By Village Missionary Movement
Tuesday, 01-Mar-2022இன்றைய தியானம்(Tamil) 01-03-2022
அன்றாட வாழ்வில் சலிப்போ?
“...தேவன் உன் கிரியைகளை அங்கீகாரம்பண்ணியிருக்கிறார்.” – பிரசங்கி 9:7
வாழ்க்கையில் நமக்கு வரும் பிரச்சனைகளெல்லாம் கோலியாத்தைப் போல பெரிய பிரச்சனைகள் அல்ல. அப்படியே பெரிய பிரச்சனைகள் வந்து அதை நாம் சமாளித்துவிட்டால் அதில் ஒரு பரவசம், திருப்தி கிடைக்கிறது. வாழ்வில் ஒரு அர்த்தமிருப்பதுபோல் தோன்றுகிறது. ஆனால் அன்றாட வாழ்வில் நாம் தினமும் செய்யும் சாதாரண வேலைகள் நமக்கு சலிப்பை உண்டாக்குகின்றன. தினசரி வேலைக்குச் செல்லுதல், சமைப்பது, பாடங்களை படிப்பது போன்ற காரியங்கள் நமக்கு புளித்துப்போய் விடுகிறது. நாம் வாழ்க்கையில் என்ன பெரிதாய் சாதித்துவிட்டோம் என்ற எண்ணத்தில் இந்த அன்றாட வேலைகள் கூட பாரமாய், சோர்வாய் தோன்ற ஆரம்பிக்கிறது.
கிறிஸ்துவுக்காக பெரிய காரியங்களை செய்தவர்களுடைய பிரமிப்பூட்டும் வாழ்க்கை வரலாற்றை வாசிக்கும்போதும், கேள்விப்படும்போதும் நம்முடைய வாழ்க்கையெல்லாம் ஒரு வாழ்க்கையா? இப்படிப்பட்ட என்னுடைய அன்றாட வாழ்க்கை கர்த்தருக்கு பிரியமாயிருக்குமோ? என்ற கேள்விகள் கூட எழுகிறது.
தேவனுக்காக பெரிய காரியங்களைச் செய்ய அழைக்கப்பட்டிருக்கும் நாம், ஒரு காரியத்தை மறந்துவிடக்கூடாது. “நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும் எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்” (1கொரி.10:31) இந்த வசனம் சொல்வதென்ன? நம்முடைய வாழ்க்கையின் சிறு சிறு காரியங்களையும் அவருக்காக செய்யும்போது அதை அவர் சுகந்த வாசனையாக ஏற்றுக்கொள்கிறார். ஆம், தேவனுக்காக நாம் செய்யும் சிறிய காரியத்தையும் அவர் பெரிதாகவே பார்க்கிறார். ஆனால் நம்முடைய பெயர் பிரஸ்தாபத்திற்காக நாம் செய்யும் பெரிய காரியமும் அவர் பார்வைக்கு அற்பமானதே.
பிரியமானவர்களே! நீங்கள் ஒரு மாணவனாகவோ, குடும்பத்தை கவனிக்கும் மனைவியாகவோ, கம்பெனியில் வேலை செய்யும் கணவனாகவோ, ஊழியனாகவோ அழைக்கப்பட்டிருக்கலாம். எதுவானாலும் அழைக்கப்பட்ட இடத்திலிருந்து நீங்கள் செய்யும் எல்லா காரியத்தையும் உண்மையும் உத்தமமுமாய் செய்யும்போது தேவன் உங்களில் மகிமைப்படுகிறார். “இவள் செய்வது சமையல்தானே”, “இவன் செய்வது அன்றாட அலுவலக வேலைதானே” என்று ஆண்டவர் ஒருபோதும் எண்ணுவதில்லை. ஆகவே இனி ஒருநாளும் உங்கள் அன்றாட வேலையைக் குறித்து சலிப்போ, கேள்வியோ வேண்டாம். உங்கள் அன்றாட வாழ்வின் காரியங்களனைத்தும் தேவனுடைய சமுகத்தில் சுகந்த வாசனையாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அல்லேலூயா!
- J. சந்தோஷ்
ஜெபக்குறிப்பு:
இம்மாதம் முழுவதும் நடைபெறும் ஊழியங்களில் தேவகரம் உடனிருந்து வழிநடத்த ஜெபியுங்கள்.
Whatsapp:
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள +9194440 11864 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250