By Village Missionary Movement
Monday, 06-Dec-2021இன்றைய தியானம்(Tamil) 06-12-2021
சத்திரக்காரனின் சத்தம்
“...சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையை... முன்னணையிலே கிடத்தினாள்.” – லூக்கா 2:7
Hello நண்பர்களே! ரொம்ப நாளாக நான் உங்களோடு பேச ஆசைப்பட்டேன். இது டிசம்பர் மாதம் என்பதால் கட்டாயம் பேசியே ஆக வேண்டும் எனத் தீர்மானித்தேன். நான்தான் சத்திரக்காரன். சரி, நேரா விஷயத்திற்கு வந்துவிடுகிறேன். அகுஸ்துராயனால் குடிமதிப்பு எழுதும்படி கட்டளை பிறந்த நாட்கள் அது. எல்லோரும் அவரவர் ஊர்களில் குடிமதிப்பு எழுத இடம்பெயர்ந்து கொண்டிருந்தனர். யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊரிலே எனக்கு ஒரு சத்திரம் உண்டு. அதுவரை மிகவும் மோசமாக இருந்த என் தொழில், அப்போதுதான் சூடுபிடிக்க ஆரம்பித்தது. எல்லா அறைகளும் நிரம்பியதால் நான் நிம்மதி பெருமூச்சுடன் நாற்காலியில் அமர்ந்திருந்தேன். கதவு தட்டப்பட்டது. கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத் என்னும் ஊரிலிருந்து யோசேப்பு என்னும் தச்சன் கர்ப்பவதியான தன் மனைவி மரியாளுடன் மிகவும் யோசித்து, அஞ்சி வந்து சத்திரத்தில் இடம் இருக்கிறதா எனக் கேட்டார். இடம் ஒன்றுமில்லை என நான் சொன்னதும் இருவரும் சோர்ந்து போயினர். ஆனால் மிகவும் எளிமையான அவர்களை பார்த்தவுடன் நிச்சயம் உதவ வேண்டும் என்ற எண்ணம் என் உள்ளத்தில் உதித்தது.
“என் வீட்டின் பின்புறமுள்ள கொட்டிலில் தங்குகிறீர்களா?” என தயக்கத்துடன் கேட்டபோது மிகுந்த மனநிறைவோடு ஏற்றுக்கொண்டனர். மரியாளுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையை சுற்றியிருந்ததோ கந்தை துணி. ஆனால் முகப்பிரகாசமும் அழகும் பார்ப்பவர் கண்ணையும், மனதையும் பறிப்பதாய் இருந்தது. அதன்பின் நடந்த அதிசயத்தை என்னால் நம்பவே முடியவில்லை. அது என்னவென்றால், பிள்ளை பிறந்த செய்தியை பெற்றோர் யாருக்கும் சொல்லாமலேயே பிள்ளையை பார்க்க மேய்ப்பர்கள் மிகுந்த சந்தோஷத்தோடு வந்தார்கள். அவர்களிடம் விசாரித்தால் அவர்கள் தேவதூதர்கள் அறிவித்தார்கள் என்றனர். அதன் பின்னர் ஒட்டகங்கள் எங்கள் வீட்டு வாசலில் வந்து நின்றது. யாரென பார்த்தால் கிழக்கிலிருந்து வானத்தை ஆராய்ச்சி செய்யும் வானசாஸ்திரிகள் யூதருக்கு ராஜாவை பார்க்க வந்தோம் என்றனர். என்னது ராஜாவா என்று நான் வாய்பிளந்து நின்றபோது நட்சத்திரம் வழிகாட்டியது என்றனர். பின் தாங்கள் கொண்டு வந்த பொன், வெள்ளைப் போளம், தூபவர்க்கத்தை ராஜாவுக்கு பரிசளித்து சென்றனர். நான் சத்திரத்தில் இடம் இல்லை எனக் கூறியதோடு விடாமல், இந்த சிறிய இடத்தையாவது கொடுத்தோமே என அகமகிழ்ந்தேன். இன்றைக்கும் இயேசு கிறிஸ்து பிறந்த இடமாகிய என் வீட்டு கொட்டகையை பார்க்க லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். யாரும் விரும்பாத இடம்தான், புறக்கணிக்கப்பட்ட இடம்தான், சற்று துர்வாசனை வரும் இடம்தான், ஆனாலும் இயேசு பிறக்க இடம் கொடுத்ததால், அது எவ்வளவு விலையேறப்பெற்றதாய் மாறியது பாருங்கள்.
ஒருவேளை உங்களுடைய இருதயமும் என் வீட்டு கொட்டகைப் போல இருக்கலாம். ஆனாலும் இயேசு உங்கள் உள்ளத்தில் வர இடம்கொடுப்பீர்களானால், உங்கள் வாழ்வும் ஆசீர்வாதமாய் பிறர் பார்த்து ஆச்சரியப்படும் விதமாய் மாறும் என்பது உறுதி.
- Mrs. அன்புஜோதி ஸ்டாலின்
ஜெபக்குறிப்பு:
மீடியா ஊழியத்தின் மூலம் சந்திக்கப்படும் ஆத்துமாக்கள் தேவனுக்கென்று வைராக்கியமாய் வாழ ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250