By Village Missionary Movement
Saturday, 09-Apr-2022இன்றைய தியானம்(Tamil) 09-04-2022
அதோ, உன் தாய்
‘’…இயேசு... தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார்” - யோவான்19:26
இயேசு சிலுவையில் மொழிந்த மூன்றாம் வார்த்தை:
இயேசுகிறிஸ்து சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்தபோது பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும் மிகுந்த பொருளை உள்ளடக்கியது. பொதுவாக ஒருவர் இறக்கும் தருவாயில் தன்னுடைய குடும்பப் பொறுப்புகளை உரியவர்களிடம் ஒப்படைப்பர். தகப்பனாயிருந்தால் மனைவியிடமோ, அநேக பிள்ளைகள் இருந்தால் மூத்த மகனிடமோ மற்ற பிள்ளைகளைக் கவனிக்கும் பொறுப்பை ஒப்படைப்பார். அது போலவே நம் அருள்நாதர் இயேசுகிறிஸ்து, கணவனற்ற தன் தாயை பராமரிக்கும் பொறுப்பை அன்பின் சீஷனாகிய யோவானிடத்திலே கொடுத்தார். 33½ ஆண்டு கால உலகவாழ்விலே பிதா தனக்கு கொடுத்த அனைத்தையும் நிறைவேற்றி முடித்தவர். அந்த கொடூரமான வேதனையின் மத்தியிலும் குடும்பத்தில் தனக்கு இருந்த பொறுப்பை கரிசனையோடு நிறைவேற்றி முடிக்கிறதைப் பார்க்கிறோம்.
உலகத்திலேயே யாருக்கும் கிடைக்காத பாக்கியம் மரியாளுக்கு கிடைத்திருந்தது. இறைமகன் இயேசுவை கர்ப்பத்தில் சுமந்து, பெற்று வளர்க்கும் பெரும் பாக்கியம்! ஆனாலும் உன் ஆத்துமாவையும் ஒரு பட்டயம் உருவிப்போகும் என்ற தீர்க்கதரிசனம் நிறைவேறுதலாக, இயேசு சிலுவையில் தொங்கிக்கொண்டிருப்பதை காண சகிக்காமல் கண்ணீர் விட்டாள். இனி தன்னை யார் கவனிப்பார்கள் என்ற எண்ணம் மரியாளுக்கு இருந்ததோ இல்லையோ, ஆனால் படுவேதனையின் மத்தியிலும் இயேசுகிறிஸ்துவுக்கு இருந்தது. இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது சீஷர்களில் அநேகர் ஓடிவிட்டனர். யோவான் மட்டும் மரியாளின் அருகே நின்றுகொண்டிருந்தான். அவருடைய மார்பில் சாய்ந்துகொண்டிருந்த யோவானுக்கு தன் இருதயத்தின் பாரம் புரியும், அவரே தகுதியானவர் என்று மரியாளை ஒப்படைத்தார். பெற்றோரை பராமரிப்பதில் உலகத்திற்கு ஒரு முன்மாதிரி இயேசுகிறிஸ்துவே.
பிரியமானவர்களே! நமக்கும் இந்த பொறுப்பு உண்டு. அதை நாம் நிச்சயம் நிறைவேற்ற வேண்டும். இன்றைய காலகட்டத்தில் பிள்ளைகள், திருமணம், வேலை என்று தூர இடத்திற்கோ, தேசத்திற்கோ சென்றுவிடுகின்றனர். பெற்றோரை பராமரிப்பது ஆசீர்வாதம் என்ற சத்தியத்தை ஏற்க மனதில்லை. சிலர் அவர்களிடமிருந்து சொத்துக்களைப் பெற்றுக்கொண்டு அவர்களை முற்றும் மறந்து விடுகின்றனர். ஆசீர்வாதத்தோடு இணைந்துள்ள ஒரே கட்டளை, ‘’உன் தாயையும் தகப்பனையும் கனம் பண்ணுவாயாக’’ என்பதே! நாம் இயேசுவின் முன்மாதிரியை பின்பற்றி ஆசீர்வாதமான சந்ததியாய் இவ்வுலகில் வாழ்வோம்.
- Mrs. புவனா தனபாலன்
ஜெபக்குறிப்பு:
‘’கண்மணியே கேள்’’ என்ற ஒரு சிறப்பு நிகழ்ச்சியை வாலிப பெண்பிள்ளைகளுக்கென வாரந்தோறும் ஞாயிறு மாலை 6 மணி முதல் 6.30 மணிவரை ஒளிபரப்பி வருகிறோம். இதன் மூலம் தேவன் அநேக வாலிபப் பிள்ளைகளைத் தொட ஜெபியுங்கள்.
Whatsapp:
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள +9194440 11864 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250