By Village Missionary Movement
Thursday, 23-Dec-2021இன்றைய தியானம்(Tamil) 23-12-2021
மனதார வாழ்த்துக்களுடன்
“உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக...” – லூக்கா 2:14
உலகின் பல நாடுகளிலும் கிறிஸ்துமஸ் நிகழ்வுகள் பல விதங்களில் கொண்டாடப்பட்டு வருகின்றன. உக்ரைன் நாட்டு கிறிஸ்தவ மக்கள் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகளை இன்னும் சற்று வித்தியாசமாக ஆசரிப்பது உண்டு. இவர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் வித்தியாசமான நிகழ்ச்சிகள் இருப்பதுண்டு. பெத்லகேம் மாட்டுத் தொழுவத்தை ஞாபகப்படுத்தும் வண்ணம் வைக்கோல் கட்டுகளை சாப்பாட்டு மேஜையின் மேல் வைப்பார்கள். அவர்கள் கொண்டாட்டத்தில் கிறிஸ்துமஸ் ஜெபம் ஏறெடுக்கப்பட்ட பின் குடும்பத்தின் தலைவனாகிய தகப்பன் கிறிஸ்து பிறந்தார் என்று வாழ்த்துக்களை கூறுவார். குடும்பத்தினர் அதற்கு மறுமொழியாக “நாம் அவரை மகிமைப்படுத்துவோமாக” என்று கூறுவார்கள். இப்படியாக கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை குடும்பமாக ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்வார்கள்.
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் என்பது ஏதோ பிறருக்கு மட்டும் என்று எடுத்துக்கொள்ளக் கூடாது. கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் நமது வீடுகளில் உள்ளவர்களுக்குள்ளும் பரிமாறிக் கொள்ள வேண்டும். “மனுஷர் மேல் பிரியம்” என்ற வாழ்த்துக்களில் நமது குடும்பத்தினரும் உள்ளனர். இப்படி நாம் ஒருவரை ஒருவர் கிறிஸ்துவை முன்னிட்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்ளும்போது குடும்பத்தில் இணக்கமும் சந்தோஷமும் உண்டாகிறது. பிரிந்துபோன குடும்பங்கள், பிரிந்து போன உறவுகள் இவற்றை சரிசெய்து கொள்ள இக்கிறிஸ்துமஸ் காலங்கள் நமக்கு உதவியாக உள்ளன. கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் சொல்லக்கூடாது என்று சிலர் வாதிடுவார்கள். அது அவர்களுக்கு அப்படியே இருக்கட்டும். ஆனால் நாம் நம்முடையவர்களிடம் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்வோம்.
தேவகுமாரனும் இரட்சகருமாகிய இயேசுவை பூமியில் அறிமுகப்படுத்தும்பொழுது தேவதூதர்கள் நற்செய்தியோடு வாழ்த்துக்களையும் சேர்த்தே கூறினார்கள். பாவம் நிறைந்த மனிதனுக்கு நிவாரணமாக வரும் இயேசுவை அறிவிப்பது நற்செய்தி மட்டுமல்ல, விடுதலை தரும் வாழ்த்துச் செய்தியாகவும் இருக்கிறது. ஆகவே நாமும் நம் குடும்பத்தில் கிறிஸ்துவின் பிறப்பை ஒருவருக்கு ஒருவர் சொல்லி வாழ்த்துக்களைப் பரிமாறுங்கள்.
- P. ஜேக்கப் சங்கர்
ஜெபக்குறிப்பு:
கெத்செமனே வளாகத்தில் துவக்கியுள்ள மருத்துவ சேவை பணிகளின் மூலம் அநேகர் ஆத்துமாவிலும், சரீரத்திலும் சுகம் பெற ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250