By Village Missionary Movement
Monday, 29-Nov-2021இன்றைய தியானம்(Tamil) 29-11-2021
இருதயக்காவல்
“எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்.” – நீதிமொழிகள் 4:23
இரண்டு விவசாய நண்பர்கள் இருந்தனர். அவர்களிடம் தரிசாய்ப் போன நிலங்கள் இருந்தன. அந்த வருடத்தில் நல்ல மழை பெய்ததால் இருவரும் தங்களது நிலத்தில் ஏதாவது விதைத்தால் நல்ல விளைச்சல் கிடைக்கும் என பேசிக்கொண்டனர். பின் தக்காளி பயிரிடலாம் என யோசித்து வேலையைத் தொடங்கினர். விதைத்தனர், செடி சற்று வளர்ந்தது. முதல் விவசாயி தன் தோட்டத்தைச் சுற்றிலும் வேலி அடைத்தான். பின் செடியின் நடுவில் வளரும் களைகளைப் பறித்துப் போட்டான். ஒவ்வொரு நாளும் கவனமாய் நீர்ப்பாய்ச்சினான். இரண்டாம் விவசாயி, “இவனுக்கு வேலையில்லை, இதற்கெல்லாம் வேலிபோட்டு களை பிடுங்க வேண்டுமா? தண்ணீர் பாய்ச்சினால் போதாதா” என்று கிண்டலாக கூறுவான். கனி தரும் காலம் வந்தது. இரண்டு தோட்டத்திலும் காய்கள் காய்த்து குலுங்கின.
தினமும் மாலை இருவரும் தோட்டத்தை பார்வையிடும்போது இரண்டாம் விவசாயி, “நான் வேலி அடைக்கவில்லை, களை பிடுங்கவில்லை, ஆனாலும் என்னுடைய தோட்டமும் நன்றாகத்தானே காய்த்திருக்கின்றது. நீ வேலி அடைத்து உன் பணத்தையும், களை பிடுங்கி உன் நேரத்தையும் வீணாக்கிவிட்டாய். நீ வெட்டி வேலை செய்திருக்கிறாய்” என்று கேலி செய்தான். தக்காளிகளைப் பறித்து நாளை காலையில் சந்தையில் போய் போட்டு விடலாம் என்று பேசினர். சாக்குகளோடு அதிகாலமே தோட்டத்திற்கு வந்தனர். வேலி அடைக்காத தோட்டத்திலுள்ள காய்கள் பறிக்கப்பட்டு தோட்டமே வெறுமையாக கிடந்தது. யாரோ நெடுநாளாய் தோட்டத்தை கவனித்து, பறிக்க சரியான நேரம் பார்த்து வேலியும் இல்லாததால் சிரமமின்றி பறித்துவிட்டனர். இதைக் கண்டவுடன் இரண்டாம் விவசாயிக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. துக்கத்தோடு வீடு திரும்பி சென்றான்.
ஆம், வேலியடைக்காத நிலம் பாதுகாப்பற்றது போல, நம்முடைய இருதயத்தைக் காத்துக்கொள்ளாவிட்டால் நம் ஆத்துமாவுக்கு அது பெரிய கேடு. எல்லாக்காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள் என்று வேதம் கூறுகிறது. அப்படியானால் இருதயத்தை எப்படி காத்துக்கொள்வது? வேத வசனம் என்னும் வேலியால் பாதுகாக்க வேண்டும். நாம் கவனக்குறைவாய் இருக்கும் நேரத்தில் பிசாசானவன் களைகளை விதைத்து இருதயத்தை கெடுக்க ரெடியாக இருப்பான். சோதனையிலிருந்து ஜெயிக்க, துணிகர பாவத்திலிருந்து நம்மை தப்புவிக்க வேதவசனம் என்னும் வேலி அவசியம். காத்துக்கொண்ட இருதயத்தில் ஜீவத்தண்ணீர் புறப்பட்டு ஊறும். அது நமக்கு மாத்திரமல்ல, அநேகருக்கு ஆசீர்வாதமாயிருக்கும்.
- D. ஆல்வின் ஜேக்கப்
ஜெபக்குறிப்பு:
கிறிஸ்துமஸ் காலங்களில் நடைபெறும் ஊழியங்கள் மூலம் அநேகர் இரட்சிக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250