By Village Missionary Movement
Saturday, 18-Dec-2021இன்றைய தியானம்(Tamil) 18-12-2021
பிதாவின் அன்பு
“கிறிஸ்து...நம்மில் அன்புகூர்ந்தது போல, நீங்களும் அன்பிலே நடந்து கொள்ளுங்கள்.” – எபேசியர் 5:2
கடற்கரையை நோக்கி ஒரு கப்பல் வந்து கொண்டிருந்தது. அது உலகமெங்கும் நற்செய்தியை சுமந்து செல்லும் “லோகோஸ்” என்ற கப்பல். OM (Operation Mobilisation) என்ற ஊழிய ஸ்தாபனத்திற்குச் சொந்தமானது. அதன் கம்பத்தில் கெம்பீரமாக பறந்து கொண்டிருந்த கொடியிலே இவ்வாறு பொறிக்கப்பட்டிருந்தது. “தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ, அவன் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரை தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்” (யோவான் 3:16) ஆம்! பிதாவின் அன்பை இவ்வசனம் எவ்வளவு அழகாக எடுத்துரைக்கிறது.
தேவன் அழகாக இந்த உலகத்தைப் படைத்தார். அதிலே எல்லோரும் சந்தோஷமாக வாழ வேண்டுமென்று விரும்பினார். பசுமையான ஏதேன் தோட்டத்தை உருவாக்கி அதில் ஆதாம், ஏவாள் தம்பதியினரை வைத்தார். கீழ்ப்படியாமை என்ற பாவம் அவர்களது மகிழ்ச்சியை கெடுத்து விட்டது. மனிதன் பாவப்படுகுழியில் சிக்கிக் கொண்டான். இப்படிப்பட்ட மனுக்குலத்திற்கு பாவத்திலிருந்தும் மரணபயத்திலிருந்தும் விடுதலை கொடுக்கவே கிறிஸ்து உலகத்தில் வந்தார். ஆம்! தேவன் தம்முடைய சொந்த குமாரனை நமக்காய் கொடுத்ததின் மூலம் பாவிகளாகிய நம் மேல் அவர் வைத்திருந்த அன்பை வெளிப்படுத்தினார்.
கிறிஸ்துமஸ்- பிதாவின் அன்பின் வெளிப்பாடு! இயேசுவை தந்தருளி இவ்வளவாய் அன்புகூர்ந்தார் என்பதிலிருந்து பிதாவின் எல்லையில்லா அன்பை பார்க்கிறோம். நாம் நல்லவர்கள் என்பதினால் அல்ல, நாம் பாவிகளாய் இருக்கையில் நம்மேல் அன்புகூர்ந்து தம் குமாரனை இவ்வுலகிற்கு தந்தார். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து சிலுவையில் தன் இரண்டு கரங்களையும் விரித்து நம் மேல் வைத்த அன்பின் அளவை வெளிப்படுத்தினார்.
பிரியமானவர்களே! “அன்பு” இதுவே வேதத்தின் மையக்கரு. கிறிஸ்தவ வாழ்வின் மையமும் இதுவே. தேவன் நம்மிடம் அன்புகூர்ந்தது போல நாமும் ஒருவரில் ஒருவர் அன்புகூர கடனாளிகளாயிருக்கிறோம். இதுவே பிரதான கட்டளையாயிருக்கிறது. ஆகவே இந்த கிறிஸ்துமஸ் நாட்களில் யார் மீதெல்லாம் கசப்பும், பகைமையும் உள்ளதோ அவர்களுடன் நல்மனம் பொருந்த பிரயாசப்படுவோம். ஒரு சிறிய புன்முறுவல், வாழ்த்து அட்டை அனுப்புதல், வாழ்த்து செய்தியை பகிர்தல் இவையெல்லாம் மீண்டும் உறவுகள் இணைய பாலமாக அமையும். இந்த கிறிஸ்துமஸ் காலம் அதற்கு ஏற்ற காலம். ஆகவே பிறரில் அன்புகூருவோம். தீமைசெய்தோருக்கும் நன்மை செய்வோம். கிறிஸ்துவின் பிரமாணத்தை நிறைவேற்றுவோம்.
- Bro. டேவிட் தவமணி
ஜெபக்குறிப்பு:
மோட்சப்பயணம் இதழுக்கு எழுதிக் கொடுக்கும் நபர்களை தேவன் விசேஷித்த ஆவியினால் நிரப்ப ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250