By Village Missionary Movement
Saturday, 19-Mar-2022இன்றைய தியானம்(Tamil) 19-03-2022
எளிமையான ஆவி
“ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது.” – மத்தேயு 5:3
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஆபிரகாம்லிங்கனின் தகப்பன் செருப்புத் தைக்கும் தொழிலாளியாக இருந்தார். இதை வைத்து அவரது ஆட்சிக் காலத்தில், எதிர்கட்சித் தலைவராக இருந்த ஒருவர் லிங்கனை இழிவுபடுத்த எண்ணினார். ஒருநாள் சட்டசபை கூட்டத்தில், “உங்கள் அப்பா தைத்துக் கொடுத்த செருப்பைத்தான்இன்னும் போட்டுக் கொண்டிருக்கிறேன்” என்றார். உடனே லிங்கன், “அப்படியா என் அப்பா தைத்த செருப்பு எவ்வளவு நீண்ட காலமாக உழைத்திருக்கிறது பாருங்கள். என்றாவது ஒருநாள் அது பிய்ந்துவிட்டால் என்னிடம் கொடுங்கள் தைத்துத் தருகிறேன். ஜனாதிபதியாக இருந்தாலும் எனக்கும் செருப்புத் தைக்கத் தெரியும்.” என்றார் அடக்கமாக. அவரது உள்ளத்தில் காணப்பட்ட எளிமையான சிந்தையைப் பாருங்கள்.
இன்றைய வேதபகுதியிலே நாம் வாசித்தபடி, தாவீது ராஜா கர்த்தருடைய பெட்டியை ஓபேத் ஏதோமின் வீட்டிலிருந்து தாவீதின் நகரத்துக்குள் கொண்டுவருகையில், தன் முழுபலத்தோடு கர்த்தருக்கு முன்பாக நடனம் பண்ணினார். இதை சவுலின் குமாரத்தியும் தாவீதின் மனைவியுமாகிய மீகாள் ஜன்னல் வழியாகப் பார்த்து தன் இருதயத்தில் தாவீதை அவமதித்தாள். “நீர் ராஜாவைப் போலவா நடந்து கொண்டீர், அற்ப மனுஷனில் ஒருவனைப் போல் அல்லவா ஆடிப் பாடினீர்” என்று இழிவாய் பேசினாள். தாவீதோ, மனைவியின் இச்செயலுக்கு கடுஞ்சொற்களையோ அல்லது தண்டனையோ கொடுத்திருக்கலாம். ஆனால் அவரோ கணவன், ராஜா என்ற தகுதியையும் கொண்டு தீர்ப்பிடாமல் தன்னை தரைமட்டமாய் தாழ்த்தினார். “நீ என்னைக் குறித்து நினைப்பதைப் பார்க்கிலும் இன்னும் நான் என் பார்வைக்கு அற்பனுமாயிருக்கிறேன்” என்றார். இது சாதாரண வார்த்தையல்ல அவரது ஆவியில் இருந்த எளிமையான எண்ணத்தையே காட்டுகிறது. “நான் இராஜா” என்று நிமிடத்திற்கு நிமிடம் தனக்குள் நினைத்துக் கொண்டிராமல், தேவனுக்கு முன் தான் யார் என்பதை அவரது ஆவியில் அறிந்திருந்தார். ஆம், ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்.
அன்பரே! உங்களைக் குறித்து என்ன? பிறர் முன் தாழ்த்தப்படும்போது உங்களது மனநிலை எப்படி இருக்கிறது? பிறர் முன் தாழ்த்தப்படுதலும், சிறுமைப்படுத்தப்படுவதும் கஷ்டமான ஒன்றுதான். ஆனாலும் அந்த தாழ்த்துதலை ஏற்றுக்கொண்டு அவ்விடத்தில் எளிமையான ஆவியோடு காணப்படுவதுகூட ஒரு முதிர்ச்சியான அனுபவமே! ஆம், எப்போதும் நமது ஆவியும், சிந்தையும், எண்ணமும் எளிமையாய், தாழ்மையாய் இருக்கட்டும். நிச்சயம் நாம் கர்த்தரின் பார்வையில் பாக்கியவான்களே, பரலோக ராஜ்யம் நம்முடையதே!
- Mrs. ரூத் அனீஸ்
ஜெபக்குறிப்பு:
7000 ஊழியர்கள் மூலம் 1 லட்சம் கிராமங்கள் சந்திக்கப்படும் திட்டத்தில் அர்ப்பணிக்கப்பட்ட ஊழியர்கள் கிடைக்க ஜெபியுங்கள்.
Whatsapp:
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள +9194440 11864 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250