By Village Missionary Movement
Saturday, 29-Jan-2022இன்றைய தியானம்(Tamil) 29-01-2022
முதலிடம் யாருக்கு?
“கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்;…” – சங்கீதம் 16:8
ஓவியன் ஒருவன் அழகான படம் ஒன்றை வரைந்தான். அதில் தேவதூதன் ஒருவன் நிலத்தை உழுது கொண்டிருப்பதாகவும், விவசாயி ஒருவன் அந்த நிலத்தின் மையப்பகுதியில் முழங்காலில் நின்று இரு கரத்தையும் கூப்பி வானத்தை நோக்கி ஜெபித்துக்கொண்டிருப்பதாகவும் இருந்தது. விவசாயி தன் நிலத்தில் பயிர் செய்வதற்கு முன்பாக ஆண்டவரிடத்தில் தன் நிலம் நன்கு பலன் கொடுக்க வேண்டியும், ஆண்டவரை தன்னோடு ஒரு பங்காளியாக இருக்கும்படியாகவும் ஜெபிக்கிறான். அப்பொழுது ஆண்டவர் தன் தூதனை அனுப்பி விவசாயிக்கு உதவுகிறார். அந்த விவசாயி தன் வேலையில் தேவனை முன்வைத்து செயல்படும்போது தேவன் தன் தூதனை அனுப்பி அவருக்கு உதவிசெய்கிறதுபோல வரைந்திருந்தார்.
வேதாகமத்தில் தாவீதுடைய வாழ்க்கையை நாம் பார்க்கும்போது அவர் எல்லாவற்றிலும் ஆண்டவரையே முன் வைத்திருந்ததையும், ஆண்டவரைத் துதித்ததையும் காணமுடியும். சங்கீதம் 16:8ல் “கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்” என்றும், சங்கீதம் 34:1-ல், “கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்” என்றும் சொல்கிறதை வாசிக்கிறோம். இப்படியே எல்லா சூழ்நிலையிலும், எல்லா நேரத்திலும், எல்லா வேலையிலும் கர்த்தரையே முன் வைத்திருந்ததினால் எல்லா காரியத்தையும் தேவன் தாவீதுக்கு இலகுவாக்கி, ஆசீர்வதித்து ராஜாவாக உயர்த்தினார்.
கர்த்தருக்குள் பிரியமானவர்களே! ஒவ்வொரு நாளும் நாம் செய்யும்படி அநேக வேலைகள் உண்டு. அவையெல்லாவற்றிலும் ஆண்டவரை முன்வைத்து, ஜெபித்து செய்கிறோமா? சற்று நம்மை சிந்தித்துப் பார்ப்போம். நம் வேலைகளுக்கு முன்பாக அதற்காக ஆண்டவரோடு நாம் செலவிடும் நேரம் ஒருபோதும் வீணாகாது. எவ்வளவுக்கு அதிகமான நேரம் ஆண்டவரிடத்தில் ஜெபிப்பதிலும், துதிப்பதிலும், வேதம் வாசிப்பதிலும், தியானிப்பதிலும் செலவு செய்கிறோமோ, அவ்வளவு அதிகமாக நமது வேலைகளை தேவன் நமக்கு இலகுவாக்குவதைக் காணமுடியும். ஆம், தாவீதைப் போல நாமும் தேவனுக்கு முதலில் முக்கியத்துவம் கொடுக்கும்போது நம்மையும் தேவன் ஆசீர்வதித்து உயர்த்துவார். ஆமென்.
- P. சிவா
ஜெபக்குறிப்பு:
ஜெபக்கூடார கட்டுமானப் பணிகள் விரைவில் முடிவடைந்து தேவநாம மகிமைக்கென்று பிரதிஷ்டை செய்யப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250