By Village Missionary Movement
Friday, 11-Feb-2022இன்றைய தியானம்(Tamil) 11-02-2022 (God’s creation’s special)
உயிர் காக்கும் பெட்டி
“...ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக் கொள்ளுகிறவன் ஞானமுள்ளவன்.” –
நீதிமொழிகள் 11:30
உங்க எல்லோருக்கும் மோசேயைப் பற்றி நல்லா தெரியும். அந்த மோசேயின் உயிரைக் காப்பாற்றுவதில் நான் முக்கிய பங்கு வகித்தேன். அதாங்க நான் நாணல்பெட்டி பேசுகிறேன். இலட்சக்கணக்கான இஸ்ரவேல் மக்களை வழிநடத்திச் செல்லப் போகும் ஒரு தலைவனை நான் பாதுகாப்பா கொண்டு போறேன் என்று எனக்குத் தெரியாது. எத்தனையோ குழந்தைகள் மரித்து அந்த நதியில் அடித்துச் செல்லப்படும்போது, பார்வோனின் குமாரத்தியின் கண்களில் நான் பட்டேன். அடுத்து வரும் சம்பவங்கள் உங்களுக்கே தெரியும்.
எனக்கென்னவோ, நான் உருவாகும் விதமும், உங்களுடைய ஆவிக்குரிய வளர்ச்சியும் பொருந்துகிற மாதிரி தோணுது. அதை சொல்றேன் கேட்பீங்களா? பெரிய செடியாக வளர்ந்த என்னை வெட்டி எடுக்கிறாங்க. அதாவது சேற்றிலிருந்து வேறு பிரிப்பாங்க. உங்க வாழ்க்கையும் முதலில் பாவசேற்றிலும் சாக்கடையிலும்தான் இருந்தது. அதிலிருந்து வெட்டி எடுக்கப்பட்டு வேறு பிரிக்கப்பட்ட ஒரு வாழ்க்கை வாழ துவங்க வேண்டும். அடுத்து என்னை சூரிய ஒளியில் உலர வைப்பார்கள். அதுபோல நீதியின் சூரியனாம் இயேசு கிறிஸ்துவின் வெளிச்சத்தில் உங்களது ஜென்ம சுபாவங்கள் எல்லாம் மாற்றப்படணும். இப்படி காய்ந்த என்னை வைத்து பெட்டி செய்து விட முடியாது. நெரிந்து முறிந்து விடுவேன். என்மீது தண்ணீர் தெளித்து பக்குவப்படுத்த வேண்டும். அதுபோல நீங்களும் ஜீவத்தண்ணீராகிய ஆவியானவரின் நிறைவை பெற்று, வேத வசனத்தால் பக்குவமடைய வேண்டும். பெட்டியாக பின்னப்பட்ட என்னில் சின்ன சின்னதாயுள்ள இடைவெளிகளை பிசினும் கீலும் வைத்து மூடினார்கள். ஆகவேதான் ஒரு சொட்டு தண்ணீர் கூட உள்ளே நுழையாமல் மோசேயுடைய உயிரை காத்துக்கொண்டேன். கீலும் பிசினும் பெட்டி மிதக்க எவ்வளவு முக்கியமோ அதுபோல நீங்களும் ஆண்டவரோடு அலாதி அன்பினால் மூடப்பட்டு, கிருபையினால் நிறைந்திருக்க வேண்டியது ரொம்பவே முக்கியம். அப்போதுதான் நாம் சந்திக்கும் ஆத்துமாக்களை பத்திரமாக பரலோகத்தில் சேர்க்க முடியும். சரிதானே!
ஆம், பிரியமானவர்களே! நாணற்பெட்டி சொன்னதும் சரிதான். நாம் இத்தனை முறைகளையும் கடந்தால்தான் அழியும் ஆத்துமாக்களை காப்பாற்றி ஆத்தும ஆதாயமும் செய்ய முடியும். இன்றும் பலர் வியாதிகளால், கொள்ளை நோயினால், தற்கொலையினால் ஆண்டவரை அறியாமலேயே நரகத்திற்கு நேராய் போய்க்கொண்டிருக்கிறார்கள். இந்த ஆண்டில் இயேசுவை அறியாமல் பாவத்திற்கு அடிமையாக வாழும் மக்களை ஆண்டவரண்டையில் கொண்டுபோய் சேர்க்கும் நாணற்பெட்டியாக செயல்பட உங்களை ஒப்புக்கொடுப்பீர்களா?
- Bro. ஜான் ஜெயராஜ்
ஜெபக்குறிப்பு:
அலுவலகப் பணியில் பயன்படுத்தப்படும் கணினி மற்றும் லேப்டாப், பிரிண்டர் பழுதின்றி செயல்பட ஜெபியுங்கள்.
Whatsapp:
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள +9194440 11864 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250