By Village Missionary Movement
Tuesday, 11-Jan-2022இன்றைய தியானம்(Tamil) 11-01-2022
நேர்த்தியாகச் செய்கிறவர்
“அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்;…” -பிரசங்கி 3:11
வழிப்போக்கன் ஒருவன் வயல் வழியே நடந்து வந்தான். அப்போது பூசணிக்காய் தோட்டத்தில் பெரிய பெரிய பூசணிக்காய்கள் காய்த்து தரையில் கொடி படர்ந்திருந்தது. அதைப் பார்த்த வழிப்போக்கன் என்ன கடவுளுடைய சிருஷ்டிப்பு, நிமிர்ந்து நிற்க முடியாத செடியில் இவ்வளவு பெரிய பூசணிக்காய்களை உருவாக்கியிருக்கிறார் என சலித்துக்கொண்டான். இதைச் சிந்தித்தவாறே நடந்து வந்தவன், வெயில் அதிகமாயிருந்ததால் களைப்பின் மிகுதியினால் சாலையோரத்திலிருந்த ஒரு ஆலமரத்தின் நிழலில் படுத்தான். படுத்தவன் அயர்ந்த நித்திரை செய்தான். சிறிது நேரத்தில் ஆலமரத்தின் சிறிய பழம் ஒன்று அவன் தலையில் விழுந்தது. பூசணிக்காய்தான் விழுந்து விட்டது என்று அலறி அடித்து கொண்டு எழுந்து பார்த்தபோது, ஒரு குட்டி ஆலம்பழம் ஒன்று உருண்டு கிடந்தது. “கடவுளே! அந்தப் பெரிய பழத்தை ஆலமரத்தில் படைத்திருப்பீரானால் என் தலை தப்பியிருக்காது. ஞானமான உம் செயலுக்கு நன்றி” என்றான்.
பரிசுத்த வேதாகமத்தில் விசுவாச தகப்பனாகிய ஆபிரகாம் தன் குமாரனாகிய ஈசாக்குக்கு பெண் பார்ப்பதற்காக தன் ஊழியக்காரனை அழைத்து, சில காரியங்களை கற்றுக்கொடுத்து வழி அனுப்பி வைக்கிறார். அந்த ஊழியக்காரனும் தன் எஜமானாகிய ஆபிரகாம் கற்றுக் கொடுத்தபடியே, ஈசாக்கிற்கு பெண் பார்க்க செல்கிறார். இது ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, ஈசாக்கு அதே நேரத்தில் தேவனைக் குறித்ததான காரியங்களைத் தியானம் பண்ணுவதற்காக வயல்வெளிகளில் செல்கிறார். இப்படி எலியேசர் ஒரு பக்கமும் ஈசாக்கு ஒரு பக்கமும் தேவ காரியங்களில் தங்கள் மனதை ஈடுபடுத்திக் கொண்டனர். தேவன் காரியங்களை எப்படிச் செய்கிறார் பாருங்கள். ஆபிரகாம் அந்த ஊழியக்காரனுக்கு கற்றுக் கொடுத்தபடியே பெண்ணைத் தன்னுடன் அழைத்துச் செல்லும் நேரத்தில், அந்த ஊழியக்காரர் சொல்கிறார், “என்னை நேர்வழியாய் நடத்தி வந்த தேவனாயிருக்கிற கர்த்தரை ஸ்தோத்திரித்தேன்” என்று.
இதை வாசிக்கின்றதான பிரியமானவர்களே! நம்முடைய ஆண்டவர் எல்லாவற்றையும் நேர்த்தியாகவும், நேர்வழியாகவும் செய்கின்றவர். நம்முடைய சரீரத்தில் எல்லா உறுப்புகளையும் நேர்த்தியாய் உண்டாக்கி இருக்கிறார். நம்முடைய குடும்ப வாழ்வாக இருக்கலாம், நம்முடைய பிள்ளைகளின் படிப்பு, எதிர்காலம், திருமணம், தொழில் என எல்லாவற்றையும் கொடுத்திருக்கின்ற ஆண்டவர்தாமே எல்லாவற்றையும் நேர்த்தியாய் நிறைவேற்றி முடிப்பதற்கும் வல்லமையுள்ளவராயிருக்கிறார். இந்த புதிய ஆண்டிற்குள் பிரவேசித்திருக்கிற நாம் ஒவ்வொரு நாளும், நேர்த்தியாக எங்களை வழிநடத்தி செல்லும் ஆண்டவரே! என ஜெபித்து அவருக்கு நன்றிகளை செலுத்துவோம்!
- Mrs. சக்தி சங்கர்ராஜ்
ஜெபக்குறிப்பு:
மீடியா ஊழியங்களுக்கு அனுபவமுள்ள அர்ப்பணிக்கப்பட்ட ஊழியர்கள் கிடைக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250