By Village Missionary Movement
Friday, 18-Mar-2022இன்றைய தியானம்(Tamil) 18-03-2022
மாயை மாயை
“...ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார்” – லூக்கா 12:15
பிரபல டென்னிஸ் வீரர் ஜான் மெக்கன்ரோ என்ற ஒருவர் இருந்தார். விளையாட்டின் நிமித்தம் பணம் புகழின் உச்சியில் காணப்பட்டார். தனது இருபத்தி நான்காம் வயதில் மிகப்பெரும் கோடீஸ்வரராக ஜான் இருந்தார். மேலும் இவரிடத்தில் சொந்தமாக பெரிய கப்பல் ஒன்றும் இருந்தது. கூட்டமொன்றில் அவரிடம் குறிப்பாக ஒரு கேள்வி கேட்கப்பட்டது. “உங்களுக்கான சவால் என்று எதைச் சொல்வீர்கள்” என்று கேட்டார்கள். சற்று அமைதிக்குப் பிறகு ஜான் “எனக்கான சவால் ஒன்றை தினமும் சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறேன்” என்றார். கூட்டத்தில் இருந்த அனைத்து மக்களும் வியப்போடு என்ன சவால் என்றார்கள். தொடர்ந்து கூறிய ஜான், நான்தான் என்றாராம். கோடி கோடியாக பணம் இருப்பதினால் நான் அனைத்தையும் அடைந்து விட்டேன் என்று நீங்கள் எண்ணிக் கொள்ள வேண்டாம் என்று சொன்னார்.
லூக்கா 12-ல் இயேசுவானவர் பொருளாசையை குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படி கூறுகிறார். பாவ பட்டியலில் பொருளாசையை குறித்து அநேக இடங்களில் சொல்லியிருக்கிறதை வேதத்தில் வாசிக்கலாம். பணமும் பொருளும் மிகுதியாக இருந்தால் அனைத்தையும் உடையதாக மனுஷர் கருதுகிறார்கள். ஆனால் இங்கு விஷயமே வேறு என்பதை பின்புதான் புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு மனிதனுக்கு பணம் பெருக பெருக மன அமைதி குறைந்துபோய் சமாதானம் என்பது கானல் நீராய் மாறிவிடுகிறது. இறுதியில் அவன் வாழ்வு முடிகிறது. இதைத்தான் பிரசங்கி எல்லாம் மாயை எனக் கூறுகின்றார்.
பணம் நமக்கு தேவைதான். ஆனால் அதுவே ஒரு மனிதனுக்கு முழுமையான திருப்தியைக் கொடுக்க முடியும் என்பது சாத்தியமில்லை. பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது என்று பவுல் கூறுகிறார். தேவன் பெருமைக்கு எதிர்த்து நிற்கிறவராகக் காணப்படுகின்றார். இதைத்தான் லூக்கா 12:15ல் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்று கூறுகிறது. இந்த உலகம் மாயை நிறைந்தது. எனவே நாமும் சவுல், சாலொமோனைப் போன்று இந்த மாயையான உலகத்தை, பொருளாசையை வெறுத்து தேவனிடம் சேரும்போது நமக்கு சமாதானமும் இளைப்பாறுதலும் உண்டாகிறது. இதைப் பெற்றுக்கொள்ள நாம் தாழ்மையோடு ஓடுவோம். ஆமென்!
- P. ஜேக்கப் சங்கர்
ஜெபக்குறிப்பு:
ஒரு லட்சம் கிராமங்களை தத்தெடுக்கும் 1 லட்சம் நபர்கள் எழும்ப ஜெபியுங்கள்.
Whatsapp:
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள +9194440 11864 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250