By Village Missionary Movement
Tuesday, 22-Mar-2022இன்றைய தியானம்(Tamil) 22-03-2022
லேசான உபத்திரவம்
“…இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்ல” - ரோமர் 8:18
இரண்டாம் உலகப்போரின் வெற்றியில் அமெரிக்க இராணுவ தளபதி ஜெனரல் ஐசன் ஹேவர் முக்கிய பங்கு வகித்தார். அவர் முதன் முதலாக இராணுவப் பயிற்சியில் சேர்ந்த போது, அங்கு படும் கஷ்டங்களை தினமும் தன் தந்தைக்கு கடிதமாக எழுதுவது வழக்கம். அதில் அதிகாலை 4 மணிக்கு எழும்ப வேண்டும்.ஒரு நாளைக்கு 20 கீ.மீ ஓட வேண்டும், சுமார் 40-45 டிகிரி வெப்பமுள்ள பாலைவனப்பகுதியில் பயிற்சி எடுக்கும் போது கிடைக்கும் ஆகாரம் 100 மில்லி பால் மட்டுமே இது போன்றதான, தான் அநுபவிக்கின்ற கஷ்டங்களை கடிதமாக எழுதி அனுப்பினாலும் தந்தையிடமிருந்து ஒரு பதிலும் வரவில்லை. இப்படியாக அவர் தனது தந்தைக்கு 100 கடிதங்களுக்கு மேலாக எழுதினார்.
இந்த நூறு கடிதங்களுக்கு பதிலளிக்க அவரின் தந்தை ஒரு போஸ்ட் கார்டில் ஒரு சம்பவத்தை எழுதினார். “இரண்டு பேர் சிறையிலடைக்கப்பட்டனர். ஒருவன் தன்னுடைய பரிதாப நிலையைக் கண்டு கண்ணீர் வடித்து தலை கவிழ்ந்தவாறே அவ்வறையின் மணலை பார்த்தே துக்கத்துடன் தன் நாட்களை கழித்தான். மற்றவனோ துருப்பிடித்த ஜன்னல் வழியாக ஆகாயத்து நட்சத்திரங்களைப் பார்த்து அவற்றின் அழகினையும் வெளிச்சத்தையும் கண்டு, சந்தோஷத்துடன் காலத்தைக் கழித்தான். நீ யாரைப் போலிருக்கப்போகிறாய்?” என்று எழுதி தன் மகனுக்கு அனுப்பிவைத்தார். இந்த கடிதத்தைப் படித்த ஐசன் உற்சாகமடைந்து சந்தோஷத்துடன் இராணுவப் பயிற்சியை முடித்து, அமெரிக்க தேசத்தின் 34-வது ஜனாதிபதியாகவும் மாறினார்.
அப்போஸ்தலனாகிய பவுல் பட்ட பாடுகள் கொஞ்ச நஞ்சமல்ல, எத்தனையோ பாடுகளின் வழியாக அவர் கடந்து சென்றாலும் கிறிஸ்துவுக்காக அத்தனை பாடுகளையும் பொறுமையாக சகித்தார். அந்தப் பாடுகளை குறித்து அவர் சோர்ந்துபோகாமல் கிறிஸ்து தன்னை அழைத்த அழைப்பில் உண்மையாக இருந்தபடியால் அவைகளை லேசான பாடுகள் என்று ஆச்சரியவிதமாக கூறினார். அந்த உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது என்று விசுவாசித்தார்.
பிரியமானவர்களே! நாமும் ஒரு வேளை அநேக பாடுகளுக்கு இடையே கடந்து சென்று கொண்டிருக்கலாம், பாடுகளை நாம் நோக்கி பார்த்துக் கொண்டிருந்தால், அது பெரியதாகத்தான் தோன்றும். நம் பாடுகள் எதுவும் நிலையானதல்ல, ஒரு நாள் அவை நம்மை விட்டு கடந்து போகத்தான் செய்யும். ஆனால் இப்படி ஆயிற்றே என்று நாம் துக்கத்தில் மூழ்கிப்போனால் யாராலும் நமக்கு உதவ முடியாது.
- Bro.சங்கர்ராஜ்
ஜெபக்குறிப்பு:
தினமும் அதிகாலை 5 மணிக்கு ஒளிபரப்பப்படும் “Healing service” மூலம் அநேகர் அற்புத சுகத்தைப் பெற ஜெபியுங்கள்.
Whatsapp:
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள +9194440 11864 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250