந்த போதும் ஒருவேளை தமது உள்ளத்தில் முழுமையோடு முடிந்தது என்று சொல்லி தம்முடைய ஜீவனை பிதாவினிடத்தில் ஒப்புவித்தார்.
எனக்கன்பானவர்களே, தம்மால் முன் குறிக்கப்பட்டவர்களைக் கொண்டு தேவன் தமது வேலையை நிறைவேற்றுகிறார். நோவாவைக் குறித்ததான திட்டத்தை தேவன் நோவாவைக் கொண்டு நிறைவேற்ற நினைத்தபோது அதற்கு நோவா கீழ்ப்படிந்தார். ஆகவே தேவ பக்தியுள்ள தலைமுறைகள் உருவாகவும் பூமியிலுள்ள சகல மிருக ஜீவன்களும் உருவாகவும் காரணமாயிருந்தார்.
ஆனால் இயேசுகிறிஸ்துவின் கீழ்ப்படிதலினாலே முழு உலகமும் காக்கப்பட்டது என்பது எத்தனை பெரிய சந்தோஷம். இன்றைக்கு நம்முடைய கீழ்ப்படிதலைக் குறித்து நாம் சற்று சிந்தித்துப் பார்ப்போம். நம்முடைய கீழ்ப்படிதலினாலே நம்முடைய குடும்பம் காப்பாற்றப்படுமா? நமக்கு அருகில் உள்ளவர்கள் காப்பாற்றப்படுவார்களா? நம்முடைய சொந்தங்கள் காப்பாற்றப்படுவார்களா? இயேசுவை அறியாத புறமதத்தவர்கள் காப்பாற்றப்படுவார்களா? இயேசு பிதாவின் சித்தம் செய்து ‘’முடிந்தது’’ என்று சொன்னபோது மனுக்குலத்திற்கு மீட்பு ஆரம்பமானது. நாம் நம்முடைய கடமைகளை செய்து முடித்து ‘’முடிந்தது’’ என்று நம் கண்களை மூடும் போது நமக்கு பின்பு வருபவர்கள் தேவபக்தியுள்ள சந்ததிகளாக வருவார்களா? அதற்கு நாம் இன்றைய நாட்களில் தேவசித்தம் நிறைவேற்ற முயற்சிப்போமா? இயேசுவின் வார்த்தைகளுக்கு கீழ்ப்படிவதில் உங்களுக்கும் ஒரு பங்கு உண்டா?
- Bro.பொன்மணி பால்
ஜெபக்குறிப்பு
மோட்சப் பயணம் தின தியான இதழை வாசிப்போர் சத்தியத்தில் வளர்ந்து சாட்சியாய் ஜீவிக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250