By Village Missionary Movement
Tuesday, 05-Apr-2022இன்றைய தியானம்(Tamil) 05-04-2022
இரத்தத்தில் எழுதப்பட்டது
“நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங்குறித்து மேன்மை பாராட்டாதிருப்பேனாக;” - கலாத்தியர் 6: 14
ஒரு பெரிய வாகன விபத்தில் அநேகர் சிக்கி உயிருக்காக போராடிக் கொண்டிருந்தனர். தீயணைப்புப் படைவீரர்கள் மற்றும் ஆம்புலன்சுகள் வரவழைக்கப்பட்டன. அந்த விபத்துக்குள்ளான வாகனத்தின் ஒரு இருக்கையில், ஒரு செய்தி எழுதி இருப்பதைக் கண்டனர். அது அவர்கள் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. அந்த விபத்தில் பாதிப்படைந்த ஒருவர், தான் இறந்து கொண்டிருப்பதை நினைத்து தன்னில் இருந்து வெளியேறும் இரத்தத்தை எடுத்து தனக்கு முன் இருந்த இருக்கையில் “எனது மனைவியையும், குழந்தைகளையும் அதிகமாக நேசிக்கிறேன்“ என்று எழுதி இருந்தார். ஒரு மனிதன் தன் குடும்பத்தின் மீது வைத்த அன்பைப் பார்க்கும் போதே நெகிழ்ச்சி அடைகிறோம். இயேசு கிறிஸ்து பாவிகளாகிய நம் மீது வைத்த அன்பை தன் இரத்தத்தையெல்லாம் சிந்தி வெளிப்படுத்தினாரே! எத்தனை பெரிய தியாகம்!
அப். பவுல் கலாத்தியர் நிருபத்தை முடிக்கும் போது கிறிஸ்துவுக்காக தன் வாழ்க்கையில் பட்டபாடுகளை மறைமுகமாக நினைத்து எழுதுகிறார்.அந்த மதத் தலைவர்களின் ஆடம்பரமான வாழ்க்கைக்கு அடையாளமாக இருக்கிற அந்த மத சடங்குகளை விட இயேசுகிறிஸ்துவின் சிலுவை மரணமும் உயிர்தெழுதலும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று போதித்ததினால் அநேக முறை தண்டிக்கப்பட்டார். பவுல் தன்னுடைய பாதுகாப்பிற்காக சிலுவை மரணத்தை திரித்துக் கூற விரும்பவில்லை. தனது சொந்த வாழ்க்கையை சிலுவைப் பாதையில் இணைத்து, இயேசு கிறிஸ்து சிலுவையில் சிந்தின இரத்தத்தின் மூலம் தேவன் நம் மீது வைத்த அன்பை எழுதி விட்டார் என்று வெளிப்படையாக சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவாக அறிவித்தார்.
பிரியமானவர்களே! நமது நற்கிரியைகள், நீதி எல்லாம் அழியும் கந்தை என அறிவோம். கிறிஸ்து நம்மீது வைத்த அன்பை வெளிப்படுத்த சிலுவையில் இரத்தம் சிந்தினார். அந்த கல்வாரியின் காட்சியை கண்டோராக, அவரது அன்பை சக மனிதர்களிடம் வெளிப்படுத்தி வாழுகின்ற வாழ்க்கை நாம் வாழவும், அவருக்காக நாம் அனுபவிக்கும் பாடுகளை சகித்துக்கொள்ளவும் தீர்மானிப்போம். கிறிஸ்து நம்மை ஆளுகை செய்ய அர்ப்பணிப்போம். கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையும் குறித்து மேன்மை பாராட்டாதிருப்போமாக. ஆமென்.
- A. பியூலா
ஜெபக்குறிப்பு:
சத்தியம் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நமது நிகழ்ச்சியின் மூலம் அநேகர் கிறிஸ்துவுக்கென்று வைராக்கியமாய் செயல்படுகிறவர்களாக எழும்ப ஜெபியுங்கள்.
Whatsapp:
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள +9194440 11864 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250