By Village Missionary Movement
Tuesday, 22-Feb-2022இன்றைய தியானம்(Tamil) 22-02-2022 (God’s creation’s special)
விடுதலை
“...ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார்;… கட்டுண்டவர்களைக் கர்த்தர் விடுதலையாக்குகிறார்.” – சங்கீதம் 146:7
என்னை தெரியாதோர் இந்த உலகத்தில் யாரும் இருக்க முடியாது என்றே சொல்லலாம். மற்றவரை திட்டுவதற்கும் சரி, கடினமாக பொதி சுமப்பவரை புகழ்வதற்கும் சரி என் பெயரை சொல்லாமல் இருக்கவேமாட்டார்கள். அந்த அளவுக்கு பிரபலமானவன் நான். பரிசுத்த வேத புஸ்தகத்திலே என்னைப் பற்றி எழுதப்பட்டிருப்பதை படித்துப் பாருங்கள். நான் பல வருடங்களாக ஒரு கிராமத்திலுள்ள வீட்டில் கட்டப்பட்டிருந்தேன். நானும் சுதந்தரமாய் வாழ விரும்பினேன். ஜனங்களுக்கு நன்மை செய்ய விரும்பினேன். ஆனால் யார் என்னை விடுவிப்பார்கள் என்று ஏங்கினேன்.
அந்த சமயத்தில்தான் இயேசுவைக் குறித்து கேள்விப்பட்டேன். அவர் ஜனங்களுக்கு நன்மை செய்கிறவர், பாவத்திலிருந்தும், சாபத்திலிருந்தும், வியாதியிலிருந்தும் விடுவிக்கிறவர். ஜனங்கள் மீது மனதுருகி அற்புதம் செய்கிறவர். மரித்தோரை உயிரோடு எழுப்பினவர் என்றெல்லாம் மக்கள் சொல்வதை நான் கேள்விப்பட்டேன்.
உடனே நான், “எனக்கும் உதவி செய்ய மாட்டீரா? உம்மை நான் பார்க்கமுடியுமா?” என்று ஆசையாய் உள்ளத்தில் எண்ணினேன். ஆனால் என்னால் அவரைத் தேடி போகமுடியாதே. என்ன ஆச்சரியம்! நான் இருக்கும் இடத்திற்கு அவர் என்னைத் தேடி வந்தார். ஆட்களை அனுப்பி “எதிரே இருக்கிற கிராமத்துக்குப் போங்கள், அங்கே கட்டப்பட்டிருக்கிற கழுதையையும், கழுதைக் குட்டியையும் காண்பீர்கள், அதன் கட்டவிழுங்கள், யாராவது கேட்டால் “இந்த கழுதை ஆண்டவருக்கு தேவை” என்று சொல்லுங்கள்” என்றாராம். இதைக் கேட்டதும் எனக்கிருந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
மனிதனின் பொதியை சுமந்தே என் வாழ்க்கை முடிந்துவிடுமோ என்றிருந்தேன். ஆனால் உலகத்திலுள்ள ஒவ்வொருமனிதனின் பாவத்தை சுமந்து தீர்க்கிற இயேசு கிறிஸ்துவை சுமக்கும்படி என்னையும் தெரிந்து கொண்டார் என்பது அளவற்ற மகிழ்ச்சியைத் தந்தது. இன்று உலகத்திற்கே என்னையும் ஒரு ஆசீர்வாதமாய் மாற்றியிருக்கிறார் என்ற செய்தி இன்றும் என்னை பூரிப்படைய வைக்கிறது. முகவரி இல்லாமல் ஒரே இடத்தில் கட்டப்பட்டிருந்த என்னை, இன்று அனைவரும் என்னைக் குறித்து பேசுமளவிற்கு மாற்றியிருக்கிறார்.
தேவபிள்ளைகளே! மற்றவருக்கு ஆசீர்வாதமாய் இருக்க வேண்டிய நீங்கள் இன்று ஏதோ ஒரு காரியத்தில் கட்டப்பட்டிருக்கலாம். அது பாவமோ, வியாதியோ, கடன்பிரச்சனையோ எதுவானாலும் சரி, பயப்படாதீர்கள். நீங்கள் இருக்கிற இடத்தில் இயேசுவே எனக்கு உதவிசெய்யும் என்று சொன்னால் போதும். அவர் உங்களைத் தேடிவந்து விடுவித்து, இந்த உலகத்திற்கே ஆசீர்வாதமாய் மாற்றி மகிழ்ச்சியான வாழ்க்கையைக் கொடுப்பார்.
- S. P. சந்தனபாண்டி
ஜெபக்குறிப்பு:
திங்கள்கிழமைதோறும் கைப்பிரதி ஊழியங்கள் மூலம் சந்திக்கப்படும் ஆத்துமாக்கள் தேவனை அறிய ஜெபியுங்கள்.
Whatsapp:
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள +9194440 11864 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250