By Village Missionary Movement
Saturday, 04-Dec-2021இன்றைய தியானம்(Tamil) 04-12-2021
அன்பு புரட்சி
“தேவன்.... இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.” – யோவான் 3:16
அழகான அந்திமாலை நேரம். அன்னம் நீந்தி செல்வதுபோல் ஒரு படகு சவாரி! அதில் ராஜா, அவருடைய ஒரே மகன் ராஜகுமாரன், மந்திரி, இன்னும் சில சேவகர்களும் ஒன்றாக நதியின் அழகை ரசித்தவாறு பயணம் செய்தனர். குளிர்ந்த காற்று அவர்களது தலைமயிரை வருட, ராஜாவுக்கும், மந்திரிக்கும் இவ்விதமான உரையாடல் துவங்கியது. மந்திரியிடம் ராஜா கேட்டார், “பாவிகளை இரட்சிக்க ஏன் கடவுள் பூமிக்கு வரவேண்டும், தம்முடைய தூதர்களில் யாரையாவது ஒருவரை அனுப்ப வேண்டியதுதானே?” மந்திரி அமைதியாக யோசித்துக் கொண்டு வந்தார். ராஜாவுக்கோ மனதிற்குள் ஒரே சிரிப்பு. மந்திரியிடம் இதற்கு பதில் இல்லை என்று. இது எதையுமே காதில் வாங்காமல் படகில் இருந்தவாறு தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்தான் ராஜகுமாரன். திடீரென நதியில் விழுந்து விட்டான். ராஜா பதைபதைத்தவராய் மறுநொடியே நதியில் குதித்து தன் மகனை காப்பாற்றிவிட்டார். நனைந்த ஆடைகளுடன் இருந்த ராஜாவைப் பார்த்து மந்திரி கேட்டார், “மகாகனம் பொருந்திய ராஜாவே! தாங்கள் ஏன் குதித்தீர்கள்? ராஜகுமாரனைக் காப்பாற்ற உங்கள் சேவகர்களில் யாருக்காவது உத்தரவு பிறப்பித்திருக்கலாமே” என்றார். ராஜா கோபம் கொண்டவராய், “தண்ணீரில் தத்தளித்தது என் மகன் அல்லவா?” என்றார். “ஆம், ராஜாவே இதுதான் இறைமைந்தன் விண்ணுலகில் இருந்து மண்ணுலகம் வர காரணமாயிற்று” என்றார்.
ஆம், தேவன் நம்மேல் வைத்த அன்புதான் எத்தனை! பாவிகளாகிய நம்மை மீட்க, நாம் நித்திய ஜீவனை பெற்றுக்கொள்ளும்படியாக தன்னையே பலியாக கொடுத்துவிட்டார். நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத் துணிவான். நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணினாரே!
அன்பானவரே! அன்பின் வெளிப்பாடே கிறிஸ்துமஸ். அதுமாத்திரமல்ல, அவர் பூமிக்கு வந்ததுதான் உலக சரித்திரத்தையே கி.மு. (கிறிஸ்துவுக்கு முன்) கி.பி. (கிறிஸ்துவுக்கு பின்) என்று இரண்டாகப் பிரித்தது. அவர் பிறப்பினால் விண்ணுலகம் மட்டுமல்ல மண்ணுலகமும் மகிழ்ந்தது. பூமிக்கு சமாதானமும் மனிதர்மேல் பிரியமும் உண்டானது. ஆம், தேவ அன்பை உணர்வோம், அந்த அன்பினால் நிரம்பியவர்களாக வாழ்வோம். அதை பிறருக்கு அறிவிப்போம்.
- Mrs. மஞ்சுளா
ஜெபக்குறிப்பு:
சிறுவர் இல்ல பிள்ளைகள் படிப்பு மற்றும் சகல காரியங்களிலும் நல்லொழுக்கமுள்ளவர்களாய் வளர ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250