By Village Missionary Movement
Thursday, 18-Nov-2021இன்றைய தியானம்(Tamil) 18-11-2021
செவிடனின் ஜெயம்
“...உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ;…” – நியா. 6:14
அது ஒரு மழைக்காலம். எங்கும் தண்ணீர் குட்டையாய் தேங்கியிருந்தது. ஒரு ஆழமான குட்டையில் நிறைய தவளைகள் இருந்தன. அந்த தவளைகள் தங்களுக்குள் ஒரு போட்டி வைத்தன. இந்த குட்டையிலிருந்து யார் முதலாவது மேலே ஏறுவது என்று! போட்டி ஆரம்பமானது. தவளைகள் மேலே ஏறின. ஆனால் சிறிது தூரம் ஏறிய உடன் சறுக்கி கீழே விழுந்தன. மீண்டும் முயற்சித்து சறுக்கி விழுந்தன. சுற்றி இருந்து வேடிக்கை பார்த்த தவளைகள் இதன் மேல் ஏற உங்களில் யாராலும் முடியாது என்று கேலி பேசின. இந்த சத்தம் முயற்சித்துக் கொண்டிருந்த தவளைகளை செயல்படவிடவில்லை. ஆனால் ஒரே ஒரு தவளை மட்டும் மிக நிதானமாக ஏறி மேலே வந்து போட்டியில் ஜெயித்தது. இது மட்டும் எப்படி ஜெயித்தது என்று அதனிடம் கேட்டபோது, அதற்கு காது கேட்காது என்று சொல்லியது. ஆம், மற்றவர்கள் கிண்டல் செய்த வார்த்தைகளை கவனித்தபோது சோர்ந்து போன தவளைகள் தோல்வியடைந்தன. “வென்றவருக்கும், தோற்றவருக்கும் வரலாற்றில் இடமுண்டு. ஆனால் விமர்சித்தவர்களுக்கு ஒன்றும் கிடையாது.” ஆம், ஜெயிக்கிறோமா, தோற்கிறோமா என்பது முக்கியமில்லை. முயற்சி செய்கிறோமா? என்பதே முக்கியம். இன்று முயற்சிக்கும் முன்பே அநேகருடைய வார்த்தைகளை கேட்டு முடியாது என்று நினைத்து முயற்சி செய்வதை விட்டு விடுகிறோம்.
வேதத்தில் சாமுவேலால் அபிஷேகம் பண்ணப்பட்டு ஆட்சி செய்ய தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர் சவுல். சமஸ்த ஜனங்களும் இவனா நம்மை இரட்சிக்க போகிறான் என்று ஏளனம் செய்தனர், அசட்டை பண்ணினர். அவனோ காதுகேளாதவன் போல இருந்தான் (1சாமு. 10:27). இதை வாசிக்கும் அன்பர்களே, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? நாம் ஒன்றை செய்ய ஆரம்பித்த உடன் நம்மை கேலி செய்ய கிண்டல் பண்ண மட்டம் தட்ட அநேகர் வருவார்கள். பாராட்டு என்பது யாரிடமிருந்தும் வராது. ஊழியமாக இருக்கலாம், வேலை ஸ்தலமாக இருக்கலாம், குடும்பத்திற்குள் கூட இப்படி காணப்படலாம். நீயெல்லாம் செய்து முடிக்க முடியாது, வேற வேலையை பாரு என்று சொல்லலாம். “அவனோ காது கேளாதவன் போல் இருந்தான்” இந்த வார்த்தை உங்களுக்குத்தான். நானே பயந்து போய் இதை ஆரம்பிக்கிறேன். இவர்கள் வேறு இதை சொல்லி கூடக்கொஞ்சம் செயல்படவிடாமல் பண்ணுகிறார்கள் என்று புலம்பும் அன்பு சகோதரனே-சகோதரியே! கலங்காதே, கர்த்தர் உன்னோடே இருக்கிறார். யார் என்ன சொன்னாலும் காதில் வாங்காமல் முழு மூச்சாய் செயல்படுங்கள். வெற்றி நிச்சயம்!
உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா என்று கர்த்தர் சொல்கிறார். கர்த்தர் நம்மோடு இருந்து நம்மை வழிநடத்தி ஜெயம் கொடுப்பார். அநேகருக்கு ஆசீர்வாதமாய் நம்மை உயர்த்துவார். அல்லேலூயா!
- Mrs. தவமணி வைரவேல்
ஜெபக்குறிப்பு:
சிறுவர் இல்ல பிள்ளைகளுக்கு தங்குமிடத்தில் தேவையான போர்வை, பாய் வாங்கி கொடுக்கும் நபர்கள் எழும்ப ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250