By Village Missionary Movement
Thursday, 24-Mar-2022இன்றைய தியானம்(Tamil) 24-03-2022
பலவந்தம் பண்ணுதல்
“…பரலோகராஜ்யம் பலவந்தம் பண்ணப்படுகிறது; பலவந்தம் பண்ணுகிறவர்கள் அதைப் பிடித்துக்கொள்ளுகிறார்கள்.” - மத்தேயு 11:12
இங்கிலாந்திலுள்ள பிரிஸ்டல் நகரைச் சேர்ந்த தேவ ஊழியர் ஜியார்ஜ் முல்லர், அமெரிக்காவிற்கு கப்பலில் பயணித்துக் கொண்டிருந்தார். அக்கப்பல் தலைவர் சிறந்த கிறிஸ்தவர், முல்லரின் நண்பரும் கூட! கடலில் தடையின்றி சென்று கொண்டிருந்த கப்பல் திடீரென்று அதிக மூடுபனி காரணமாக நின்றுவிட்டது . முல்லர் கப்பல் தலைவரிடம் நான் சனிக்கிழமை பிற்பகலில் கீயூபெக் நகரில் (அமெரிக்கா) இருக்க வேண்டும் என்றார். “அது நடக்க முடியாத காரியம் ஏனென்றால் நம் பயணத்தைத் தடைசெய்திருக்கும் மூடுபனிப் படலம் எவ்வளவு அடர்த்தியானது தெரியுமா?” என்றார் கப்பல் கேப்டன்.
முல்லரோ, “என் கண்கள் கப்பல் கேப்டன் மீதல்ல, என் வழ்வின் எல்லாக் காரியங்களையும் ஆளுகிற உயிருள்ள ஆண்டவரை நோக்கியிருக்கிறது” என்று சொல்லி உடனே முழங்காலூன்றி, கர்த்தர் அற்புதம் நிகழ்த்துமாறு பலவந்தம் பண்ணி கேப்டனுடன் சேர்ந்து ஜெபித்தார். இருவரும் சென்று கப்பல் முன்னால் பார்த்த போது மூடுபனி முற்றிலும் மறைந்திருந்தது. சரியான நேரத்திற்கு ஊழியத்தை நிறைவேற்ற அமெரிக்கா சென்றடைந்தார்.
வேதத்திலும் பலவந்தம்பண்ணி தேவ கிருபையை பெற்றுக் கொண்ட ஒருவரைக் குறித்து நாம் தியானிப்போம் . நியாயாதிபதியை பலவந்தம் பண்ணின விதவை நியாயம் பெற்றாள் என்று இன்றைய வேத பகுதியில் வாசித்தோம். தேவனுக்குப் பயப்படாத, மனுஷரை மதியாத நியாயாதிபதி விதவையை கண்டுகொள்ளவேயில்லை. ஆனால் தினமும் அந்த விதவை நியாயாதிபதியை ஓயாமல் அலட்டிக் கொண்டு இருந்து பலவந்தம்பண்ணி நியாயத்தை அந்த அநீதியுள்ள நியாயாதிபதியிடமிருந்து பெற்றுக்கொண்டாள்.
பழைய ஏற்பாட்டிலே , நம் முற்பிதாவாகிய யாக்கோபும், ஆண்டவரோடு போராடி அவரை பலவந்தம் பண்ணி நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மை நான் போகவிடேன் என்று சொல்லி தேவனிடமிருந்து ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொண்டார் . மேலும் பலவந்தம் பண்ணுகிறவர்கள் பரலோக ராஜ்யத்தைப் பிடித்துக்கொள்ளுகிறார்கள் என்று இயேசு கிறிஸ்து கூறுவதை வாசிக்கிறோம். நாமும் யாக்கோபைப்போல ஜார்ஜ் முல்லரைப்போல ஜெபத்திலே போராடி ஜெயத்தைப் பெற்றுக்கொள்வோம். எல்லாவற்றுக்கும் மேலாக நமது இலக்காகிய பரலோக ராஜ்யத்தை பலவந்தம் பண்ணி பிடித்துக்கொள்ள தேவன் நமக்கு அருள்புரிவாராக.
- Mrs. ஜாஸ்மின் பவுல்
ஜெபக்குறிப்புகள்:
மோட்சப் பயணம் தின தியான இதழுக்கு எழுதிக் கொடுக்கும் நபர்கள் தேவ ஆவியினால் நடத்தப்பட்ட ஜெபியுங்கள்.
Whatsapp:
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள +9194440 11864 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250