By Village Missionary Movement
Thursday, 09-Dec-2021இன்றைய தியானம்(Tamil) 09-12-2021
மறையாது தழும்புகள்
“பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார்...” – 1தீமோ. 1:15
படாரென்று கதவு அடிக்கக்கூடிய சத்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்தெழுந்தார் தகப்பன். பாபு கோபத்தில் செய்த செயல்தான் என நிதானித்துக்கொண்டார். பலவருடங்களாக வீட்டில் நடந்துவரும் இப்போராட்டத்தில் தன் வாலிப மகனின் மனந்திரும்புதல் மாத்திரமே தன்னுடைய குடும்பத்திற்கு சமாதானத்தை தரமுடியும் என்று உணர்ந்தவராய் அவனிடம் பேசத்தொடங்கினார். அவன் கோபப்படுவதினால் அவன் வாழ்விலும், மற்றவர்கள் வாழ்விலும் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும் கூறினார். “என்னால் என் கோபத்தை அடக்கமுடியவில்லை” என்று கூறிய மகனிடம் ஒரு சிறு ஆலோசனை கூறினார். “கோபம் வரும்போது வீட்டுச் சுவரில் ஆணியை அடி” என்றார். காலையில் வீட்டுச்சுவரில் ஆணி அடிக்கக்கூடிய சத்தம் கேட்டு எழுந்தவர் ஒன்றும் பேசாமல் நகன்றுவிட்டார். நாட்களும் கடந்தன. ஒவ்வொருநாளும் ஆணிகள் அடிக்கக்கூடிய சத்தம் கேட்டு எழுந்தவர் காதுகளில், இன்றோ மிகப்பெரிய அமைதி. தனால் ஏற்பட்ட மனநிறைவுடன் எழுந்தவர் காதுகளில், இன்றோ மிகப்பெரிய அமைதி. அதனால் ஏற்பட்ட மன நிறைவுடன் எழுந்தவர் பாபுவிடம் சென்றார்.
“அப்பா! நீங்க சொன்னபடி செய்தேன். முதல்நாள் 50 ஆணிகள் வரை அடித்தேன். படிப்படியாகக் குறைந்து நேற்று ஒரு ஆணிதான் அடித்தேன். இன்னிக்கு எதுவுமே அடிக்கலப்பா” என்றவனிடம், “ரொம்ப சந்தோஷம்பா, இப்பொழுது அந்த ஆணிகளை ஒவ்வொன்றாக குரடை வைத்து பிடுங்கு” என்று கூறினார். அவன் ஆணியை பிடுங்கினாலும் ஆணி அடிக்கப்பட்ட தடத்தை சுவரிலிருந்து அவனால் மாற்றமுடியவில்லை. அவன் மனம் திரும்பியபோதும் தடங்கள் மறையவில்லையே! நம் வாழ்வில் செய்கின்ற தவறுகள் எத்தனை பாதிப்புகளை நம் வாழ்வில் ஏற்படுத்த முடியும்.
“பாவிகளை இரட்சிக்கவே கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார்” என்பதினால் நாம் என்ன தவறு செய்தாலும் நம் பாவத்தை மன்னிக்க இயேசு கிறிஸ்து தயவு பெருத்தவர் என்றும், தவறு செய்துவிட்டு மன்னிப்பு கேட்டுவிடலாம் என்று எண்ணியும், மாம்ச சிந்தனைகளுக்கும், இச்சைகளுக்கும் இடம் கொடுத்து துணிகரமாக பாவம் செய்கிறோம். பாவியை நேசிக்கும் இயேசு பாவத்தை வெறுக்கிறார் என்பதை அநேகர் மறந்து விடுகின்றனர். ஒரு பாவி உண்மையாய் மனந்திரும்பும்போது அவனை மன்னித்து ஏற்றுக்கொள்பவர் இவன் மீண்டும் மீண்டும் அதே தவறை செய்யும்போது வேதனையும் வருத்தமும் அடைந்தவராக காணப்படுவதை எண்ணிப்பார்க்க வேண்டும். ஆகையால் இயேசுகிறிஸ்துவின் அன்பையும், கிருபையையும் நாம் அலட்சியப்படுத்தாமல் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் உண்டான பாவமன்னிப்பையும், மீண்டும் பாவம் நம்மை மேற்கொள்ளாதபடி வேண்டிய கிருபையையும் அவரிடம் கேட்டுப் பெற்றவர்களாய் கறையற்ற பரிசுத்தமான வாழ்வு வாழ நம்மை அர்ப்பணிப்போம்.
- Mrs. வசந்தி ராஜமோகன்
ஜெபக்குறிப்பு:
வேதாகமக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் தேவனுடைய கரத்தில் கடைசிக் கால எழுப்புதலின் கருவிகளாய் பயன்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250