By Village Missionary Movement
Tuesday, 30-Nov-2021இன்றைய தியானம்(Tamil) 30-11-2021
சரணடை
“…காட்டுப் புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப் பாருங்கள்; அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை.” – மத்தேயு 6:28
முன்னொரு காலத்தில் சந்நியாசி ஒருவர் தனக்கு எண்ணெய் வேண்டுமென்று ஒரு ஒலிவ மரக்கன்றை நட்டார். கர்த்தாவே இதன் மெல்லிய வேர்கள் பிடித்து இம்மரம் பெரிதாக வளர இதற்கு மழை தேவை. ஆகவே சிறு தூறலை அனுப்பும் என்று ஜெபித்தார். தேவன் மழையைப் பெய்யச் செய்தார். ஆண்டவரே இம்மரத்திற்கு சூரிய வெளிச்சம் வேண்டும். சூரியனை அனுப்பும் என்றார். மழையில் நனைந்த மேகங்களுடன் சூரியன் பிரகாசித்தது. மறுபடியும் மரத்தின் பாகங்கள் உறுதிப்பட கடும் பனி வேண்டும் என்று ஜெபித்தார். அப்போது அந்த சின்ன மரத்தில் பனித்துளிகள் மின்னின. ஆனால் அந்தச் செடி சாயங்காலத்தில் வாடிப்போயிற்று. பாவம் சந்நியாசி.
அந்தச் சந்நியாசி தன்னைப்போல வேறொரு சந்நியாசியிடம் சென்று நடந்ததைச் சொன்னார். அதைக் கேட்ட சந்நியாசி, “நானும் ஒரு சின்ன மரம் நட்டினேன். இதோ அது செழித்து வளர்ந்துள்ளது. நான் என் மரத்தை தேவனிடம் நம்பிக்கையாய் விட்டுவிட்டேன். அந்த மரத்தை உண்டாக்கினவர் அதற்கு இன்னது தேவை என்பதை என்னை விட அவர் நன்றாய் அறிவார். நான் ஒரு நிபந்தனையையும் வைக்கவில்லை, அதைப் பற்றி யோசிக்கவும் இல்லை. தேவனே அதற்குரிய புயலோ, வெயிலோ, காற்றோ, மழையோ எது தேவையோ நீரே பாரும் என்று ஜெபித்தேன். இனி நீ செடி வளர்த்தாலும் நீ தேவனிடம் ஒப்புவித்து விடு. அவர் பார்த்துக் கொள்வார்” என்றார். சார்லஸ் E. கவ்மேன் அம்மையார் எழுதிய இந்த சம்பவம் என்னை வெகுவாய் மாற்றியது.
காட்டுப்புஷ்பங்களும் அப்படித்தான் வளர்கின்றன. மழையிலும் பனியிலும் வளர்கின்றன. இரவின் இருட்டிலும் பகலில் வெயிலிலும் வளர்கின்றன. அவைகளை கவனிக்க யாருமில்லை என்றாலும் தேவன் அவைகளையும் உடுத்துவிக்கிறார். வசனம் சொல்கிறது, “காட்டுப்புஷ்பங்களை கவனித்துப் பாருங்கள். அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை. ஆனாலும் யாரும் அவற்றைப்போல உடுத்தியதில்லை”
ஆம், அன்பானவர்களே, காட்டுப்புஷ்பத்தை உடுத்துவிக்கிற தேவன் இன்றைக்கு நம்மையும் உடுத்துவிப்பார். கவலைப்படாதேயுங்கள். நம் வாழ்க்கையை ஆண்டவரிடம் ஒப்புவிப்போம். காட்டு மலரை விட அவர் உங்களை அதிகமாய் நேசிக்கிறார். பனியில் பூக்கும் இனிய மலரிலும் அவர் உன்னை நேசிக்கிறார். நம் பாவங்களை மன்னித்து பரிசுத்தமாய் வாழ்வதற்கு அவரிடம் நம்மை அர்ப்பணிப்போம். நம் தேவை எதுவாய் இருந்தாலும் 1 பேதுரு 5:7 -ல் கூறப்பட்டபடி அவர் நம்மை விசாரிப்பார். நம்முடைய வாழ்க்கையை ஆண்டவரிடம் ஒப்புக்கொடுப்போம், அவரையே நம்புவோம். அவருக்காய் வாழ்வோம். அவர் வருகையை எதிர்நோக்குவோம். ஆமென்.
- Bro. அருள்
ஜெபக்குறிப்பு:
350 கிராமங்களில் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகள் நடத்த பணத்தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250