By Village Missionary Movement
Tuesday, 07-Dec-2021இன்றைய தியானம்(Tamil) 07-12-2021
சுயநலக்கிறிஸ்தவன்
“...பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்.” – 1யோவான் 3:8
பழங்குடி கிராமம் ஒன்றில் திடீரென்று புதிய வியாதி ஒன்று மக்களை தாக்கியதால் அநேகர் பாதிக்கப்பட்டனர். சுற்றுப்பகுதிகளில் எங்கும் மருத்துவமனையும் உதவி செய்ய வைத்தியருமில்லாமல் அநேகர் மரித்துக் கொண்டிருந்தனர். இந்த அவல நிலையைக் கேள்விப்பட்ட மருத்துவர் ஒருவர் அதற்கான மருந்தை கொண்டு வந்து சில நாட்கள் மட்டும் அங்கு தங்கி இருந்து சிகிச்சை அளித்து திரும்ப முன்வந்தார். மருத்துவர் கிராமத்தின் எல்லையை அடைந்ததும், மேளதாளத்தோடு டாக்டர் வந்து விட்டார் என்று சந்தோஷத்தோடு வரவேற்ற மக்கள் அதையே கொண்டாட்டமாக இரண்டு மூன்று நாட்கள் விருந்து வைத்து மருத்துவரை தூக்கி வைத்து கொண்டாடினார்கள். அவர் மருந்து கொடுக்கத்தான் வந்தேன் என்று சொன்னாலும் நீங்கள் வந்துவிட்டீர்களே என்று அவருடைய வருகையைக் கொண்டாடிக் கொண்டே இருந்தார்கள். அவர் திரும்பி செல்லும் நாளும் வந்தது. அவர் துக்கத்துடனே, “நான் உங்களிடம் வந்தது உங்கள் நோயை தீர்க்க, ஆனால் நான் வந்ததையே நீங்கள் கொண்டாடி நான் வந்த நோக்கத்தை வீணடித்துவிட்டீர்கள். நான் திரும்பி போகத்தான் வேண்டும்” என்று மிகுந்த மனவருத்தத்துடன் திரும்பி சென்றார். எத்தனை பரிதாபம்!
“பிசாசின் கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்.” அந்த பிசாசின் கிரியை இன்றும் ஒவ்வொரு மனிதர்களிடத்திலும் வெளிப்படுகின்றன. கோபம், பொறாமை, எரிச்சல், விரோதம், கசப்பு, பொருளாசை, பெருமை, பழிக்குப்பழி போன்ற துர்குணங்கள் எல்லாம் ஒரு மனிதனுக்குள் பிசாசின் செயல்பாடுகள் நடந்து கொண்டிருப்பதை உறுதிப்படுத்துகின்றன. சமுதாயத்தில் நிலவும் அனைத்து தீய காரியங்களுக்கும் காரணம், தனி மனிதனின் இருதயம் பிசாசின் ஆளுகைக்கு ஒப்புக்கொடுப்பதினால் மட்டுமே நடைபெறுகிறது. மனிதனுக்குள் நடைபெறும் இப்படிப்பட்ட பிசாசின் கிரியைகளை அழிக்க இருதயத்திற்குள் ஒரு இரட்சகர் வரவேண்டிய தேவையுள்ளது. அதற்காகவே கிறிஸ்து இயேசு உலகத்திற்கு வந்தார்.
மருத்துவரை வரவேற்பதிலேயே முழு கவனம் செலுத்தி, சிகிச்சை பெறாமல் போன மக்களை போல நாம் இராமல், முதலாவது ஆண்டவரை நமக்குள் செயல்பட அனுமதிக்க வேண்டும். அவ்வாறின்றி, நாம் செய்கின்ற அத்தனை வழிபாடுகளும், ஆராதனைகளும் பண்டிகை கொண்டாட்டங்களும் அர்த்தமற்றவைகளே. அவைகள் தேவனை பிரியப்படுத்தாமல் கோபப்படுத்தவே செய்யும். அவர் நமக்காக ஆயத்தமாக்கிய பாவமன்னிப்பையும், இரட்சிப்பையும், பரிசுத்த வாழ்வையும் நாம் விரும்பிப் பெற்றிருந்தால் அவர் நம்மையும் நம்முடைய ஆராதனைகளையும் கண்டு மகிழுவார். நாம் பாவத்தைக் குறித்து கவலைப்படாமல் கிறிஸ்து பிறந்து விட்டார் என்று பண்டிகை கொண்டாடிக் கொண்டிருந்தால் அவர் நம்மைப் பார்த்து கண்ணீர் விடத்தான் முடியும். கிறிஸ்து உலகிற்கு வந்ததன் நோக்கத்தை உணர்ந்து பண்டிகையை கொண்டாடி மகிழ்வோம்.
- Bro. ஹனிஷ் சாமுவேல்
ஜெபக்குறிப்பு:
மீடியா மூலம் நடைபெறும் ஊழியங்களுக்காக, அதற்கான பொருளாதாரத் தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250