By Village Missionary Movement
Thursday, 20-Jan-2022இன்றைய தியானம்(Tamil) 20-01-2022
மிஞ்சி எண்ண வேண்டாம்
“...தன்னைக்குறித்து எண்ண வேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல் ...தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ணவேண்டும்.” – ரோமர் 12:3
குத்துச்சண்டைப் போட்டியில் புகழ்பெற்ற வீரனாக திகழ்ந்த முகமது அலி 61 உலகளாவின போட்டிகளில் கலந்து கொண்டு 57 முறை வென்ற புகழுக்குரியவர். அவர் தன்னைக் குறித்து “I am the greatest” என்று எப்பொழுதும் பெருமையாகக் கூறிக் கொள்வார். ஒருமுறை அவர் விமானத்தில் பயணம் செய்தபோது சீட்பெல்ட் போடாமல் அமர்ந்திருந்தார். எல்லாரையும் பார்த்து சீட்பெல்ட் போடும்படி விமான பணிப்பெண்கள் கூறிக் கொண்டே வந்தனர். இவரருகே வந்து, சீட்பெல்ட் போடச் சொன்னதற்கு, “நான் சூப்பர் மேன், எனக்கு சீட்பெல்ட் தேவையில்லை” என்று கூறினார். அதற்கு பணிப்பெண், “சூப்பர்மேனுக்கு விமானமும் தேவையில்லை” என்று கூறினார். உடனே பதில் ஒன்றும் கூறாமல் அலி சீட்பெல்ட் போட்டுக் கொண்டார். தன்னைக் குறித்து மிதமிஞ்சிய பெருமை அவரது வாழ்வில் காணப்பட்டது.
வேதத்திலே ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் “இது என் வல்லமையின் பராக்கிரமத்தினால், என் மகிமைப் பிரதாபத்துக்கென்று , நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா!” என்று பெருமையுடன் சொன்னான். “பெருமையுள்ளவனுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்” என்ற வார்த்தையின்படி தேவ கோபம் உடனடியாக வெளிப்பட்டு சிங்காசனத்தை விட்டு தள்ளப்பட்டவனாய் மட்டுமல்ல, மனுஷரிடமிருந்தும் தள்ளப்பட்டு மாட்டைப் போல புல்லை மேய்ந்தும், மிருகத்தைப் போலவும் வாழ்க்கை மாற்றப்பட்டவனாக வாழத் தொடங்கினான். இந்த பரிதாப நிலைக்கு காரணம் என்ன? அவனின் பெருமையே! எப்பொழுது புத்திதெளிந்து, தன்னிலையை உணர்ந்து தன்னைத் தாழ்த்தி தேவனை நோக்கி விண்ணப்பம் பண்ணினானோ அப்போது இழந்ததை மீண்டும் பெற்றுக் கொண்டான்.
நம் வாழ்விலும் நமக்கு வருகிற பாவங்களில் மிக வலிமையானது பெருமையாகும். நமது சிந்தையில் பெருமை குடிகொள்ளும்போது தேவனே நமக்கு எதிர்த்து நிற்கிறவராய் வந்துவிடுகிறார். அநேகர், என்னைத் தவிர இந்த வேலையையோ, ஊழியத்தையோ செய்வதற்கு யாருக்குமே தகுதி இல்லை என்று தன்னைக் குறித்து பெருமையாக எண்ணுவர். ஒரு சிலர் தன்னால் எதுவுமே முடியாது, தேவன் எந்த தாலந்தையுமே தனக்கு தரவில்லை என்று முடங்கிப்போய் கிடப்பர். இரண்டுமே தவறு. நாம் ஒவ்வொருவரும் கர்த்தருக்கென்று எதையாவது செய்ய வேண்டும். ஆகவே பெருமையை நம் வாழ்வில் வரவிடாதபடி காத்து நாம் கர்த்தருக்கென்று மகிமையை கொண்டு வருகிற பாத்திரங்களாக மாற தேவன்தாமே நமக்கு கிருபை செய்வாராக.
- Bro. ஹனீஷ் சாமுவேல்
ஜெபக்குறிப்பு:
வேதாகமக் கல்லூரி மாணவர்கள் தங்க கட்டப்படும் அறைகள் விரைவில் கட்டி முடிக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250