By Village Missionary Movement
Thursday, 02-Dec-2021இன்றைய தியானம்(Tamil) 02-12-2021
அழைப்பைக் குறித்த அச்சமா?
“...தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள்.” – மத்தேயு 2:11
யோசேப்பு, மரியாள் தம்பதியினருக்கு கொடுக்கப்பட்டது ஒரு ஊழிய அழைப்பு! மேசியாவை இந்த உலகத்திலே வளர்த்து ஆளாக்கக்கூடிய ஒரு ஊழியம்! இத்தம்பதியினர் ஏழ்மையான பின்னணி உள்ளவர்கள். இந்நிலையில் ஓரிடத்திலிருந்து தொழில் செய்து குடும்பத்தைக் காப்பாற்றுவதே கடினம். ஆனால் யோசேப்பு ஒரே இடத்தில் தன் தச்சுத்தொழிலை செய்யமுடியாதபடி அரசாங்க கணக்கெடுப்பிற்காக பெத்லகேம் செல்ல வேண்டியிருந்தது. ஏரோதின் கண்களுக்குத் தப்பிக்க எகிப்திற்குப் போகவேண்டிய சூழ்நிலை, மீண்டும் இஸ்ரவேல் தேசத்திற்கு வந்து நாசரேத்திலே குடிபெயர வேண்டிய நிலை உண்டாகப்போகிறது. இப்படியெல்லாம் நடக்கப்போவதை அவர் அறியாதிருந்தாலும் ஒரு பொறுப்புள்ள கணவராக யோசேப்பு அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்று யோசித்துக் கவலைப்பட்டிருக்கலாம். மரியாளும் கூட தேவைகளைக் குறித்த காரியங்களை மனதில் வைத்து சிந்தனை பண்ணியிருப்பாள்.
இன்றும் ஊழிய அழைப்பைப் பெற்ற அநேகர், ஊழியம் செய்தால் என் தேவை சந்திக்கப்படுமா? என்று பணத்தைக் குறித்து சிந்தித்து கவலைப்பட்டு ஊழியத்திற்கு வர தாமதிக்கின்றனர். அநேகருக்கு ஊழியம் செய்ய வாஞ்சையிருக்கிறது. ஆத்துமாக்களைக் குறித்த பாரமிருக்கிறது. ஆனால் அவர்கள் முழுநேர ஊழியத்திற்கு வரமுடியாதபடி முக்கிய தடையாயிருப்பது எதிர்காலத்தில் என் தேவை சந்திக்கப்படுமா? என்ற கேள்வியே!
ஆனால் இந்த தம்பதியினர் இக்கேள்வியைக் கேட்டு, கற்பனையான எதிர்கால பயங்களை மனத்திரையில் வரவைத்து இந்த ஊழிய அழைப்பை ஏற்க மறுக்கவில்லை. உமது சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று தங்களை ஊழியத்திற்கு அர்ப்பணித்தனர். நடந்தது என்ன? பிள்ளை பிறந்த சில வாரங்களில், எங்கோ இருந்த சாஸ்திரிகள் அடங்கிய கூட்டம் ஒன்று வருகிறது. இவர்கள் யார் என்று ஆச்சரியப்பட, அவர்கள் வந்து பிள்ளையை வணங்குகிறார்கள். அங்கு கொஞ்சமும் எதிர்பாராத காரியம் நடக்கிறது. அவர்கள் தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து பொன், வெள்ளி, தூபவர்க்கத்தை கொடுத்தார்கள் என்று பார்க்கிறோம். பொக்கிஷம் என்று சொல்லும்போது தங்கம் மட்டுமல்ல சொல்லப்பட்ட மீதி இரண்டுமே விலையேறப்பெற்றவை என்று அறிந்துகொள்ளலாம். அல்லேலூயா! பிறந்திருக்கிற இயேசுகிறிஸ்துவை வளர்ப்பதற்கு, எகிப்திற்குப் போக பிரயாணச் செலவு, எகிப்திலே வாடகைக்கு பிடிக்கும் வீட்டிற்கு அட்வான்ஸ் கொடுக்க மற்றும் அங்கே தச்சுத்தொழில் தொடங்க முதலீட்டு பணம் என்று சொல்லி அனைத்துத் தேவைகளையும் சந்திக்கும்படி தேவன் பரிசுகளை இந்த குடும்பத்திற்கு கொடுக்கிறார்.
ஊழிய அழைப்பைப் பெற்ற அன்பரே! என் தேவை சந்திக்கப்படுமா என்று இன்னும் ஊழியத்திற்கு வர தயங்கிக்கொண்டிருக்கிறீர்களோ? விசுவாசத்தோடு முதலடியை எடுத்து வையுங்கள். உங்கள் வாழ்வின் தேவைகளை சந்திப்பதற்கு தம்முடைய பொக்கிஷத்தை கொடுத்து, ஒரு குறைவுமின்றி தேவன் நடத்துவார்.
- J. சந்தோஷ்
ஜெபக்குறிப்பு:
நமது சிறுவர் இல்ல பிள்ளைகளுக்கு இந்த குளிர்காலத்தில் எந்த சரீர பலவீனமும் ஏற்படாமல் இருக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250