By Village Missionary Movement
Friday, 14-Jan-2022இன்றைய தியானம்(Tamil) 15-01-2022
வச்சகுறி தப்பாது
“...தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.” – ரோமர் 8:28
குஷ்டரோகிகள் மத்தியில் தேவனின் அன்பை எடுத்துச் சொல்ல யார் செல்வார்? என்ற போது ஒரு வாலிபன் கரம் தூக்கி முன் வந்தான். முன் வந்த அவனை அனுப்பினர். ஆனால் யாரும் அந்த வாலிபனை ஏற்றுக்கொள்ளவில்லை. தேவ அன்பையும் புறக்கணித்தனர். 10 ஆண்டுகளுக்கு பின்னும் ஒருவரும் ஏற்றுக் கொள்ளவில்லையே என எண்ணி கப்பல் ஏறி தன் தாயகம் திரும்ப முடிவெடுத்தான். கப்பல் ஏறியபோது மாலுமி அவனைக் கண்டு முகத்திலும், கைகளிலும் குஷ்டரோகம் வந்துள்ளதே என்றார். அவன் கண்ணீருடன் இவர்களும் என்னை புறக்கணித்து விட்டனர். என் ஊரிலும் என்னை யார் ஏற்றுக்கொள்வார்கள் என கண்ணீர்விட்டு அழுதான். இதனைக் கேட்ட ஒருவன் ஓடிச் சென்று ஊரில் உள்ள எல்லோரிடமும் சொன்னான். அவர்கள் திரளாய் திரண்டு கடற்கரைக்கு வந்து உனக்கும் குஷ்டரோகம் வந்துவிட்டதே எனக் கூறினர். அவன் அதை மறந்து ஆண்டவரின் அன்பை எடுத்துக் கூறினான். கிராமமே ஆண்டவரை ஏற்றுக் கொண்டது.
பவுலை கைதியாக எருசலேமிலிருந்து ரோமிற்கு கப்பல் வழியாக அழைத்துச் செல்கின்றனர். புயல்காற்று மழையினால் மெலித்தா தீவில் கரை ஒதுங்குகின்றனர். அப்போது அத்தீவு மக்கள் குளிருக்கு நெருப்புமூட்டி, அன்பு காட்டி ஏற்றுக் கொள்கின்றனர். பவுல் விறகுகளை எடுத்து நெருப்பில் போடும்போது ஒரு விரியன்பாம்பு கையைக் கவ்விக் கொள்கிறது. உடனே அத்தீவார் இவன் மெய்யாகவே ஒருகொலை பாதகன். இவன் கடலில் தப்பினாலும் இவன்பாவம் அவனைத் தொடர்ந்து பிடிக்கிறது என பேசுகின்றனர். பவுல் பூச்சியை உதறிவிட்டு தன் பணியை மீண்டும் செய்கிறார். கொலை செய்யப்பட வேண்டியவன் இன்னும் சிறிது நேரத்தில் இறந்து விடுவான் என சொல்லி பார்க்கின்றனர். ஆனால் பவுல் மரிக்கவில்லை இதனைக் கண்டதும் அத்தீவின் முதலாளி பவுலை அழைப்பித்து மூன்று நாள் தங்க வைத்து தேவனின் அன்பை கேட்கிறான். அத்தீவு மக்கள் தேவனின் அன்பை ருசிக்க தேவ அன்பை எடுத்து சொல்கிறார்.
தேவ பிள்ளைகளே! நீங்களும்கூட, பலர் பலவிதமாய் பேசுவதைக் கேட்டும் உங்கள் வாழ்வில் நடப்பதைக் கண்டும் சோர்ந்துள்ளீர்களோ? சோர்ந்து போகாதிருங்கள். தேவன் எல்லாவற்றையும் நன்மைக்கே செய்கிறார். தேவ நாம மகிமைக்காய் சிலவற்றை அனுமதிக்கிறார். தேவன் உங்கள் வாழ்வில் அனுமதிக்கும் யாவுமே நன்மையானதே என மறவாதீர்கள். நீங்கள் பார்க்கும் சிறு கஷ்டங்கள் அல்லது சோர்வு உண்டாக்கும் காரியங்கள் பெரிய நன்மையை உங்கள் வாழ்வில் கொண்டு வரும் என்பது நிச்சயம். குஷ்டரோகியான வாலிபன், மற்றவர்கள் தன்னைப் புறக்கணித்துத் தள்ளியபோதும் தாழ்வுமனப்பான்மைக்குள் செல்லாமல், தன்னைத் தேடி வந்த கிராமத்து ஜனங்களுக்கு தேவனின் அன்பைக் கூறினான். தன்னை அவதூறாகப் பேசிய மக்களைக்குறித்து பவுல் சற்றும் கவலைப்படாமல், தேவ ராஜ்ஜியத்தைக் கட்டும் தீர்மானத்தில் மிகவுறுதியாயிருந்தார். நம்முடைய குறிக்கோள் எப்படி இருக்கிறது? பின்வாங்குவதிலா? அல்லது முன்னேறுவதிலா? முன்னேறுவதில் என்று சொல்வீர்களானால் நீங்களும் தேவராஜ்ஜியத்தைக் கட்டலாம். ஆமென்.
- Bro. சந்தனப்பாண்டி
ஜெபக்குறிப்பு:
7000 ஊழியர்களை கொண்டு ஒரு லட்சம் கிராமங்களை சந்திக்க எடுக்கும் பிரயாசங்களில் தேவகரம் உடனிருக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250