By Village Missionary Movement
Thursday, 10-Feb-2022இன்றைய தியானம்(Tamil) 10-02-2022 (God’s creation’s special)
சமுத்திரத்தின் அறைகூவல்
“...கடலைப்பார்த்து: இரையாதே, அமைதலாயிரு என்றார்...” – மாற்கு 4:39
தேவனுடைய படைப்பில் நான் ஒரு அதிசயம். என்னுடைய ஆழம், நீளம், உயரம், அகலம் யாராலும் அளவிடவே முடியாது. எங்களுக்குள்ளும் பல உயிரினங்கள் வாழ்கின்றன. எங்களுக்கு ஓய்வே கிடையாது. அலை அலையாய் காற்றோடு சேர்ந்து ஆர்ப்பரித்துக் கொண்டிருப்போம். என்னை கைகளுக்குள் அடக்க முடியாது. எங்களது ஆர்ப்பரிப்பை வெளியிலிருந்து பார்த்து வியந்தவர்கள் அநேகர். ஒருமுறை எங்கள் மேல் படகில் இயேசுவின் சீஷர்கள் பயணம் செய்து கொண்டிருந்தனர். நாங்களும் பேரிரைச்சல் சத்தத்தோடு ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தோம். படகும் எங்கள் மேல் சென்று கொண்டிருந்தது. எங்களுடைய குதூகலம் தாங்கமுடியாமல் படகு அங்குமிங்குமாக அலைக்கழிக்கப்பட்டது. படகினுள் இருந்த சீஷர்கள் எங்கள் ஆக்ரோஷத்தைக் கண்டு அஞ்சி அலறினர், என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றனர். எங்களைக் காப்பாற்ற யாரும் இல்லையே நாங்கள் தனித்து இருக்கிறோமே என்று பதைபதைத்தனர். அவர்களுக்குள் ஒரு துளி கூட நாம் பிழைப்போம் என்ற நம்பிக்கையில்லை. அப்பொழுது ஒரு ஆச்சரியத்தை கண்டு நாங்கள் மிரண்டு போனோம். எங்கள் சுபாவமே மூழ்கடிப்பது. ஆனால் இவரை ஒன்றுமே செய்ய முடியவில்லை. காரணம் அவர்தான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து! அவர்தான் எங்களைப் படைத்தவர்! அவர் என்மீது நடந்து வரும்போது என் சுபாவத்தை அவர் மீது காட்ட முடியவில்லை. ஏனென்றால், அவருடைய திவ்விய சுபாவம் என்மீது வந்து இறங்கியது. பின்பு இயேசுவைப் பார்த்த சீடர்களில் ஒருவனாகிய பேதுரு விசுவாசத்தோடு கடலில் நடந்தான். காற்று பலமாயிருந்ததைக் கண்டு பயந்து பேதுரு அமிழத்துவங்கியதும் இயேசுவை நோக்கிக் கூப்பிட்டான். அவர் கையைப்பிடித்து தூக்கி, இருவரும் படகில் ஏறியதை கண்டவுடன் நாங்கள் வாயடைத்து நின்றோம், காற்றும் அமைதியானது.
தேவ பிள்ளைகளே! தேவன் மீது உங்கள் விசுவாசம் எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அவ்வளவு அதிகமாய் நீங்கள் அவருக்கென்று தைரியமாய் பிரகாசிப்பீர்கள். இயேசு உங்களோடு இருந்தால் எங்களைப்போன்ற கடலாலும் உங்களை ஒன்றும் செய்யவே முடியாது. இயேசுவின் வார்த்தையினால்தான் நாங்கள் உண்டாக்கப்பட்டோம். ஆகவே அவரது வார்த்தைக்கு கட்டுப்பட்டு அவர் இரையாதே அமைதலாயிரு என்று எங்களைப் பார்த்து சொன்னபோது, நாங்கள் அமைதியானோம். ஏன், அந்த வல்லமையான வார்த்தை உங்களுக்குள் இருந்து வரும்போதும் நாங்கள் உங்களுக்கும் கட்டுப்படுவோம். என்னை விசுவாசிக்கிறவன் என்னைக் காட்டிலும் பெரிய காரியங்களை செய்வான் என்று இயேசு கிறிஸ்துவே சொல்லி இருக்கிறாரே!
- Bro. சங்கர்ராஜ்
ஜெபக்குறிப்பு:
விசாகப்பட்டினம் பாடேரு பணித்தளத்தில் ஊழியங்கள் ஆரம்பிக்கப்பட, அர்ப்பணிக்கப்பட்ட ஊழியர்கள் கிடைக்க ஜெபியுங்கள்.
Whatsapp:
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள +9194440 11864 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250