By Village Missionary Movement
Friday, 07-Jan-2022இன்றைய தியானம்(Tamil) 07-01-2022
பரிசுத்தம்
“...நான் உங்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர்.” – லேவி. 20:8
19-ம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தில் இரண்டு பேரை கொலை செய்த குற்றத்திற்காக சுப்பிரமணி என்பவர் கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டார். இதனை விசாரித்த நீதிபதி இவருக்கு தூக்குத்தண்டனையை கட்டளையிட்டார். அந்நாட்களில், பிரிக்கன்ரிட்ஜ் என்பவர் இலங்கையில் சிறைச்சாலைக் கைதிகள் மத்தியில் ஊழியம் செய்து வந்தார். பிரிக்கன்ரிட்ஜ் அறிவித்த நற்செய்தியின் மூலமாக சுப்பிரமணி இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, என்னை நேசிப்பதற்கு இயேசு ஒருவர் இருக்கிறார் என்கிற நம்பிக்கையுடன் வேத புத்தகத்தை வாசிக்க தொடங்கினார். இயேசு கிறிஸ்து என் பாவத்தை எல்லாம் மன்னித்துவிட்டார் என்ற பாவமன்னிப்பின் நிச்சயத்தையும் உண்மையான சமாதானத்தையும் அனுபவித்தவராய் தான் ருசித்த தேவ அன்பையும் மற்றவர்களுக்கும் சாட்சியாக பகிர்ந்துகொண்டார். இவர் இயேசுகிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு மரணபயம் இல்லாதவராய் தூக்குத்தண்டனையை தைரியமாய் எதிர்கொண்டார். அவர் மரிப்பதற்கு முன் இயேசு நேசிக்கிறார் என்கிற கீர்த்தனை பாடலை எழுதினார். இந்த பாடல் சபைகளில் இன்றும் பாடப்பட்டு ஆண்டவருடைய நாமம் மகிமைப்பட்டு வருகிறது.
பரிசுத்த வேதாகமத்தில் அப்போஸ்தலனாகிய பவுலும், சீலாவும் நற்செய்தி அறிவித்தார்கள் என்பதற்காக சிறையில் அடைக்கப்பட்டார்கள். இவர்கள் சிறையில் ஜெபித்தபோது தேவன் இவர்களுடைய கட்டுகள் எல்லாவற்றையும் நீங்கச் செய்தார். அப்போது சிறைச்சாலைக்காரன் நித்திரை தெளிந்து, சிறையில் அடைக்கப்பட்டவர்கள் ஓடிப்போனார்களென்று எண்ணி, தற்கொலை செய்து கொள்ளப்போனான். இந்நிலையில் பவுல், அவனைத் தடுத்து சிறைச்சாலைக்காரனுக்கு நற்செய்தி அறிவித்தார். அதன்மூலமாக அவன் மனந்திரும்பி, இயேசுவை ஏற்றுக்கொண்டு, தன் வீட்டார் அனைவரும் இரட்சிக்கப்பட ஏதுவான காரியத்தை செய்தார்.
இதை வாசிக்கின்றதான பிரியமானவர்களே! நீங்கள் எவ்வளவு பெரிய பாவங்களை செய்திருந்தாலும் சரி அல்லது எவ்வளவு பெரிய குற்றவாளியாக இருந்தாலும் சரி, இயேசுவே என் பாவங்களை மன்னித்து, என்னை பரிசுத்தப்படுத்தும் என கேட்கும்போது இயேசு நம்முடைய எல்லா பாவங்களையும் மன்னித்து நம்மை பரிசுத்தப்படுத்துகிற தேவனாயிருக்கிறார். நம்முடைய பாவங்களுக்காக சிலுவையில் அடிக்கப்பட்டார். ஏனென்றால் அவருடைய பரிசுத்த இரத்தத்தினால் பாவங்களை கழுவிப் பரிசுத்தப்படுத்தி நம்மை ஒரு புது மனிதனாய் மாற்றுகிறவர் இயேசு கிறிஸ்து மட்டுமே. நீங்கள் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு பாவங்கள் கழுவப்பட்டு மரணத்துக்கு பயப்படாத புதிய வாழ்க்கையைத் தொடங்குங்கள்.
- P.V. வில்லியம்ஸ்
ஜெபக்குறிப்பு:
“மோட்சப் பயணம்” இதழின் எடிட்டர் மற்றும் உடன் ஊழியர்களை தேவன் விசேஷித்த ஞானத்தினால் நிரப்ப ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250