By Village Missionary Movement
Tuesday, 11-Jan-2022இன்றைய தியானம்(Tamil) 12-01-2022
காக்கும் கரங்கள்
“ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்.” – சங்கீதம் 50:15
இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்தது. மியான்மர் தேசத்தில் வானத்தில் விமானத்தோடு விமானம் மோதிக் கொண்டிருந்தது. அங்கிருந்து விழும் குண்டுகளுக்கு தப்பும்படி ஐராவதி ஆற்றிலே அநேகர் உட்கார்ந்து கடவுளை நோக்கி அழுது கொண்டிருந்தார்கள். அந்தக் கூட்டத்திலிருந்த 9 வயது கிரேஸியும், “இயேசுவே! இயேசுவே” என அழுதுகொண்டு ஜெபித்தாள். இரங்கூனில் வாழ்ந்த கிரேஸியின் குடும்பம் இரங்கூன் அழிந்து விடும் என்று நினைத்து வீடு, அரிசி மில் எல்லாவற்றையும் விட்டுவிட்டு பவுட்டோ கிராமத்தில் குடியேறினர். கிரேஸி சில சாமான்கள் வாங்குவதற்காக பக்கத்து வீட்டு பாட்டியோடு பசுமந்தான் வந்தாள். அரிசி மில்லைப் பார்த்து வர கிரேஸியின் தாத்தா ஆபிரஹாமும், அப்பா ஐசக்கும், தம்பி செல்வராஜீம் இரங்கூன் சென்றிருந்தனர். எதிர்பாராதவிதமாக போர் ஆரம்பித்துவிட்டது. தாத்தா, அப்பா, தம்பியை நினைத்து அழுது கொண்டே ஜெபித்தாள். போர் நிறுத்தப்பட்டதற்கான சங்கு ஊதியது. ஆற்றிலிருந்து எழுந்து ஓடிய கூட்டத்தோடு இவளும் ஓடி, வீடு வந்து சேர்ந்தாள். தாய் ஜெயமணி ஓடி வந்து கிரேஸியை அணைத்துக்கொண்டு தேவனுக்கு நன்றி செலுத்தினாள். சிறிது நேரத்தில் கிரேஸியின் தாத்தா, அப்பா, தம்பி மூவரும் வந்தனர்.
கிரேஸியின் அப்பா, “கடவுள்தான் எங்களைக் காப்பாற்றினார். கடைத்தெருவில் வரும்போது, போர் ஆரம்பித்துவிட்டது. நாங்கள் சிலரோடு மாடிப்படி மீது நின்று கொண்டிருந்தோம். எதிரில் இருக்கிற கடைகள், அங்கிருந்தவர்களை இராணுவ வீரர்கள் மிஷன் துப்பாக்கியால் வரிசையாகச் சுடுகின்றனர். ஒரே அலறல் சத்தம். அப்பொழுதுதான் செல்வராஜ், “இங்க இயேசு இருக்கார். அவர் நம்மைக் காப்பாற்றுவார்” என்று சத்தம் போட்டு சொன்னான். எங்களோடு பயத்தோடு நின்று கொண்டிருந்தவர்கள், நம்பிக்கையோடு அவனைப் பார்த்தார்கள். அடுத்த விநாடி போர் தொடர்ந்திருந்தால், நாங்களும் துப்பாக்கியால் சுடப்பட்டிருப்போம்” என்றார். அனைவரும் முழங்கால்படியிட்டு தேவாதிதேவனுக்கு துதி ஸ்தோத்திரங்களை ஏறெடுத்தனர். ஜெபமே நமக்கு ஜெயத்தைக் கொடுக்கும். கர்த்தரே நம் அடைக்கலம்.
ஆம், பிரியமானவர்களே! ஆபத்திலே அவரே அனுகூலமான துணையுமானவர். ஆபத்தில் மட்டுமல்ல ஒவ்வொரு நிமிடமும் தேவனே நம் அடைக்கலம். அவரை அடைக்கலமாக கொண்டிருக்கிற ஜனம் பாக்கியமுள்ளது. ஆகவே சூழ்நிலைகளைக் கண்டு கலங்காமல் கர்த்தரை நம்பி திடமனதாயிருங்கள்.
- Mrs. வனஜா பால்ராஜ்
ஜெபக்குறிப்பு:
மீடியா ஊழியங்களுக்கு மாதந்தோறும் கட்ட வேண்டிய பணம் கட்டப்பட, நிகழ்ச்சிகள் தடையின்றி ஒளிபரப்பப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250