By Village Missionary Movement
Saturday, 16-Jan-2021இன்றைய தியானம்(Tamil) 16-01-2021
தேவ நீதி
“எப்படியென்றால், அவர்கள் தேவநீதியை அறியாமல், தங்கள் சுயநீதியை நிலைநிறுத்தத் தேடுகிறபடியால் தேவ நீதிக்குக் கீழ்ப்படியாதிருக்கிறார்கள்.” – ரோமர் 10:3
ஒரு காரியம் மனிதர்களின் பார்வையில் நீதியாக இருக்கலாம். ஆனால் தேவனுடைய நீதி அதற்கு முற்றிலும் வித்தியாசமாயிருக்கும். வேதத்தில் அப்படிப்பட்ட சில சம்பவங்களை இன்றைய தியானத்தில் காண்போம்.
பாபேல் கோபுரம் (ஆதி.11:4): பாபேல் என்ற வானளாவிய கோபுரத்தை கட்ட வேண்டும் என்று ஜனங்கள் நினைத்தார்கள். காரணம், தங்களுக்கு பேர் உண்டாக, சிதறி போகாமல் இருக்க, அழிவு வரும்போது ஒருவரை ஒருவர் காப்பாற்ற இப்படி அவர்கள் தங்களுடைய விருப்பத்தை, ஆசையை நிறைவேற்ற விரும்பினர். தாங்கள் செய்வது முற்றிலும் சரியானதே என எண்ணினர். ஆனால் தேவனுடைய நீதி ஒரே இடத்தில் மனிதர்கள் இருக்கக் கூடாது. பூமியை நிரப்ப வேண்டும் என்பதே! ஆகவே அவர்களின் பாஷையை தாறுமாறாக்கி எல்லாரையும் சிதறப் பண்ணினார்.
உடன்படிக்கை பெட்டி (2 சாமுவேல் 6:7): தாவீது உடன்படிக்கை பெட்டியை யூதாவிலிருந்து எடுத்து வரும் நேரத்தில் மாடு மிரளுகிறது. பெட்டி விழுகிறதே என்று நினைத்து பெட்டியை ஊசா தன் கையை நீட்டி பிடித்தான். இங்கு தான் செய்வது சரியானதே என ஊசா நினைக்கிறார். ஆனால், தேவனுடைய நீதி அதுவல்ல. ஆசாரியர்கள் மட்டும்தான் உடன்படிக்கை பெட்டியை தொட்டு தூக்கி கொண்டு செல்ல வேண்டும் என்பதே! ஆகவே அந்த இடத்திலேயே தேவன் ஊசாவை அடித்தார். அவன் செத்துப்போனான்.
விபசாரத்தில் பிடிபட்ட ஸ்திரீ (யோவான் 8:7): விபசாரத்தில் பிடிபட்டவளை கல்லெறிய வேண்டுமென்று வேதபாரகரும், பரிசேயரும் நினைத்தார்கள். அவர்கள் தங்களுடைய சுயநீதியால் அப்படி செய்ய நினைத்தார்கள். ஆனால், தேவனுடைய நீதியோ, அவர்களுடைய நினைவாக இருக்கவில்லை, விபசாரத்தில் பிடிபட்டவளை மன்னிப்பதே தேவநீதியாக இருந்தது. இவர்கள் தேவனுடைய நீதியை அறியாததால்தான், தங்களுடைய சுயநீதியை நிலைநிறுத்தப் பார்த்து, தேவனுக்கு எதிராக நிற்கிறார்கள்.
இதே போலத்தான், நாமும் பிரச்சனைகள் வரும் நேரத்தில் அவரவர் தாங்கள் செய்வது சரி என்று சாதிக்கப் பார்க்கிறோம். நமக்குத் தெரிந்த அல்லது நம்முடைய அனுபவத்தை வைத்து காரியங்களை நிறைவேற்றப் பார்க்கிறோம். ஆனால், இதிலே தேவனுடைய சிந்தை, அவரது செயல் எப்படியிருக்கும் என நாம் யோசிப்பதில்லை. தேவனுடைய நீதியை நாம் அறியவில்லை. ஆகவே கீழ்ப்படியவும் முடியவில்லை. தேவனுடைய நீதியை வேத வசனத்திலிருந்தே நாம் கற்றுக்கொள்ள முடியும். ஆம், வேதத்தை கருத்தாய் வாசித்து கீழ்ப்படிபவன் வாழ்வில் சுயநீதியல்ல, தேவநீதியே ஓங்கி நிற்கும்.
- S. காந்திராஜன்
ஜெபக்குறிப்பு:
VMM ஊழியத்தோடு இணைந்து செயல்படும் தன்னார்வ ஊழியர்களுக்காக ஜெபியுங்கள்.
இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app:
தமிழில் பெற - +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.vmmorg.template.msmapp
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250