By Village Missionary Movement
Friday, 26-Nov-2021இன்றைய தியானம்(Tamil) 26-11-2021
ஆயத்தமா?
“...இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரைவீரருமாயிருந்தவரே...” – 2 இராஜாக்கள் 13:14
ஊழியர் ஒருவர் திருச்சபையில் “என் காரியமாய் யார் போவது?” என்ற தலைப்பில் ஊழியத்திற்கு அழைக்கும் ஆண்டவரின் சத்தத்திற்கு யார் வருகிறீர்கள் என்ற கேள்வியுடன் தன்னுடைய பிரசங்கத்தை முடித்து ஜெபம் செய்தார். தன் கண்களைத் திறந்து தேவனுடைய திருப்பணிக்கு வருகிறவர்கள் உங்கள் கரத்தை உயர்த்துங்கள் என்று சொன்னார். இதோ நான் வருகிறேன் என்று கூட்டத்தில் ஒரு சத்தம் கேட்டது. வாலிபன் ஒருவன் கண்ணீருடன் எழுந்து நின்று தேவனுடைய காரியமாய் என்னை அனுப்புங்கள், நான் போகிறேன் என்றான். இதில் வேதனைப்பட வேண்டிய காரியம் எதுவென்றால், ஆயிரக்கணக்கான மக்கள் இருந்த சபையில், ஒரு வாலிபன்தான் தன்னை தேவனுடைய சேவைக்கு அர்ப்பணித்தான். பின்பு அவனை ஆதிவாசி மக்கள் மத்தியில் திருப்பணி செய்வதற்கு அனுப்பினார்கள். அவன் மூலமாய் தேவன் திரளான ஆத்துமாக்களை இரட்சித்து, அநேக அற்புத அடையாளங்களை செய்து அந்த மக்கள் மத்தியில் பெரிய எழுப்புதலைத் தந்தார்.
நம்முடைய விலைமதிப்பில்லாத பொக்கிஷமாகிய வேதத்தில் எலிசாவும் கூட தேவன் தன்னை அழைக்கிறார் என்று எலியா மூலம் அறிந்ததும், ஆண்டவரின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்து தன் குடும்பத்தையெல்லாம் விட்டு எலியாவின் பின்னே சென்று, அவன் கைகளுக்கு தண்ணீர் ஊற்றும் ஒரு சிறிய ஊழியத்தைத்தான் செய்தான். ஆனால் தேவன் அவனுடைய கீழ்ப்படிதலை மறந்து போகவேயில்லை. ஒருநாள் வந்தது, எலியாவின் ஸ்தானத்தையும் அவனுக்குரிய வல்லமையையும் இரட்டிப்பாய் எலிசாவுக்கு அளித்து இஸ்ரவேல் மக்களை நல்ல பாதையில் ஜெயமாய் இழுத்துச் செல்லும் குதிரை வீரனாக தேவனால் பயன்படுத்தப்பட்டான்.
அன்பானவர்களே! அந்த வாலிபனுடைய கீழ்ப்படிதல் தேவனுடைய தேவையை பூர்த்தி செய்தது. இதனால் ஒரு கூட்ட ஜனங்கள் இரட்சிக்கப்பட்டனர். எலிசாவின் கீழ்ப்படிதல், ஒரு நாட்டு மக்களை சிறந்த வழியில் நடத்திச் சென்றது. உங்களைப் பற்றி என்ன? உங்களிடம் தேவன் தன்னுடைய எழுப்புதல் திட்டத்தைக் குறித்து பேசிக்கொண்டே தான் இருக்கிறார். நாம் வேதத்தைப் படிக்கும்போதும், தேவ மனிதர்களின் செய்தியைக் கேட்கும்போதும் உணர்த்திக் கொண்டுதான் இருக்கிறார். ஆனால் நாமோ தேவன் நமது சொந்த தேவைகளை நிறைவேற்றினால் போதும் என்று அவருடைய தேவையைக் கண்டு கொள்ளாமல் விட்டு விடுகிறோம். இது முறையல்ல, நாம் அவரிடம் கேட்கும் காரியங்கள் இந்த உலகத்தோடு அழிந்து போகும். ஆனால் அவர் எதிர்பார்க்கும் தேவையோ என்றைக்கும் அழியாத ஆத்துமாக்கள்தான். எனவே அவருடைய தேவையை முக்கியப்படுத்தி அதைப் பூர்த்தி செய்வோம்.
- Bro. ஜெபஸ் கோயில்ராஜ்
ஜெபக்குறிப்பு:
கிறிஸ்துமஸ் காலங்களில் நடைபெறும் ஊழியங்களில் தேவகரம் உடனிருக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250