By Village Missionary Movement
Sunday, 20-Feb-2022இன்றைய தியானம்(Tamil) 21-02-2022 (God’s creation’s special)
ஊடகம்
“நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார்.” – யோவான் 4:14
உடலின் சுத்திகரிப்புக்கு, சரீரத்தின் ஆரோக்கியத்திற்கு நான் மிகவும் பயன்படுகிறேன். ஒருநாளுக்கு 2 முதல் 3 லிட்டர் வரை என்னைப் பருகும்போதுதான் உடலில் ஓடுகின்ற இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு கழிவு வெளியேற்றப்பட முடியும். நீங்கள் ஒருநாள் உணவு உண்ணாமல்கூட இருந்துவிடலாம். ஆனால் ஒருநாள் தண்ணீராகிய என்னைக் குடிக்காமல் இருக்கவே முடியாது. நான் மட்டும் உங்களுக்குக் கிடைக்கவில்லையென்று வைத்துக்கொள்வோமே, நீங்கள் தவித்துவிடுவீர்களல்லவா? நாவெல்லாம் வறண்டு, சரீரமெல்லாம் சோர்ந்துவிடுமல்லவா? இந்த நிலையில் உங்கள் வாயில் சொல்லப்படும் வார்த்தை என்னவாக இருக்கும்? நான் தாகமாயிருக்கிறேன் என்றுதானே! இது சரீரத்தின் அமைப்பு.
வேதத்திலே சமாரிய ஸ்திரீயைக் குறித்து படித்திருப்பீர்கள். அவள் கிணற்றண்டை வருகிறாள். அந்நேரத்தில் அவ்வழியே வந்த இயேசுவும் அங்கு வந்து அமர்கிறார். அவருக்கோ ஒரே தாகம். தாகத்துக்குத் தா என்று அந்த ஸ்திரீயிடம் கேட்கிறார். இயேசுவோ யூதன், பொதுவாக யூதர்கள் சமாரியர்களிடம் சம்பந்தம் வைப்பதில்லை. ஆனால் இவர் அதையும் மீறி அவளிடம் தாகத்துக்குத் தா என்கிறார். ஏதோ ஒரு நோக்கம் இயேசுவுக்குள் இருந்ததை நான் உணர்ந்தேன். ஒருவேளை அவருக்கு ஆத்தும தாகமாயிருந்திருக்குமோ? இந்த கிணற்றுத் தண்ணீரைக் குடிக்கும் உனக்கு மறுபடியும் தாகம் உண்டாகும். ஆனால் நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகம் உண்டாகாது என்றார். நான் வியந்து பார்த்தேன். அவளிடத்தில் தனிநபர் ஊழியஞ்செய்து அவள் மூலமாய் ஒரு கிராமத்தையே ஆதாயப்படுத்திவிட்டார். அந்த சமாரியப் பெண்ணிற்குள் ஒரு தாகத்தை உண்டாக்கினார் பாருங்களேன். அவள் கிணற்றில் தண்ணீர் இறைப்பதை மறந்துவிட்டு ஊருக்குள் ஓடி இதை அறிவிக்கிறாள் என்று பார்க்கிறோம்.
அன்பார்ந்த தேவனுடைய பிள்ளைகளே! தண்ணீராகிய நான் சொல்வதைக் கொஞ்சம் கவனித்துக் கேளுங்களேன். இயேசுவுக்குள் இருந்த ஆத்துமாக்களைக் குறித்த தாகம் இன்று ஒவ்வொருவருக்கும் வரட்டும். அவர் எப்பொழுதும் பிதாவின் சித்தத்தை நிறைவேற்றுகிறவராக இருந்தார். அந்த சமாரிய ஸ்திரீ தன் நிலைமையை ஒத்துக்கொண்டு மனந்திரும்பினாள். அவளுக்குள் ஜீவத்தண்ணீர் உண்டானவுடன் அவளுடைய கிராம மக்கள் அனைவருக்கும் ஆசீர்வாதமாய் மாறினாள். நான் சாதாரண தண்ணீராக ஒரு மனிதனின் சரீர தாகத்தை தணிப்பேன் அவ்வளவுதான். ஆனால் ஒவ்வொருமனிதனும் ஜீவத்தண்ணீராம் இயேசுகிறிஸ்துவைக் கண்டுகொண்டு, அவருக்குள் தாகம் தீர்க்கப்பட நீங்கள் பிரயாசப்படுங்கள் என்று கூறுகிறேன். இயேசுவைச் சந்தித்த சமாரிய ஸ்திரீயின் மாற்றத்தைக் கண்டபின் இதுவே என் தாகமாக மாறிற்று. ஆனால் ஜீவத்தண்ணீராகிய இயேசுதான் உங்கள் தாகத்தை தணிக்கமுடியும் அல்லேலூயா!
- Mrs. சரோஜா மோகன்தாஸ்
ஜெபக்குறிப்பு:
60 மிஷனெரிகளை தாங்குகிற மிஷனெரி பங்காளர்கள் எழும்ப ஜெபியுங்கள்.
Whatsapp:
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள +9194440 11864 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250