By Village Missionary Movement
Wednesday, 16-Feb-2022இன்றைய தியானம்(Tamil) 15-02-2022 (God’s creation’s special)
மரக்கட்டையின் அதிர்ஷ்டம்
“...ஆரோனின் கோல் துளிர்த்திருந்தது; அது துளிர்விட்டு, பூப்பூத்து, வாதுமைப் பழங்களைக் கொடுத்தது.” – எண்ணாகமம் 17:8
நாங்கள் எரிப்பதற்கு விறகுகளாகவே பயன்படுகிறோம். நாங்கள் பொதுவாகவே யாரும் கேட்பாரற்றுதான் கிடப்போம். ஒருநாள் அதிக மழை பெய்ததால் நான் தண்ணீரிடம் கேட்டேன் என்னை எப்படியாவது காப்பாற்றி விடு என்று. மழைத்தண்ணீர் என்னை அடித்து சென்று எனக்கென்ன என்று ஓரிடத்தில் போட்டு விட்டு சென்றது. திரும்பவும் ஒரு ஓரத்தில் ஒதுங்கி இருந்தேன். எனக்கு விடிவுகாலம் உண்டாகாதா, நானும் மற்ற மரங்களைப் போல துளிர்த்து காய் தந்து கனி கொடுக்க மாட்டேனா என்று ஏங்கி தவித்தேன். என்னுடைய ஏக்க சத்தம் என்னை படைத்தவருக்கு கேட்டு விட்டது. பின்பு என்ன நடந்தது தெரியுமா? ஆரோன் என்ற மனிதர் என்னைக் கண்டு எடுத்து அதில் தன்னுடைய பெயர் எழுதி தேவசமுகத்தில் வைத்தார். என்னோடு வேறு 11 கோல்களும் அந்தந்த கோத்திரங்களின் பெயர் எழுதப்பட்டு வைக்கப்பட்டது. என்ன ஆச்சரியம்! காய்ந்து இருந்த நான் மறுநாளில் பூ பூத்து வாதுமைப் பழங்களைக் கொடுத்தேன். நான் ஒரே நாளில் துளிர்த்து பூப்பூத்து பழங்களை கொடுத்ததற்கான ரகசியம் சொல்லட்டுமா?
வேதத்தில் மோசே, ஆரோன் என்ற தேவ மனிதர்கள் இருந்தனர். அவர்கள் தேவ சமுகத்தில் ஆசாரிய ஊழியம் செய்து கொண்டிருந்தார்கள். தங்கள் கடமைகளை நேர்த்தியாக செய்து கொண்டிருந்தார்கள். இஸ்ரவேலிலுள்ள 12 கோத்திரங்களும் மோசே, ஆரோன் என்கிற தலைவர்களுக்கு விரோதமாய் முறுமுறுத்து அவர்கள் மீது வீண் பழி சுமத்தினார்கள். ஆகவே அந்த 11 கோல்களும் தேவ சமுகத்தில் முறுமுறுத்துக் காணப்பட்டன. ஆகவே அது துளிர்விடவில்லை. நான் துளிர்விட்டதற்கு காரணம் என்னை எடுத்த தேவ மனிதனின் கீழ்ப்படிதல், பயபக்தி ஆகியவையாகும்.
தேவ பிள்ளைகளே! நீண்ட நாட்களாக ஏதோ ஒரு காரியத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறீர்களா? அது கர்ப்பத்தின் கனியாக இருக்கலாம், வேலை காரியமாக இருக்கலாம், பதவி உயர்வாக இருக்கலாம், தொழில் காரியமாக இருக்கலாம், பிள்ளைகளின் திருமண காரியமாக இருக்கலாம், எதுவாயிருந்தாலும் உங்களின் காத்திருக்குதல் களிப்பாக மாறும் என்பது நிச்சயம். நம் தேவன் எல்லாவற்றையும் செய்ய வல்லவர் என்ற விசுவாசத்தோடு முறுமுறுப்பில்லாமல் தேவ சமுகத்தில் காத்திருக்கும்போது களிப்பு நிச்சயம். உங்கள் காரியங்கள் துளிர்விடும். நீங்கள் பதவி, அதிகாரம் இவற்றை நாடாமல், ஆரோனைப் போல் உங்களுக்கென்று தேவன் தந்த பொறுப்பை முறுமுறுப்பில்லாமல் செய்யும்போது, தேவன் தேடிவந்து உங்களை உயர்த்துவது நிச்சயம். நீண்ட நாட்கள் காத்திருக்கிறது இருதயத்தை இளைக்கப் பண்ணும், விரும்பினது வரும்போதோ ஜீவ விருட்சம் போல் இருக்கும். ஆமென்.
- Mrs. ஜோதி ஸ்டாலின்
ஜெபக்குறிப்பு:
காந்திநகர் பகுதியில் சுவிசேஷ ஊழியம் செய்ய நான்கு சக்கர வாகனம் வாங்கப்பட ஜெபியுங்கள்.
Whatsapp:
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள +9194440 11864 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250