By Village Missionary Movement
Friday, 19-Nov-2021இன்றைய தியானம்(Tamil) 19-11-2021
காணொளிக் காட்சி
“...நீர் என்னைக் காண்கிற தேவன்.” – ஆதி. 16:13
குற்றங்கள் பெருகிவிட்ட இன்றைய சூழ்நிலையில் கண்காணிப்பு கேமரா மிக அவசியமானதொன்றாகிவிட்டது. மக்கள் அதிகம் கூடும் விமானம், ரயில், பேருந்து நிலையங்கள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள், தெருக்கள், சாலைகள் ஏன் வீடுகளிலும் கூட கண்காணிப்புக் கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றது. நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவும் நம் ஒவ்வொருவரையும் கண்காணிக்கிற தேவனாய் இருக்கிறார். ஒருமுறை மக்கள் காணிக்கைப் பெட்டியில் காணிக்கை போடுவதை கவனிக்கிறார். ஐசுவரியவான்களைக் காட்டிலும் ஒரு ஏழை விதவைப் பெண் போட்ட காணிக்கையைக் கண்டு, அவளின் உற்சாகம், உண்மை, மனவிருப்பம் எல்லாவற்றையும் அறிந்து அவள் தேவனுக்கென்று கொடுத்த காணிக்கையைக் குறித்துப் பாராட்டுகிறார்.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஆபிரகாமின் மறுமனையாட்டியாகிய ஆகார் தன் நாச்சியாராகிய சாராளால் கொடுமைப்படுத்தப்பட்ட போது வனாந்திரத்திற்கு ஓடிப்போனான். கர்ப்பவதியான ஆகாரின் அங்கலாய்ப்பைக் கேட்டு, அவள் கண்ணீரைக் கண்டு அவளுடன் பேசுகிறார். தன்னுடன் பேசின கர்த்தருக்கு “நீர் என்னைக் காண்கிற தேவன்” என பெயரிட்டு அவர் சொற்கேட்டு கீழ்ப்படிந்து தன் நாச்சியாரண்டை சென்றாள்.
நான் P.U.C. முடித்து T.E.L.C விடுதியில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, 1978-ம் ஆண்டு மனையியல் (Home science) கல்லூரியில் பயிலும் வாய்ப்பைத் தேவன் தந்தார். முதல் வருடத்தில் கல்லூரி முதல்வர் ஒருநாள் அசெம்பிளியில் என்னை முன்னால் அழைத்து எனக்காக எல்லோரையும் கைதட்ட சொன்னார். 3வது மாடியிலிருக்கும் அவர்கள் நான் அவ்வப்போது கல்லூரி வளாகத்தில் கிடக்கும் குப்பை, பேப்பர் எதுவானாலும் அதை குப்பைக் கூடையில் போடுவதை அடிக்கடி கவனித்திருக்கிறார். மேலும் விடுதியில் தங்கிப் படித்துக் கொண்டிருந்த என் சில செய்கைகளையும் குறிப்பிட்டு என்னைப் பாராட்டினார். அன்று இரவு என் டைரியில் இவ்வாறு எழுதினேன். “என் தேவனே என்னை நீர் ஒவ்வொரு விநாடியும் கண்காணித்துக் கொண்டேயிருக்கிறீர். என் செயல்கள் மனிதர்களை மட்டுமல்ல, உம்மையும் பிரியப்படுத்துவதாகவே அமையட்டும், உதவி செய்யும்.” இன்னும் முயற்சிக்கிறேன், சில சமயங்களில் முடியாமல் தேவனிடம் மன்னிப்புக்கோரி என்னை சரி செய்ய பிரயாசப்படுகிறேன்.
ஆம், எனக்கன்பானவர்களே! நம்மை கண்காணிக்கும் கேமரா கர்த்தரின் கண்களே! உமக்குப் பிரியமானதை செய்ய எனக்குப் போதித்தருளும். நீரே என் தேவன். உம்முடைய நல்ல ஆவி என்னை செவ்வையான பாதையில் நடத்துவாராக. ஆமென்!
- Mrs. சரோஜா மோகன்தாஸ்
ஜெபக்குறிப்பு:
மஹாராஷ்டிரா மற்றும் மேற்குவங்கம் பகுதியில் ஊழியம் செய்ய ஒத்த தரிசனமுள்ள ஊழியர்கள் எழும்ப, 7000 ஊழியர்கள் மூலம் 1 இலட்சம் கிராமங்கள் சந்திக்கப்படும் திட்டத்திற்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250