By Village Missionary Movement
Saturday, 27-Nov-2021இன்றைய தியானம்(Tamil) 27-11-2021
பாடுகளும் பரவசம்தானே
“...பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி தேவனைத் துதித்துப் பாடினார்கள்;…” - அப். 16:25
“இந்திய இரத்தப் பாதங்களின் அப்போஸ்தலன்” என்று சொல்லக்கூடிய சாது சுந்தர் சிங் அவர்கள் நேபாள நாட்டின் கிராமத்தில் ஜனங்கள் மத்தியில் நற்செய்தி சொல்லிக் கொண்டிருந்தார். அந்த நாட்டில் சுவிசேஷத்திற்குத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இவரை சிறைச்சாலையில் அடைத்தனர். சிறைச்சாலையிலும் கைதிகளுக்கு கிறிஸ்துவின் அன்பைச் சொல்வதிலேயே தன்னுடைய நேரத்தைப் போக்கினார். இதனால் இவரை அடித்து அவருடைய ஆடைகளைக் கிழித்து, அருகில் இருந்த மாட்டுக்கொட்டகையில் இவரது கைகளையும் கால்களையும் ஒரு கம்பத்தில் கட்டி வைத்தனர். அவர் மீது அட்டைப் பூச்சிகளை விடும்போது அவைகள் அவருடைய இரத்தத்தை உறிஞ்சியது. பலம் குன்றிப் போனார். என்றாலும், அந்த அதிகமான வேதனையிலும் தேவனிடம் ஜெபிக்கவும் துதிக்கவும் ஆரம்பித்தார். இதைப் பார்த்த அதிகாரிகள் அவருக்கு புத்தி சுயாதீனம் சரியில்லையென்று விடுதலை செய்தனர். இவ்வளவு பலவீனமாக இருந்த போதிலும் பக்கத்து ஊருக்குச் சென்று தெருவில் நின்று நற்செய்தி சொல்லத் தொடங்கினார். இந்த சிறைச்சாலையின் அனுபவம் பற்றிக் கூறும்போது, “கிறிஸ்துவின் பிரசன்னம் அச்சிறைச்சாலையில் என்னோடு கூட இருந்தபடியால், அது எனக்கு ஆசீர்வாதமான மோட்சமாகவே தெரிந்தது” என்று கூறினார்.
பிலிப்பி பட்டணத்தில் பவுலும் சீலாவும் கிறிஸ்துவின் நற்செய்தியைக் கூறும்போது, அங்குள்ள ரோமர்கள், “ஏற்றுக்கொள்ளக் கூடாத தகாத முறைகளை போதிக்கிறார்கள்” என்று அவர்களை அடித்து ஆடைகளைக் கிழித்து அவர்களை பத்திரமாய் காக்கும்படி சிறைச்சாலை காவலாளியிடம் ஒப்படைத்தனர். அவன் அவர்களை பத்திரமாய் உட்காவலறையில் ஒரு தொழுவத்தில் மாட்டி வைத்தான். வேதனையும், சரீர பலவீனமும் இருந்த போதிலும் அவர்கள் தேவனை நோக்கி ஜெபம் பண்ணவும், துதிக்கவும் செய்தார்கள். தேவ வல்லமையானது சிறைச்சாலையின் அஸ்திபாரங்களை அசைத்தது. அவர்களைக் கட்டி வைத்திருந்த கட்டுகள் எல்லாம் கழன்று போனது. இவர்களைக் காணாமல் சிறைச்சாலைக் காவலாளி தற்கொலை செய்து கொள்ளப் பார்த்தான். உடனே பவுல் அவனைக் காப்பாற்றி காவலாளியையும் அவன் குடும்பத்தாரையும் இரட்சிப்பின் வழியில் நடத்தினான்.
அன்பு நண்பரே! என்னால் இந்தப் பாடுகளைத் தாங்க முடியவில்லை என்று எண்ணுகிறாயோ, இந்த பாரத்தைச் சகிக்க முடியவில்லையே என்று கலங்குகிறாயோ? கவலை வேண்டாம். இனி வரும் மகிமைக்கு இந்த சாதாரண பாடுகள் ஒப்பானதல்ல. நீ படுகிற கஷ்டங்களினால் அநேகர் ஆண்டவரின் அன்பை ருசிபார்க்க முடியும். உன்னையும் சில பாடுகளுக்குப் பின்பாக தன்னுடைய சாட்சியாக தேவன் நிலைநிறுத்துவார். சிலுவைக்கு உன்னை விட்டுக்கொடுத்து வருங்கால மகிமையை எதிர்பார்க்கும்போது பாடுகளும் பரவசமாகத்தான் தோன்றும்.
- T. மனோஜ்குமார்
ஜெபக்குறிப்பு:
அலுவலகத்தில் பயன்படுத்தப்படும் லேப்டாப், கம்ப்யூட்டர்கள் பழுதின்றி நன்றாக பயன்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250