By Village Missionary Movement
Friday, 24-Dec-2021இன்றைய தியானம்(Tamil) 24-12-2021
வழிகாட்டும் விடிவெள்ளி
“அவர்கள் அந்த நட்சத்திரத்தைக் கண்டபோது, மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள்.” – மத்தேயு 2:10
இரண்டாம் உலகப்போர் முடிந்தபின்பு அமெரிக்கா தேசத்தில் ஒரு தகப்பனாரும் அவருடைய குட்டிப்பையனும் தெரு ஒன்றில் சாயங்கால வேளையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அவருடைய மகன் சுற்றியுள்ள எல்லா வீடுகளையும் பார்த்து, “அப்பா அப்பா இங்குள்ள எல்லாருடைய வீடுகளிலும் நட்சத்திரம் பொறிக்கப்பட்டிருக்கிறதே ஏன்?” என்று கேட்டான். அதற்கு அவனுடைய தகப்பனார், “இந்த வீட்டில் உள்ளவர்களில் யாராவது ஒருவர் உலகப்போரில் கலந்து கொண்டிருப்பார்கள். எனவே அமெரிக்க அரசு இவர்களை கெளரவப்படுத்தும் விதமாக இந்த நட்சத்திரத்தை இவர்கள் வீடுகளில் பொறித்துள்ளது” என்றார். இன்னும் சில வீடுகளில் நட்சத்திரம் தங்க நிறத்தில் பொறிக்கப்பட்டிருந்தது அதன் காரணத்தையும் அவன் தன் அப்பாவிடம் கேட்டான். அதற்கு அவர் இவர்கள் போரில் தங்கள் உயிரைத் தேசத்திற்காக கொடுத்தவர்கள் இதனால் அரசு இவர்கள் வீடுகளில் தங்க நிறத்தில் நட்சத்திரத்தைப் பொறித்து அவர்களை கெளரவப்படுத்தியுள்ளது என்றார். இன்னும் பொழுது இருட்டிக் கொண்டு வந்தது. கொஞ்ச தூரம் சென்றபொழுது அவர்கள் வீடுகள் ஏதும் இல்லாத காலியான இடத்தில் நடந்து வந்தார்கள். அவன் வானத்தைப் பார்த்தபோது ஒரு நட்சத்திரம் மின்னிக் கொண்டிருந்தது. “அப்பா வானத்திலும் நட்சத்திரம் இருக்கிறதே” என்றான். அவர் தேவன் தம்முடைய ஒரே மகனாகிய இயேசு கிறிஸ்துவை, இந்த பூமியில் பாவத்தில் வாழும் மனிதர்களை மீட்பதற்காக அனுப்பி இவ்வளவாய் நேசித்தார்” என்றார்.
நம்முடைய வேதமும் ஒரு நட்சத்திரத்தை நமக்கு கூறுகிறது. அது சாஸ்திரிகளுக்கு வழிகாட்டிய நட்சத்திரமே. அது அவர்களை ஒரே நேர்கோட்டில் சரியாக கூட்டிச்சென்றது. அவர்களின் பயணங்கள் இரவு நேரங்களில்தான் செல்ல வேண்டியிருக்கும். ஆனாலும் அவர்கள் சலிக்காமல் குளிர் எனப் பாராமல் எந்தக் கால சூழ்நிலையிலும் பிரயாணப்பட்டு இயேசுவைக் கண்டு தங்களையும் தங்கள் பொக்கிஷங்களையும் அர்ப்பணித்தார்கள்.
பிரியமானவர்களே! மேற்கண்ட சம்பவத்திலிருந்து தேவன் நமக்குக் கற்றுக் கொடுக்கும் எளிதான சத்தியம் என்னவென்றால், எல்லா மனிதர்களுக்கும் இருண்ட இக்கட்டான சூழ்நிலை நிச்சயம் வரும். சாஸ்திரிகள் வானத்தைப் பார்த்தபோது அவர்களை நட்சத்திரம் தெளிவாய் நடத்தினதுபோல, பரத்தை நோக்கிப் பார்க்கும் நமக்கும் தேவன் நல்ல வழிகாட்டியாய் இருந்து சேர வேண்டிய பரலோகத்திற்கு நிச்சயமாய் நம்மைக் கொண்டுபோய்ச் சேர்ப்பார். மேலே நாம் கண்ட அந்தப் போர் வீரர்கள் அந்த நாட்டுச் சட்டங்களைப் பின்பற்றும்போது அந்த நாடு சிறந்த அங்கீகாரத்தை அளிக்குமானால் நாம் நம் தேவனுடைய கட்டளைகளைப் பின்பற்றுகிறபோது அதைக் காட்டிலும் நித்திய மகிமையைத் தர அவர் வல்லமையுள்ளவராக இருக்கிறார். ஆமென்.
- S. மனோஜ்குமார்
ஜெபக்குறிப்பு:
கிறிஸ்துமஸ் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும் நாட்களில் நல்ல கால சூழ்நிலை இருக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250