By Village Missionary Movement
Monday, 03-Jan-2022இன்றைய தியானம்(Tamil) 03-01-2022
கர்த்தருக்குப் பரிசுத்தம்
“அந்நாளிலே குதிரைகளின் மணிகளிலே கர்த்தருக்குப் பரிசுத்தம் என்னும் விலாசம் எழுதியிருக்கும்;…” – சகரியா 14:20
நம் கர்த்தர் பரிசுத்தர்! அவர் வாசம் பண்ணுகிற இடம் பரிசுத்த ஸ்தலம். அவர் எல்லைகள் எங்கும் பரிசுத்தத்தினால் நிரம்பியிருக்கும். நம் கர்த்தர் கிரியை செய்ய வேண்டுமானால் பரிசுத்தமே அவருடைய எதிர்பார்ப்பின் பிரதான பங்காயிருக்கிறது. “கர்த்தர் சிநேகிக்கிற பரிசுத்தம்” என வேதாகமம் அவருடைய தன்மையை போற்றி எழுதுகிறது. பரிசுத்தம் இன்னதென்று நீங்கள் அறிய விரும்பினால், கூடவே நம் தேவனையும் அறிந்து கொள்ள முடியும். பரிசுத்தம் எங்கே இருக்கிறதோ, அங்கே கர்த்தர் இருக்கிறார். கர்த்தர் எங்கே உள்ளாரோ அங்கே பரிசுத்தமும் இருக்கும். நம் தேவனையும் பரிசுத்தத்தையும் பிரித்துப் பார்க்கவே முடியாது. பரிசுத்தம் என்கின்ற வார்த்தை வேதாகமத்தில் 587 முறை வெவ்வேறு இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மிக பிரபலமான வயலின் மேதை இட்ஷாக் பேல்மென் என்பவரை புகழ்ந்து எழுத ஒரு சங்கீத விமர்சகர் வார்த்தைகளின்றி தவித்தாராம். “வயலினை இசைக்கப் பயன்படும் நீள் கருவியைக் கொண்டு மேலும், கீழுமாக இழுத்து வாசிக்கும் இசை எவ்வளவு இனிமையாக இருக்கிறது. அவரது இசை பேசுவது போலும் என் கவலைகளுக்கு பதிலளிப்பது போலும் இருக்கிறது” என பேல்மெனைப் பற்றி புகழுரை நீண்டுகொண்டே போகிறது. நம் தேவனை யாராவது ஒருவர் இப்படியாக புகழ்ந்து கவிபாடுகிறார்களா எனத் தேடுகிறேன் என்றார் ஒரு ஊழியர். பரி. வேதாகமத்தில் நம் தேவனுடைய பரிசுத்தமான அலங்காரங்களைப் பற்றி அநேக இடங்களில் போற்றி எழுதியிருப்பதை வாசிக்க முடியும். தேவனுக்கு தூரமாய் இருக்கும்பொழுது அநேகர் தங்களது அருமை, பெருமைகளையும் புகழ்ந்து பேசுவது உண்டு. ஆனால் தேவனண்டையில் கிட்டி சேர்ந்து அவரைப் பார்க்கும்பொழுது, தங்களது கைகளினாலே வாயைப் பொத்திக் கொண்டவர்கள் உண்டு. ஐயோ! நான் அதமானேன் என தேவனைப் பார்த்து அலறிய தீர்க்கதரிசிகளும் இருக்கிறார்கள். தேவ தூதர்களும் அவருடைய பரிசுத்தத்தைப் போற்றிப் பாடும்போது தங்கள் கால்களையும் முகத்தையும் மூடிக்கொண்டு பயபக்தியுடன் பரிசுத்தத்தில் மகத்துவமுள்ள தேவனைப் பாடி மகிமைப்படுத்தினார்கள்.
பரிசுத்தர்கள் கூட்டம் நடுவில் ஜொலித்திடும் சுத்த ஜோதியாம் நம் இயேசுவை சீக்கிரத்தில் தரிசிக்க இருக்கின்றோம். அங்கே நாம் அவருடைய பரிசுத்தத்தின் நினைவு கூருதலை கொண்டாடப் போகின்றோம். நான் உங்களை பரிசுத்தமாக்குகிற கர்த்தர் என்று நம்முடனே திருவுளம் பற்றினவர் நம்மை பரிசுத்தத்தில் வழிநடத்துவார். தேவனுடைய பரிசுத்தமான நாமத்துக்கு மகிமையும் கனமும் உண்டாவதாக! ஆமென்!
- P. ஜேக்கப் சங்கர்
ஜெபக்குறிப்பு:
பரிசுத்தத்தில் வளரும் ஆண்டான இவ்வாண்டு ஊழியர்கள் மற்றும் ஊழியத்தில் இணைந்துள்ள ஒவ்வொருவரும் பரிசுத்தத்தில் வளர ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250